நான் எழுதிய கவித் துளிகள்:
முத்தம்:
அன்பே!
உன் உதட்டு வரியின்
பிழைப் போக்க
என் உதட்டு வரி கொண்டு
பொருத்தி
நான் திருத்தி எழுதும்
கவியே முத்தம்...
முத்தத்திலே சத்தமில்லாமல்
இருவரின் பிழைகளும்
திருத்தப் படுகின்றன...
இறைவன் செய்த தவறை
இதழ் மூடியே திருத்துவோம்...
ஆசை:
அன்பே!
நான்
களத்து மேட்டிலோ
இல்லையெனில்
உன் கழுத்து மேட்டிலோ
தான் சாக வேண்டும்...
காதல்:
அன்பே!
என்றும் இளமையோடு
இருக்கும் இமைமுடிகளைப்
போலவே நம் காதலும்
உயிருள்ளவரை
நரையில்லாமல்
உணர்வுகளின்
கரை காண வேண்டும்...
உறவுகள்:
உலகம் எனும் புத்தகத்தின்
பிரிக்க முடியாத பக்கங்களில்
உணர்வுகளால் பிரித்து
எழுதப் படுகிறது உறவுகள்...
நட்பு:
காலம் கடந்து நிற்கும்
மாற்றத்தைப் போலவே
ஆலம் விழுதெனவே
அருகி நிற்கும்
மரத்தை தாங்கியே
விருட்சமாய் நிழல் தந்து
உரத்தை உள்ளமர்த்தி
அரும்பாகி கனியாவது
நட்பாகும்...
திருமணம்:
உருவம் இரண்டாகி
உள்ளம் ஒன்றாகவே
பருவம் திரண்டதற்கு
பலர்கூடி நடத்தும்
ஒருவகை ஒப்பந்தமே
திருமணமாகும்...
முதல் இரவு:
இளமையில் பூத்த
இனிமையை இருவர்கூடி
இரவினில் விடியும்வரை
தனிமையில் ஒருவர்மாறி
ஒருவர் தேடி பருவத்தின்
கேள்விக்கு விடை காண்பதே
முதல் இரவாகும்...
முதல் இரவு:
யாமம் தலைப் பிடிக்க நடுச்
சாமம் கால் பிடித்து நடக்கும்
போராட்டத்திலே பரிமாறும்
ஓராட்டத்திலே விடியும் போது
நெற்றியின் விளிம்பிலே
வெற்றியைத் தேடுவது
முதல் இரவாகும்...
பாசம்:
கதவில்லா உள்ளத்தின்
வாசலிலே காலம்
வரைகின்ற அற்புதக்
கோலமே பாசமாகும்...
அவன் வரைந்தக் கோலத்தை
அழிக்க முடியாதெனினும்
தாண்டிச் செல்லலாம்...
இறைவன்
எங்கெங்கோ புள்ளிகளை
வைக்கிறான்...
கோடுகளை உணர்வுகளைக்
கொண்டே வரைகின்றான்...
உணர்வுகள்:
உள்ளம் ஒளிந்து கொண்டு
உடல்கூட்டில் உலவுகின்ற
உருவமில்லாமல்
உயிரோடு சேர்ந்து நடத்தும்
உன்னத நாடகமே
உணர்வுகளாகும்...
உணர்வுகள்:
புத்திக்கும் உள்ளத்தின்
யுக்திக்கும் நடக்கும்
ஒருவிதப் போராட்டமே
உணர்வுகளாகும்...
கனவுகள்:
கண்ணாடியின் பின்னால்
நிகழ்வதைப் போலவே
கண்களுக்கு பின்னால்
நிகழும் அற்புதமே
கனவுகளாகும்...
கனவுகள்:
உள்ளம் ஒளித்த ஆசைகளை
உணர்வுகள் உறக்கத்தின் போது
தேடுவதே கனவுகளாகும்...
நினைவுகள்:
உள்ளம் பழகிய
உணர்வுகளை ஒத்திகைப்
பார்க்கும் நிலையே
நினைவுகளாகும்...
நினைவுகள்:
உள்ளம் அசைபோடும்
உன்னத உணர்வுகளின்
ஈர்ப்பு விசையில்
காலம் குவிக்கின்ற
மாற்றமே நினைவுகளாகும்...
பசி:
வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும்
இடையே நடக்கின்ற உணவுப்
போராட்டமே பசியாகும்...
உணவுக்கும் உதட்டுக்கும்
இடையே நடக்கின்ற உணர்வுப்
போராட்டமே பசியாகும்...
வலி:
பிறந்தது முதல் மரணம் வரை
உணர்வுகளின் எதிரொலியே வலியாகும்...
உயிருள்ள நிலையையும்
உணர்வுகளின் அலையையும்
முடிச்சுப் போடுவது
வலியாகும்...
உணர்வுகளின் தடுமாற்றத்திலே
உடல் கொள்ளும் ஒருமாற்றமே
வலியாகும்...
கண்ணீர்:
கண்களின் வழியே இறங்கும்
காட்சியின் ஓலமே கண்ணீராகும்...
காலத்தின் அவல நிலையைக்
கழுவுவதற்கு இறைவன் அளித்த
நன்கொடையே கண்ணீராகும்...
உள்ளம் வடிக்கின்ற துன்பமும்
ஊற்றடுப்பது கண்களின் கண்ணீராகும்...
இன்பம்:
நுகர்ச்சிக்கு கிடைக்கும்
புகழ்ச்சியே இன்பமாகும்...
புகழ்ச்சியை அழைக்கும்
நுகர்ச்சியே இன்பமாகும்...
உள்ளம் உணர்வுகளை இழுத்து
உள்ளுக்குள்ளே விரிவது தான்
இன்பமாகும்...
பெண்மை:
மெய்யுண்ட உணர்வுகளிலும் - அகப்
பையுண்ட உதிரத்திலும்
பெண்மைதான் எச்சமாகும்...
பருவத்தின் மேன்மையளக்க
உடல்வழியே உணர்வுகளும்
உருவத்தின் துணைகொண்டு
மடல்வழியே எழுதும் உதிரமே
பெண்மையாகும்...
தாய்மை:
பெண்மைக்கு பெருமிதம் கொடுக்க
உண்மை எய்தும் ஒரு வரம் தான்
தாய்மையாகும்...
பெண்மையாலே எழுதப் படுகின்ற
உறவுகளின் இறையாண்மையே
தாய்மையாகும்...
பெண்மையின் உணர்வுகளுக்கு
உறவு அளிக்கும் ஒரு வடிவமே
தாய்மையாகும்...
No comments:
Post a Comment