வளர வளர கண்டு களிப்பதற்கும்
போற்றுவதற்கும் அழகாய் இருப்பது
தனங்கள் மட்டுமே - அவைத்
தளர தளர முற்றியதையும்
வற்றியதையும் பார்த்து வருந்துவது
மனங்கள் மட்டுமே!
(தனங்கள் - செல்வங்கள் மற்றும் பெண்ணின் மார்பகங்களைக் குறிக்கும்)
விழாச் சுமைதனை
விருப்பம்கொள்ள சுமக்கும்
பருவப் பூவின்
மூடா மடலை
மூடுவது யாரடியோ?
(பூ என்பது உலகம் மற்றும் பூவையும் குறிக்கும்)
பூப்பெய்திய விரிசலும்
மூப்பெய்தினாலும் நெருங்குமோ?
நாலு கால் பந்தலிட்டு
நடுவிலே யாகக் குண்டமிட்டு
நூலிடைப் போகத் தாளமிட்டு
நோக்கத்தோடு கட்டுகின்றான்...
(திருமணம் மற்றும் அதன் பின்னர் நிகழும் உறவையும் குறிக்கும்)
வெடிக்காத பருத்தியிலே
ஆடை நெய்ய முடியுமா?
பக்குவமாய் வளர்ந்த தேனடையும்
பயனடைய ஓர்நாள் தானுடையும்...
போகக் குடை இருந்தும் மேகம்
பொங்கியெழுந்து தூவியது மழை...
ஆகத் தடை இருந்தும் தேகம்
ஏறி விழுந்து மேவியதன் பிழை...
ருதுவான பூமியின் தலைமேலே அதி
ரூபங்கள் நனைந்திட குடங்குடமாய்
பொதுவாகச் சல்லடம் மேல் கொட்டுவதைப்
போல் கொட்டுகின்றது மழை...
அந்தரங்கள் வரை நீரானது மாய
சுந்தரங்கள் காட்டியதோடு பூமியுடன்
போராடியே பூசிய வண்ணங்கள் கரைந்திட
காரோடிய பருவத்தின் மழை...
(மழைப் பருவத்தையும் மங்கை திரண்ட நாளின் பருவத்தையும் குறிக்கும்)
மண்ணிலே துளி விழுந்தால்
மறுபடியும் மழைமேகம் ஏற்குமோ?
நீந்தத் தெரியாதவர்கள்
குடம் பற்றி நீந்தியே
சுழிதனில் சிக்காமல்
கொள்ளிடக் கரை காண்பாரா?
கொண்டை முடியத் தெரியாதவள்
குதித்து ஆடியத் தாண்டவத்தில்
தண்டை ஓடியத் தன் கால்கள்
தவறி விடியுமுன் விழுந்தாளாம்...
உடை வாழும் உணர்வுகளின்
இடை வாழும் கலையுமதன்
நடை வாழும் நாட்டியத்தின்
விடை வாழும் நடுச்சங்கமோ?
வியர்வைக்கு முன்னால் சிறு விளக்கு தேவையா?
வியர்வைக்கு பின்னால் அதன் விளக்கம் தேவையா?
பெர்முடா முக்கோணத்தில் விழுந்தவர் யாரேனும்
பெருமை கொள்ள பிழைத்தது உண்டா?
மர்ம தேசத்தில் கடன் கழித்தாலும் தன் பிறவிக்
கர்மம் தொலைத்திட வழியுமுண்டோ?
மத்தெடுத்து கடைந்தால்
மசியாதக் கீரையுமுண்டோ?
உடைந்த மதுக்குடத்திலே
ஒழுகாத மதுவுண்டோ?
ஆறாப் புண்ணை
ஆற்றிவிடும் களிம்புண்டோ?
உடன்பட்ட விருந்துக்கு
கடன்படவும் மருந்துண்டோ?
அழையாத நிகழ்வுக்குப்
பிழையானால் பொறுப்பாகுமோ?
நனையாத மீனுக்கு
நடுக்கம் உண்டோ?
மெய் எழுதிய உருவம்
மை எழுதிய புருவம்
பொய் எழுதிய தர்மமென
போனதொரு கர்மம்...
No comments:
Post a Comment