Tuesday, June 3, 2014

தலைவியின் துடிப்பு



வண்டது தேன் குடிக்கும் போதே இதழ்களால்

கண்டதை தான் மூடியிருக்கலாம் - தலைவியவள்

மறந்து மயக்கத்தில் ஆழ்ந்த போது வண்டது

பறந்து போனதைக் கண்டு துடிக்கின்றாள்...




தொட்டது உடல்தனிலே துலங்கும் முன்னே கைவிடப்

பட்டது மடல்தனிலே விளங்கும் பின்னே - கைதொடச்

சுட்டது உணர்வுக்குள் கலங்கும் - முன்னே மெய்தனைத்

தொட்டது நினைவுக்கு விளங்காமல் துடிக்கும்...




தலைவனை நினைத்து உதிரும் கண்ணீர் துளிகள் எத்தனையோ?

தலையணைக்குள்ளே காணாமல் போகின்றது அத்தனையும்...

இலைமறை காய் போலே எதிர்பட்ட நினைவுகள் எத்தனையோ?

வலைக்குள்ளே சிக்கிய மீனைபோலே துடிக்கின்றது அத்தனையும்...



ஆடைகூட பாரமாகித் தூரமாகிய வண்ணங்கள் எத்தனையோ?

தேடையிலே உணர்வுகளில் ஒளிந்து கரைகின்றது அத்தனையும்...

கூடையிலே கொட்டிய பூக்களில் விடுபட்டது எத்தனையோ?

ஓடையிலே தொடுக்காமல் கை விடப்பட்டது அத்தனையும்...



காலையிலே கதிராய் உதிக்கின்ற ஆவல்கள் எத்தனையோ?

மாலையிலே நிலவாய் வளர்ந்து தேய்கின்றது அத்தனையும்...

சோலையிலே ஒளியில் ஊடுருவுகின்ற நிழல்கள் எத்தனையோ?

பாலையிலே கானலாய் ஒளியில் மறைகின்றது அத்தனையும்...



மேகமது மழை பொழியாமல் கலைகின்றது எத்தனையோ?

தாகமதைத் தணிக்காமல் தொலைகின்றது அத்தனையும்...

மோகமது உணர்வாய் விரிந்து விரும்பியது எத்தனையோ?

தேகமதைத் தீண்டாமல் பிரிந்து சுருங்கியது அத்தனையும்...



தடையகற்றி தவிப்பகற்றிய பொழுதுகள் எத்தனையோ?

இடைமெலிந்த இடைவெளிக்குள் விழுந்தது அத்தனையும்...

மடை திறந்த வெள்ளம் போலே பெருகியது எத்தனையோ?

கொடை கொடுத்த உடல்தனிலே உருகியது அத்தனையும்...



Thursday, April 17, 2014

மையலாய் நானும் உதிப்பேனா...?



ஜயத்தில் தொடங்குது ஆண்டும்

ஐயங்கள் தீர்ந்திடவே தூண்டும்

மையத்தைத் தொடர்ந்து ஈண்டும்

வையத்தில் வாழ்ந்திட வேண்டும்...

 
 
 
படிக்கின்ற காலம் தான் பொற்காலம் - கடந்த பின்

நடிக்கின்ற காலம் தான் தற்காலம் - உணர்வுகளைப்

பிடிக்கின்ற காலம் தான் இக்காலம் - உள்ளந்தனில்

வடிக்கின்ற காலம் தான் எக்காலம்...?


 
விதைக்கின்ற காலம் தான் பொற்காலம் - நடந்த பின்

கதைக்கின்ற காலம் தான் தற்காலம் - வந்தததைக் கண்டு

பதைக்கின்ற காலம் தான் இக்காலம் - வேண்டாததைப்

புதைக்கின்ற காலம் தான் எக்காலம்...?


 

உழைக்கின்ற காலம் தான் பொற்காலம் - விருப்பங்களில்

திழைக்கின்ற காலம் தான் தற்காலம் - வார்த்தைகளைக்

குழைக்கின்ற காலம் தான் இக்காலம் - திருப்பங்களை

அழைக்கின்ற காலம் தான் எக்காலம்...?



குறைக்கின்ற காலம் தான் பொற்காலம் - இருப்பதை

மறைக்கின்ற காலம் தான் தற்காலம் - பொருட்களை

நிறைக்கின்ற காலம் தான் இக்காலம் - கருணையை

இறைக்கின்ற காலம் தான் எக்காலம்...?



நகைக்கின்ற காலம் தான் பொற்காலம் - உள்ளதை

வகைக்கின்ற காலம் தான் தற்காலம் - மயக்கத்தில்

திகைக்கின்ற காலம் தான் இக்காலம் - சோம்பலைப்

பகைக்கின்ற காலம் தான் எக்காலம்...?

 
 
எண்ணங்களை வடிப்பேனா...?

எண்ணியதில் துடிப்பேனா...?

வண்ணங்களைப் பிடிப்பேனா....?

வாழ்வுதனில் படிப்பேனா...?


 
விரும்பியதைப் படிப்பேனா....?

விரும்பாததில் நடிப்பேனா...?

அரும்பியதை வடிப்பேனா...?

நெருங்கியதைப் பிடிப்பேனா...?



மையப் புள்ளியில் விதிப்பேனா...?

இயல் இசையை மதிப்பேனா...?

ஐய வருடந்தனை துதிப்பேனா...?

மையலாய் நானும் உதிப்பேனா...?



 
ஜய வருடத்தின் இனிய உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள்...



சுயமாய் எடுத்த முடிவுகளில் முயன்று வெற்றி காணவும்

நயமாய் வார்த்தைகளைப் பயின்றதைப் பற்றிப் பேணவும்

வயமாய் தொடுத்த பணிகளை விட்டு விடாமல் தொடரவே

ஜயமாய் வருடமும் சித்திரையில் அடியெடுத்து வருகின்றது...