Saturday, December 19, 2015

இனிய திருக்கார்த்திகைத் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

உருவமற்ற நெருப்பை ஓர் அகலில் கொண்டு வந்து

உருவத்தைக் கொடுக்கும் தீபமெனும் ஒளிபொருந்திய

திருக்கார்த்திகைத் திருநாளை தீபத் திருநாளாக்கிய

பெருமையை நிலைநாட்டிட விளக்கேற்றிடுவோம்...



எண்ணெய் வார்த்து திரிகளிட்ட அகல் விளக்குகளை

திண்ணை எங்கும் வரிசையாக அடுக்கி காண்பவர்

கண்ணை மயக்கும் தீபமாக ஒவ்வோர் வீட்டிலும்

விண்ணை வெல்ல ஒளியாக ஏற்றிடுவோமாக...



உரசலில் உண்டாவது தான் நெருப்பாகும் - அன்பு

உரசலில் உண்டாவது தான் விருப்பாகும் - ஒளி

வருவதில் மறைவது தான் இருளாகும் - அதைத்

தருவதில் நிறைவது இறை அருளாகும்...



அடிமுடியைத் தொடாதவாறு உருவமற்ற ஒளியாகப்

பிடிபடாவண்ணம் தீப்பிழம்பாக மாறிய சிவனார் தான்

அருவமாய் அருள் வழங்கிய நாளே கார்த்திகைத் தீபத்

திருநாளாகும் அந்நாளில் மகா தீபத்தை வணங்குவோம்...



பாபங்கள் மறைந்திடவும் நெஞ்சில் எழும் கோப -

தாபங்கள் குறைந்திடவும் எஞ்சிய முன்னோர்கள்

சாபங்கள் அழிந்திடவும் பஞ்சில் எரியும் அகல்

தீபங்கள் ஏற்றிடவும் திருக்கார்த்திகைத் திருநாளில்...



நதிவெள்ளம் பெருகும் போது கடல்வெள்ளம் தோய்ந்துவிடும்

கடல்வெள்ளம் உருகும் போது மழைவெள்ளம் சேர்ந்துவரும்

மழைவெள்ளம் பெருகும் போது மரங்கள் கூட சாய்ந்துவிடும்

ஒளிவெள்ளம் பெருகும் போது மழைவெள்ளம் ஓய்ந்துவிடும்



வேலை போல் எரிகின்ற அகல் தீபத்தையும் அக்னி

ஜ்வாலை போல் எரிகின்ற மகா தீபத்தையும் தரிசித்து

காலை பொழுதில் எரிகின்ற செங்கதிரை உள்வாங்கி

மாலை பொழுதில் தெரிகின்ற நிலவை போலே மக்கள்

ஒளிமயமான வாழ்வினை அழகிய சிலை செதுக்கும்

உளிமயமான காலத்தை கடந்திட வாழ்த்துகிறேன்...





அனைவருக்கும்

இனிய

திருக்கார்த்திகைத்

தீபத்திருநாள்

வாழ்த்துக்கள்...

...நோய்க்கு மருந்தானாள்...

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைத்

தன் நோய்க்கு தானே மருந்து"

என்கின்ற வள்ளுவனின் குரலிலே

காதல் நோய்க்கு மருந்து என்னவென்று

அழகாக எடுத்துரைக்கிறார்...




உடல்பட்ட நோய்க்கு மருந்துண்டு பார்வைக்கு

உடன்பட்ட நோய்க்கு மருந்தவளே.

இதனைத் தழுவிய கவிதையே "நோய்க்கு மருந்தானாள்"...

அனைவரும் படித்து ரசிக்கவும்...




...நோய்க்கு மருந்தானாள்...


அவள் தந்த நோய்க்கு

அவள் தான் மருந்து -

அதையே தான் வள்ளுவனும்

அனுபவித்து முன்மொழிந்தான்...



கண் கொண்ட காதல் நோய்க்கு

பெண் கொண்டாள் மருந்து -


விண் கொண்ட வெண்ணிலவுக்கு

விடிவெள்ளியெனவே இருந்து...



பாரா மனதையும் கண்கலந்து

சேரா நோய்க்கும் அவள் தான் மருந்து

தீராக் காதலுக்கும் அவளுடைய

பேரால் வந்தது அன்பெனும் விருந்து



இதழ்களில் ஊறித் ததும்பும் என்

இதயத்துக்கு ஏற்ற அவளே மருந்து

அதரத்தையே பருகும் முத்தமெனும்

மதுரத்தை மோகங்கொள்ள அருந்து



இறையைக் காணத் துடிக்கும் என்

நிறையை பேணும் அவள் தான் மருந்து

இரையாகும் காதல் ச(ந்த)ர்ப்பத்தினை

இடைவிடாமல் துரத்தும் நானே பருந்து



குறைவில்லா அழகைக் கொண்டே

கொடுக்கின்றாள் எனக்கும் விருந்து

மறைவில்லா மனதைத் திறந்து

மயங்கவே தருகின்றாள் மருந்து...



கரையில்லா நதியைப் போலவே

கடல்காண ஓடுகின்றாள் புரண்டு

அரைநில்லா மேகலை தான் நழுவ

ஆடல்காணத் தேடுகின்றாள் திரண்டு...



சீரசைய சிறந்து விளங்குகின்ற இடையின்

தேரசைய நடமாடினாள் தன்னை மறந்து

நேரசைய திறம்படக் குலுங்கும் அழகின்

மாரசைய படம்காட்டினாள் மெல்ல திறந்து



ஆலையில் அகப்பட்ட கரும்பைப் போல

சேலையில் புகப்பட்ட எறும்பானது அவளது

மாலையில் அடைப்பட்ட அரும்பைப் போல

காலைவரை சிறைபட்டு துரும்பானது...



பூநிறையும் காட்டிற்குள் பூத்து விரிந்த

தாமரைக் கூட்டிற்குள் காற்றுக் கூடத்

தானுழையா வண்ணம் சேர்த்தணைத்து

மானுட வாழ்வை மகத்துவம் ஆக்கினாள்...



பாலாடை போன்ற பருவத்து மேனியில்

மேலாடையென அள்ளிக் கொடுத்தாள் விருந்து

நூலாடை கூட நழுவியதை மறந்தவளும்

தேனோடையில் ஈந்தாள் தேவாமிர்த மருந்து...



உரசலில் தொடங்கிய விருந்தும் உணர்வின்

நெரிசலில் அடங்கிய பின்னர் இடைவழியின்

அரசிலைத் தடவிய மருந்தும் புணர்ந்தபின்

பரிசலும் சிக்கிய சுழி போலங்கே உழன்றது...



அருந்தாச் சங்கிலே மதுவூரிய பின்னரே அதை

மருந்தாக்கி காதல் நோய்க்குட்பட்ட மனதுக்கு

வருந்தா உணர்வையும் மெய்யதிலே கலந்தின்ப

விருந்தாக அளித்தாள் விடைபெற்றது நோயும்...



அடைகாக்கின்ற கோழியைப் போலவே "அந்த"

விடைகாக்கின்ற ஊழியத்தைக் கண்டு அவளது

இடைத்தோன்றும் ஆழியில் நானும் அலைமீறும்

தடையேறிச் செல்லுகின்ற பாய்மரப் படகாவேன்...



நோய்க் கொண்ட உடலுக்கு மருந்தானாள் - மயங்கும்

பாய்க் கொண்ட உணர்வுக்கு விருந்தானாள் - முயங்கும்

வாய்க் கொண்ட பெண்மைக்கு மருந்தானேன் -வியந்துப்

போய்க் கண்ட அண்மைக்கு விருந்தானேன்...

இருளை விலக்கியதன் அருளை விளக்குவதே தீபாவளி

அரக்கனாகிய பௌமனை பூமாதேவி அழித்த திருநாளே

நரக சதுர்த்தி எனும் தீபாவளி திருநாளாகும் - துலாமில்

சூரிய சந்திரர்கள் கூடும் ஐப்பசியில் கதிரொளி குன்றுவதால்

நேரிய தீபங்களேற்றி வழிபடுவதும் தீபாவளி திருநாளாகும்...



பார்வதி தேவி தவமிருந்து தன்னுடலில் பரமசிவனை

நேர்பாதியாக்கிய பொன்னாளே தீபாவளி திருநாளாகும்

திருப்பாற்கடலை கடைந்த போது தன்வந்திரி பெருமான்

மருத்துவத்துக்கென்றே தோன்றியதும் தீபாவளியன்றே...



எண்ணையில் எழில்மிகும் மகாலக்ஷ்மியும்

கண்ணைக்காக்கும் அரப்பிலே கலைவாணியும்

குளிப்பதற்கான தண்ணீரிலே கங்காதேவியும்

ஒளிந்திருந்து தீபாவளியன்று ஆசீர்வதிக்கும்

சந்தனத்திலே பூமாதேவியும் மங்களமாய்

வந்தமரும் குங்குமத்தில் கௌரியும் உடுத்தும்

புத்தாடையிலே மகாவிஷ்ணுவும் வீற்றிருந்து

பூத்த மலர்களிலே மோகினியும் படைக்கும்

பண்டங்களிலே அமிர்தாம்பிகையும் ஒளிரும்

அண்டத்திலே தீபமாகிய பரமாத்மாவும் சேர்ந்து

நம்மை அருள்கூர்ந்து தீபாவளி திருநாளன்று

நன்மை பல பெற வைப்பதுவே சிறப்பாகும்...



சிறப்புமிகும் தீபாவளித் திருநாளை உறவினருடன்

பொறுப்புமிகும் உணர்வோடு கொண்டாடி மகிழ்ந்து

போற்றுவதோடு அனைவருடைய அகவிருள் நீங்கி

ஏற்றமிகு வாழ்வமைந்திடவும் வாழ்த்துகிறேன்...



ஆடைகளிலே பலவுண்டு புத்தாடை

அணிகின்ற நாளென்று சிலவுண்டு - அணியும்

ஆசையிலே பலவகையுண்டு அடையும்

ஆனந்தத்திலும் சிலவகையுண்டு - தீபாவளி



திருநாளிலே அணிவதன் சிறப்பு கண்டு அகத்

திருள் போக்கிடும் வழி கண்டு வாழ்விலே சில

திருப்பம் கொண்டு வானவில் வண்ணம் போல்

விருப்பம் கொண்டு வெடித்திடும் பட்டாசுகளும்



மத்தாப்பும் சிறுவர்கள் மயங்கிடும் பூத்திரிகளும்

முத்தாய்ப்பாய் கொளுத்தி மகிழ்ந்து கவனத்துடன்

இத்திருநாளைக் கொண்டாடிடவும் இல்லமெங்கும்

இருள்விலகி தீப ஒளி பரவிடவும் வாழ்த்துகிறேன்...



கலகம் பிறந்திடவே அரக்கனைப் படைத்தான் - அவனால்

கலக்கம் நிறைந்திடவே அதற்கோர் வழியைப் படைத்தான்

நரகம் அழிந்திடவே அவதாரம் எடுத்தான் - அம்பெய்தி

அரக்கனை ஒழித்திடவே அவ(ன்)தாரம் தொடுத்தாள்...



தேவியவள் தான் தவமிருந்து பரமனவன் உடலில்

ஆவியவள் சரி பாதியாக வேண்டுமென ஓர் நாளில்

சக்தியவள் விரும்பியதால் 'அர்த்தநாரி' எனும் ஓர்

யுக்திக்குள் சிவசக்தி ரூபமாகியது இந்நாளில் தான்...



ஒருவர் மகிழ்வதற்கே துறவு வைத்தான் - கூடி

இருவர் மகிழ்வதற்கே உறவு வைத்தான் - ஏற்றும்

தீபம் ஒளிர்வதற்கே இரவு வைத்தான் - அதற்கென

தீபாவளித் திருநாளை வரவு(ம்) வைத்தான்...



உடலும் மகிழ்ந்திடவே உணர்வை வைத்தான் - நாடும்

உள்ளம் மகிழ்ந்திடவே உயிரை வைத்தான் - ஆடும்

கடலும் மகிழ்ந்திடவே அலையை வைத்தான் - தேடும்

கண்கள் மகிழ்ந்திடவே அலைய வைத்தான்...



உறவும் செழித்திடவே பாசம் வைத்தான் - அன்பு

உலகம் செழித்திடவே நேசம் வைத்தான் - சிலையின்

உருவம் செழித்திடவே உளியை வைத்தான் - இருள்

உலகம் செழித்திடவே தீபாவளியை வைத்தான்...



முன்னோர்கள் மொழிந்து வைத்த திருநாளை

பின்னோர்கள் பெரிதுவக்க வைக்கும் பெருநாளை

அன்னார்கள் கூடி அனுபவித்ததன் வழிவழியாய்

இன்னார்கள் எடுத்து கொண்டதே தீபாவளியாகும்...



வேண்டுவன யாவும் நிறைவேறிடவும் மனதில்

வேண்டாதவை யாவும் கரையேறிடவும் இன்பகடலில்

நீந்துவன யாவும் நிறைவாகிடவும் இப்பூவுலகில்

நீத்தார்கடன் யாவும் குறைவாகிடவும் வாழ்த்துகிறேன்...



புறவிருள் போக்கிடும் ஒளியும் கண்டு

அகவிருள் போக்கிடும் வழியும் உண்டு

ஆழ்நிலை தியான வழியில் சென்று

சூழ்நிலை யாவும் உலகில் வென்று

வாழ்ந்திட வாழ்த்துகிறேன்...



இவ்வுடலுக்கு இருவிழிகள்

இரண்டிற்கும் இடைவெளியில்

திவ்வியமாய் இருள்விலக்கத்

திரண்டுநிற்கும் தீப ஒளி...


அவ்வொளி கொண்டே

அஞ்ஞானம் அழிந்திடவே

மேவிய ஒளியாலே

மெஞ்ஞானம் வளர்ந்திடவே

வாழ்த்துகிறேன்...



இத்தீபாவளி திருநாளில் இல்லமெங்கும்

புத்தாடைப் போலே புதுப்பொலிவு பூண்டு

மத்தாப்பு போலே மங்களவாய் மலர்ந்து

தித்திக்கும் பண்டங்களை பகுத்துண்டு



மாற்றம் காணும் மனிதரின் சூழ்நிலைத்

தோற்றம் கண்டு மனதளவில் பலமுறை

ஏற்றம் கொண்டு உழைப்பிலே நேர்மையின்

சீற்றம் கொண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்...



மேடும் பள்ளமும் உள்ளவரை இறைவனை

நாடும் உள்ளமும் உள்ளவரை இத்திருநாள்

வீடும் வாசலும் உள்ளவரை தீபாவளியை

தேடும் ஆசையில் செல்லும்வரை தொடரும்...



திரளாத மலருக்குள் ஏந்தும் தேனைப் போலே

மிரளாத கடலுக்குள் நீந்தும் மீனைப் போலே

பிறழாத மனதில் தோன்றும் ஆசையும் மெல்ல

பிறருக்கு உதவிட அரும்பட்டும் விரும்பட்டும்...



இரண்டே வரியில் சொல்லப் போனால்:


இருளை விலக்கியதன் அருளை விளக்குவதே தீபாவளி

அருளை விளக்கியதன் பொருளை வழங்குவதே தீபாவளி





அனைவருக்கும் 

என்

இனிய

தீபாவளித் திருநாள்

வாழ்த்துக்கள்...

Saturday, August 1, 2015

பெண் நோக்குப் பாவனை

அயனங்கள் இரண்டுள்ளதைப் போலே அவள் கொண்ட

நயனங்கள் திரண்டங்கே அரங்கத்தில் கார்கூந்தலோடு

வினயங்கள் புரியும் அழகும் மதுவோடு கரைந்து நா

நனையும் வண்ணத்தில் நடனமாடினாள் இளமங்கை...



இளமங்கை அவள் ஆடும் நடனத்திலே மயங்குகின்ற

உளமங்கே சுற்றித் தான் வருகிறதே தவிர ஏங்குகின்ற

நலமெங்கே போனதென்றும் அறியாமல் மதுவருந்தும்

குலமங்கே கூடியங்கு நரைதிரை விலக்கும் நள்ளிரவு...



வெள்ளை வெயில் போலவே அரங்கமும் திகழுமதில்

கொள்ளை மயில் அழகியவள் ஆடுகையில் மார்துகிலில்

பிறைநிலவும் வந்துதிக்கக் கண்ட அல்லிவிழிகள் தாம்

குறை துயில் கொண்டதையறியாமல் பூத்து குலுங்கின...



மலையை மறைக்கின்ற முகில் போலே அவளது மா


மலையை மறைக்கின்ற துகிலதனையும் மீறி எழுகின்ற

அலையைப் போலவே விழுந்து எழும் அழகைத் தான்

கலையென்பதா இல்லை அவள் நடன நிலையென்பதா?



நோக்கினாள் என்பதா - கூடும் இன்பத்தை மாரிலேற்றித்

தேக்கினாள் என்பதா- நாடும் மனதைத் தேரிலேற்றித்

தாக்கினாள் என்பதா - பூவை தன்னையே நாரிலேற்றி

ஆக்கினாள் மாலையாக அவையில் நள்ளிரவுக்கு சூட..



காட்டினாள் அவள் அழகை நடனத்தில் செழிக்கும் வரை

கூட்டினாள் மேலும் ஆடலில் அந்த ரதியும் பழிக்கும் வரை

ஏட்டினால் எழுதாத பேரழகை இந்த மதியும் மயங்கும் பயன்

பாட்டினால் அவ்வரங்கை ஆனந்த கூடமாகவே மாற்றினாள்...



இலையசையும் தென்றலென நள்ளிரவில் அந்த நடனக்

கலையசையும் மன்றிலவள் வெள்ளி நிலவெனவே தன்

தலையசையும் விதியும் மீறி கொள்ளை அழகின் ஈடில்லா

நிலையசையும் நதியைத் தேடும் கடலைக் காண வந்தாள்...



ஆடையில் அவளழகு ஒளிந்துள்ளதா இல்லை விழியசைக்கும்

ஜாடையில் அவளழகு ஒளிந்துள்ளதா இல்லை வழியும் மதனரச

மேடையில் அவளழகு ஒளிந்துள்ளதா இல்லை மதுவும் உட்புகும்

ஓடையில் அவளழகு ஒளிந்துள்ளதா எல்லைக் கடந்த இரவிலே...



சூதகம் கொண்டவளும் ஆடும் போது மதுவுக்கிணை மதுரமாக

மோதகம் போலிலங்கும் மேனியெழில் குலுங்கும் நடையின்

பாதகம் கண்டவுடன் அறிந்திடாத ஆனந்த மயக்கத்தில் ஆழ்ந்து

மாதகம் புகுந்திட யாதகமும் துடித்திடச் சாதகமாகும் இரவிலே...



கோடிட்ட இடத்தைப் போலே நிரம்பாத அழகையெல்லாம் அடிக்

கோடிட்டு நடனத்தால் நிரம்பும் வண்ணம் ஆசை எண்ணம் எலாம்

நாடிட்ட தடாகத்தைத் ஆடிய பூக்களில் அரைகுறை போதையில்

தேடிட்டு போய் விழுந்ததைப் போலே தேன் குடித்திட விழுந்தது....



தெரியும் மலர்க்காட்டில் தேடியலைந்து அமர்ந்து வேதிவினை

புரியும் மதுவோடு நீரைக்கலந்து உடலோடு காமமது கிளர்ந்து

விரியும் மனக்கூட்டில் எழுந்த எண்ணங்களை எல்லாம் அங்கே

திரியும் மாதுவோடு நினைவாய்க் கலக்கும் அந்த நள்ளிரவு...



பள்ளி கொண்டவளும் பலகலைப் பயில அரங்கத்திலே ஆடத்

துள்ளி கொண்டவளும் இடவலம் பிடித்து இசைநயம் படிக்க

அள்ளி முடித்த ஆடையும் அங்கங்கே ஒளித்த அழகையும்

கள்ளி அவளுடலின் செழித்த அழகையும் காட்டும் நள்ளிரவு...



நிறைத் தள்ளாடும் துலாபாரம் போலவே மாதவள் நெஞ்சம்

குறைத் தள்ளாடும் அழகும் குறிவைத்து மதுவருந்திய அவ்

அறைத் தள்ளாடும் வண்ணம் பொறிவைத்து பிடிக்கின்ற

முறைத் தள்ளாடும் நோக்கத்தை மெருகூட்டும் நள்ளிரவு...



ஆடற் கலையில் மாதவளும் எல்லைத் தாண்டுகின்றாள்

ஆடிய கரங்களுக்கு சூட்டிட வளையை வேண்டுகின்றாள்

கூடற் கலையில் மாரன் கை வில்லை வளைக்கின்றாள்

கூவியென்னை மாலை சூட்டிட அவளே அழைக்கின்றாள்...



கொதிக்கும் மது வெப்பைக் குளிர்விக்கவே ஆடுகின்றாள்

விதிக்கும் பாடலுக்கு ஏற்பவளும் பொருள் தேடுகின்றாள்

மதிக்கும் பேரைப் பார்த்து தன் பூவுடலைக் காட்டுகின்றாள்

நதிக்குள் துடுப்பிழந்த படகெனவே இடுப்பை ஆட்டுகின்றாள்...



ஆடுவதும் அவள் ஆடி ஆடி பொருள் தேடுவதும் தேடியதை

நாடுவதும் அவள் நாடி நாடி இருண்ட வெளிச்சத்தில் மனதால்

வாடுவதும் அவள் வாடி வாடி திரண்ட அழகினுக்கே பொருட்கை

கூடுவதும் அவள் ஆடிப் பாடி ஆனந்தக் களிப்பை ஊட்டுகின்றாள்...



மானாட மயிலாட மங்கையவள் பொங்கி எழும் அழகின்

ஊனாட உயிரின் உணர்வாட மறைந்திருக்கும் உள்ளழகும்

தானாட தளிர் கையாடக் கொங்கையும் குதித்தாட இடையாட

ஏனாட என்றால் நடைபோடும் இளமை இரவுடன் சேர்ந்தாட...



முன்னழகு முனைந்தாடக் கவியளக்கும் பேரழகு நங்கையின்

பின்னழகு புனைந்தாடப் புவியளக்கும் பாதமும் நடைபோடத்

தன்னழகு நினைந்தாடக் காமரதமென அசைவதைக் காண்போர்

என்னழகு என்றே யாவரும் இணைந்தாடாத் துடிக்கும் நள்ளிரவு...



வட்டமிடும் அழகெனவே விளங்கும் வதனமும் கீழிறங்கத்

திட்டமிடும் திரண்டப் பேரழகு தனங்களும் இடைஇறங்கி

விட்டமிடும் புள்ளியைச் சுற்றிய விழிகளும் வலம் வரத்

தட்டமிடும் ஓரண்டப் பார்வையை விளக்கும் நள்ளிரவு...



பிரம்மன் படைத்த அழகையெல்லாம் கடைவிரித்து

பிறன்மனைக் காணக் கூட்டியவள் நடைபிரித்துத்

திறம்பட நடனத்தின் வழி காட்டியவள் இடைதிரித்து

முறம் போல் அசைய மெல்ல சாமரம் வீசுகின்றாள்...



ஆடும் போதவளின் தனம் முந்தியதோ பார்க்கும் கண்கள்

தேடும் தாதவளின் வதனம் முந்தியதோ அசையும் கால்கள்

கூடும் சூதவளின் இடைதான் முந்தியதோ யார்க்கும் மனம்

நாடும் மாதவளின் நடைதான் முந்தியதோ இசையோடு...



அல்லியவள் மாலையிலே மொட்டாகி இரவிலே மலரும்

புல்லிதழ் அதிரவே அரங்கிலே ஆட்டமாடி பொருள் சுருட்டும்


வில்லியவள் காலையிலே கனவாய்க் கலைந்த பொழுதைச்

சொல்லியே ஆகவேண்டும் பெண் நோக்குப் பாவனையை...

Thursday, July 9, 2015

நற்றவத்தால் கவியாக பிறந்து வந்தாய்...

காவியத்தின் பூட்டைத் திறந்து - அது

மேவியிருக்கும் ஏட்டை மறந்து - திரைக்

காவியத்தின் பாட்டை படைத்து - சொல்

ஓவியத்தில் கோட்டை கட்டுவார்...



மொட்டுக்குள் இருக்கும் தேனின் சுவையை

பாட்டுக்குள் பொதிந்து வைத்து இசையின்

மெட்டுக்குள் இருக்கும் நயத்தோடு இலக்கிய

ஏட்டுக்குள் பதிந்த கருத்துக்களைக் காட்டுவார்...



இளமையின் ஊஞ்சலாய் எதிர்ப்படும் கருத்தின்


வளமையில் பொருளைப் புனைந்து கட்டும் கவிச் 

செழுமையில் தோன்றிய எண்ணங்களைப் பாடல்

முழுமையும் தருவதில் வல்லவரே கண்ணதாசன்...



மதுகை கொண்டு மயங்கிட வாய்க் குடித்தாலும்

எதுகை கொண்டு இயங்கிடக் கவி வடித்தாலும்

மாதவள் எழிலும் முயங்கிடும் சொல்லைப் பூட்டி

காதலாள் உள்ளத்தைக் காட்டியவரே கண்ணதாசன்...



பழுத்த அனுபவத்தையும் பட்டறிவுச் சிந்தனையும்

அழுந்த வாழ்க்கையில் விழுந்த நினைவுகளையும்

எழுத்தின் மூலம் அழகிய திரையிசைப் பாடலாக

எழுந்த விதம் தான் என்னே! நான் வியக்கின்றேன்!



காதலும் தத்துவமும் கலந்து வந்த மகத்துவமும்

போதவிழும் மணம் நிறைக்கும் தாலாட்டின் பண்பும்

சாதலை விடக் கொடிய சோகத்தின் மாண்பையும்

பாதமதில் சரணடையும் பக்தியையும் என்னவென்பேன்!



சித்தர்களின் சிந்தனையை உள்ளத்தில் நிறுத்தி

பித்தர்களின் போக்கையும் புத்தியில்திருத்தி

எத்தர்களின் ஏளனங்களை எழுத புகுந்ததோடு

தத்தமது வாழ்கையின் சாரத்தையும் சேர்த்துப்



படைத்த பாடல்கள் எத்தனையோ - காதலையும்

அடைத்த பாடல்கள் எத்தனையோ - காலத்தையும்

வென்ற பாடல்கள் எத்தனையோ - மக்கள் மனதில்

நின்ற பாடல்கள் எத்தனையோ -அத்தனையும்



அகல் விளக்கின் ஒளியைப் போலே அடி நிழலின்

புகழ் அசையும் வண்ணம் கொழுந்து விட்டு - நிலவின்

நகல் விளக்காய் திரைத்துறையில் வாழ்ந்து - எழிலின்

புகல் வானமாய் விளங்கியதன்றோ கவியரசின் பிறப்பு...



எண்ண எண்ண இனிக்கும் நினைவுகளை - மதுரம்

திண்ண திண்ண தொனிக்கும் ஆசையைப் போலே - புது

வண்ண வண்ண வார்த்தைகளோடு இணைத்து - மது

பண்ண பண்ண மயக்கும் பாடலைத் தருவார் கண்ணதாசன்..



சிறு கூடல் பட்டியிலே பிறந்தாலும் காதலையும்

மறு தேடலாய்க் கொண்டு முழுமையடையச் செய்த

இறுமாப்பு சிறிதும் இல்லாத கவியரசே! - திரையுலகம்

பெறும் வாய்ப்பு இனியும் உண்டோ நவில் அரசே!!!



வார்த்தைகளை வளைத்து ஓவியம் ஆக்கினாய்

வாழ்க்கையிலே திளைத்து காவியம் ஆக்கினாய்

பார்த்தவைகளை நுழைத்து பாடலும் ஆக்கினாய்

பார்மகள் உனை அழைத்து கவிதை ஆக்கினாள்...



கற்பனை விருட்சத்தின் விதையைத் தன்

சொற்புனையும் ஆற்றலால் கவியாக்கிய

பொற்புனையும் கலையாக்கி அழகுறவே

சிற்பமென நீ கொடுத்தாய் பாடல்களாய்...



உற்ற கவி பல பேரும் ஊரிலுண்டு - உனைக்

கற்ற கவியும் சில பேருண்டு - திரையுலகம்

பெற்ற கவி உனைப் போலே இங்கு யாருண்டு

நற்றவத்தால் கவியாக பிறந்து வந்தாய்... 




கொள்ளை இன்பத்தையும் கொட்டி அளந்தாய் 

வெள்ளை மனதையும் பாட்டில் புனைந்தாய்

பிள்ளை உள்ளத்தையும் பாசத்தில் கலந்தாய்

தள்ளை மொழியாய் தாலாட்டில் கொடுத்தாய்...



கன்றரியாததைப் பசுவானது

நன்றறியும் அது போலே துடிக்கும்

சேயுள்ளத்தை அறிந்து பெற்ற

தாயுள்ளம் போலவே கவியுரைத்தாய்...



அன்றில் பறவைகள் குடியிருக்கும்

குன்றில்முளைத்தெழுந்த காதலை -

ஒன்றாய் கலந்த உள்ளத்தின் பாடலாய்

நன்றாய்க் கொடுத்தாய் திரையுலகிற்கே!!!



நாகரீகத்தின் தொட்டிலில் குழந்தையானாய்

போகப்போகத்தெரியும் என்றே பறைசாற்றினாய்

மோகத்தின் கட்டிலில் கனிந்த காதலானாய்

தியாகத்தில் புரண்டு நிற்கும் தாய்மையானாய்...

Saturday, February 14, 2015

காதலைப் பற்றி ஏதோ என் மொழியில்:

கருத்தரித்த காதல் கூட

தோல்வி கண்டிருக்கின்றன...

கருத்தொருமித்த காதலுக்கு

என்றுமே தோல்வியில்லை...


காதலைப் பற்றி ஏதோ என் மொழியில்:


ஏதோ என்பது -

நான் எண்ணியவற்றில் ஏதோ...!!!!

மனதைப் பின்னியவற்றில் ஏதோ...!!!

காதல் பண்ணியவற்றில் ஏதோ...!!!

உணர்வும் கன்னியவற்றில் ஏதோ...!!!


இன்னது தான் இப்படித்தான்

என்பதெல்லாம் காதலில் இல்லை...


அவளின்

முகம் கண்டும் வரலாம் - சீரிய

அகம் கண்டும் வரலாம் - கூரிய

நகம் கண்டும் வரலாம் - நேரிய

யுகம் கண்டும் வரலாம் - அழகின்

ரகம் கண்டும் வரலாம் - பழகும்

விதம் கண்டும் வரலாம் - இடையின்

பதம் கண்டும் வரலாம் - கொங்கை

மதம் கண்டும் வரலாம் - நடக்கும்

ரதம் கண்டும் வரலாம் - பார்வை

விடம் கண்டும் வரலாம் - பருவத்

தடம் கண்டும் வரலாம் - உருவப்

படம் கண்டும் வரலாம் - மனதின்

திடம் கண்டும் வரலாம் - அன்பின்

வசம் கண்டும் வரலாம் - வனப்பின்

ரசம் கண்டும் வரலாம் - உடலின்

நலம் கண்டும் வரலாம் - ஊடலின்

வலம் கண்டும் வரலாம் - தேடலின்

நிலம் கண்டும் வரலாம் - பூவையின்

களம் கண்டும் வரலாம் - காதலும்

வளம் கொண்டும் வருமே!!!

---------------------------------------------------------------------------------------


நிலவகைப் பட்டதைப் போலே காதலும்

சிலவகைப் படுகின்றது பூமி மேலே...


உவப்பத் தலை கூடி உள்ளம் தனை நாடி

அவளிடத்தில் கலை தேடுவது ஒரு காதல்...


கலை தேடிய அவள் மனதிலே நின்று

நிலையான இடம் பிடிப்பது ஒரு காதல்...


உருவக் களிப்பிலே உள்ளம் தொலைத்து

கருவத் தோடு வளர்வதும் ஒரு காதல்...


உணர்வின் கொந்தளிப்பிலே உழன்று காலக்

கணக்கைக் கூட்டிக் கழிப்பது ஒரு காதல்...


கண்ணிமைப் பின்னலிலே அன்பு வலை உண்டு

பண்ணியிருமனம் ஒன்றாவது ஒரு காதல்...

---------------------------------------------------------------------------------------


குறிஞ்சி மலைப் பூவைப் போலே நினைவை

உறிஞ்சி உள்ளத்தை நிரப்பும் ஒரு காதல்...


முல்லை மணம் போலே முகர்ந்து நுகர்ந்து

எல்லை இல்லா இன்பம் எய்யும் ஒரு காதல்...


மருத மரம் போல் செழித்து வளர்ந்து நிழல்

தருவதும் தென்றலாவதும் ஒரு காதல்...


நெய்த வலைப் போலே நீரை நழுவவிட்டு

நெய்தவளிடமே மயங்குவது ஒரு காதல்...


பாலை நிலமாய் இருந்த மனதைப் பண்படுத்தி

சோலை வனமாய் மாற்றுவது ஒரு காதல்...

---------------------------------------------------------------------------------------


இளவேனிற் காலமாய் இருந்த மனதில் அவள்

இளமை அழகு குடிகொள்ள என் மனதில் மெல்ல

முதுவேனிற் காலமாய் மாறிய உணர்வுகளும்

முதிர்ச்சியடைய அவளிதயம் தஞ்சம் புகுந்திட

இலையுதிர் காலமாய் என் எண்ணமெல்லாம்

கலையழகோடு உதிர்த்து கவியாக்க பின் வரும்

வசந்த காலத்தை எதிர் பார்த்து அவள் மனமும்

பசந்த தினம் பார்த்து காதலும் நிறைவேறி முன்

பனிக்காலக் குளிர் அடங்காத அவள் உடலில்

தொனிக்கும் ஆசைதனை வி(வ)ரித்துப் பின்

பனிக்காலக் குளிர் மறைக்கின்ற கூடலில்

இனிவரும் காலம் தனை களிக்க வேண்டும்...

---------------------------------------------------------------------------------------


புள்ளிகள் தொடங்கி கோடுகளாகி

பள்ளிகள் தொடங்கி ஏடுகளாகி

பருவங்கள் கிளர்ந்து உருவங்களாகி

புருவங்கள் வளைந்திரு துருவங்களாகி

உணர்வுகள் எழுந்து நினைவுகளாகி

உணவுகள் மறந்து கனவுகளாகி

உலகத்தை மறைத்த கோலங்களாகி

திலகத்தை வரைந்த காலங்களாகி

ஆசையும் நெருங்கிய ஆடைகளாகி

ஓசையின்றி விரும்பிய மேடைகளாகி

கசிந்துருகிய வண்ணம் தாழ்வாகிப்

பசித்திருக்கும் எண்ணம் வாழ்வாவதே

காதலாகும் வாழ்வும் திருமணத்தில்

மோதலாகி முற்றுபெறாமல் ஒருமனதாய்

நின்று எதிலேயும் எங்கேயும் எப்போதும்

நன்றாய் வாழ்வதே நமது கடமையாகும்...

---------------------------------------------------------------------------------------


அத்தனை காதலையும் தன்னகத்தே அடக்கிய

ஆசையையும் அதனோடு கூடி விழைகின்ற

இன்பத்தையும் இருவர் நாடி ஒருவர் என்றாகி

ஈண்ட பொழுதினில் பெரிதும் மகிழ்ந்து ஆடிய

உலகத்தை பலதடவை மறந்து என்றும் தேடிய

ஊக்கத்தோடு உணர்வினைக் கலந்து அத்தோடு

ஐக்கியாமாகிட உள்ளத்தின் கதவுகளைத் திறந்து

எழிலெல்லாம் தெளித்து வரைகின்ற கோலத்தில்

ஏக்கத்தை வாரி இறைத்து மறையும் புள்ளிகளோடு

ஒன்றிய ஊடலும் உயிர் மெய்யோடு உருவாகிட

ஓடும் குருதியிற் பாய்ந்து அதுவும் கருவாகிட

ஔடதம் காட்டும் விளக்கமே சான்றாகும்

அஃதன்றி வேறறியேன் காதலினால் என்ன பயன்...?

---------------------------------------------------------------------------------------


எறும்புகள் ஊர்வது எதற்காக...?

பாதை தேய்வதற்கா...? இல்லை அதன்

பாதம் தேய்வதற்கா...?


நிலவும் நகர்வது எதற்காக...?

வளர்ந்து தேய்வதற்கா...? இல்லை ஓடி

ஒளிந்து மறைவதற்கா...?


நதியும் ஓடுவது எதற்காக...?

கரையை வகுப்பதற்கா...? இல்லை கடல்

திரையை பகுப்பதற்கா ...?


மலர்கள் மலர்வதும் எதற்காக...?

மணம் பரப்புதற்கா....? இல்லை அதன்

குணம் உரைப்பதற்கா...?


காலை விடிவதும் எதற்காக...?

இரவை மறைப்பதற்கா...? இல்லை அதன்

உறவை அளப்பதற்கா...?

மீண்டும்

மாலை வருவதும் எதற்காக...?

இர(வை)வல் அழைப்பதற்கா...? இல்லை அதன்

வரவில் பிழைப்பதற்கா...?


கனவும் வருவது எதற்காக...?

உறக்கம் கலை பெறுவதற்கா...? இல்லை அதன்

கிரக்கம் நிலை பெறுவதற்கா...?


பருவம் வருவது எதற்காக...?

பழகி மகிழ்ந்திடவா...? இல்லை அதன்

அழகில் நெகிழ்ந்திடவா...?


இளமைக் கோலமும் எதற்காக...?

இடையைக் கண்டு இணங்குதற்கா...? இல்லை

தடையைக் கண்டு வணங்குதற்கா...?


காதல் தோன்றுவது எதற்காக...?

காணும் உலகை அளப்பதற்கா...? இல்லை வாழும்

காலம் முழுதும் நினைப்பதற்கா...?


வாழ்க்கை என்பதும் எதற்காக...?

பிறவிக் கடனை கழிப்பதற்கா ...? இல்லை நம்

உறவுக்கு கடன் அளிப்பதற்கா...?


உருவம் கலைவதும் எதற்காக...?

உலகம் முழுதும் மாறுவதால் - நானும் அதை

உங்களுக்கு எடுத்துக் கூறுவதால்...

---------------------------------------------------------------------------------------


காதலென்பது கண்வழிப் புகுந்தும்

கருத்தினில் நிறைந்து காணப்படுவது...

காதலென்பது செவிவழிப் புகுந்தும்

கற்பனையில் நிறைந்து பேணப்படுவது...

காதலென்பது மெய்வழிப் புகுந்தும்

காணாததில் மறைந்து நாணப்படுவது...

காதலென்பது பொய்வழிப் புகுந்தும்

கலைப் பொக்கிசமாய் பேணப்படுவது...

காதலென்பது திருமணத்தை நுகர்ந்தும்

கட்டிய மாலையில் நிறையைக் காண்பது...

காதலென்பது காமம் தனை நுகர்ந்தும்

கடைவழிப் போய்க் கரையைக் காண்பது...

---------------------------------------------------------------------------------------


எழுத்தினில் தோன்றிய காதல் - இலக்கியக்

கழுத்தினில் போய் முடிவதும் உண்டு...

மழையென பொழிந்த காதல் - இலக்கனப்

பிழையென ஆகி முடிவதும் உண்டு...

மாலையில் தொடங்கிய காதல் - மங்கையின்

சேலையில் போய் முடிவதும் உண்டு...

எண்ணத்தில் தோன்றிய காதல் - அவலெழில்

வண்ணத்தில் கவியாய் வடிந்ததும் உண்டு...

குணத்தினில் தோன்றிய காதல் - ஒன்றுபட்டு

மணத்தினில் போய் முடிவதும் உண்டு...

அவனியில் தொடங்கிய காதல் - ஆதாம்

ஏவாளின் உறவாய் முடிந்ததும் உண்டு...

பழியினில் தோன்றிய காதல் - உடன் பட்டு

குழியினில் போய் விழுவதும் உண்டு...

பணத்தினில் தோன்றிய காதல் - கடன் பட்டு

கிணத்தினில் போய் விழுவதும் உண்டு...

காமத்தில் தோன்றிய காதல் - அகப் பட்டு

சாமத்தில் போய் வருவதும் உண்டு...

---------------------------------------------------------------------------------------


கண் தான் வாசல் அவ்வாசல் வழி

காட்டியதன் பின் செல்லப் பருவக்

கிளர்ச்சியினாலே உள்ளம் மேலும்

கீழும் அலை பாயும் எண்ணத்தை

குவித்து அவளைக் கண்டு மகிழக்

கூடிய நினைவுகளைத் திரட்டிக்

கை மறந்த பொருளைப் போலே

கெண்டை விழியாளிடம் அவன்

கேட்க விருக்கும் கேள்வியுமே

கொண்டையாடும் இடையிலாடும்

கோலத்தைப் போலே அவனைக்

கௌவிக் கொண்டது காதல்...

---------------------------------------------------------------------------------------


நகரத்தான் நினைக்கிறான் காதல்

நகரத்தான் நினைக்கிறான் - அதுவே

பட்டிகாட்டான் நினைக்கிறான் - காதல்

கொட்டிக் காட்டத்தான் நினைக்கிறான்...

---------------------------------------------------------------------------------------


அன்பு மட்டும் காதலில்லை - நல்ல மனதின்

பண்பும் கூட காதல் தான்...

அரவணைப்பு மட்டும் காதல் இல்லை - ஒன்றிய

அவள் நினைப்பும் கூட காதல் தான்...

புரிதல் மட்டும் காதல் இல்லை - அவளை

அறிதல் கூட காதல் தான்...

விட்டு கொடுத்தல் காதல் இல்லை - அவள் செவி

தொட்டு மடுத்தல் கூட காதல் தான்...

விளக்கம் கொடுத்தல் காதல் இல்லை - அவள்

விளங்கக் கொடுத்தல் கூட காதல் தான்...

இளமை மட்டும் காதல் இல்லை - உணர்வின்

முழுமை கூட காதல் தான்...

கனவு மட்டும் காதல் இல்லை - அவளுடைய

நினைவும் கூட காதல் தான்...

உறவு மட்டும் காதல் இல்லை - சங்கமித்தப்

பிறகும் கூட காதல் தான்...

இன்பம் மட்டும் காதல் இல்லை - உடன்பட்டால்

துன்பம் கூட காதல் தான்...

படித்துணர்வது மட்டும் காதல் இல்லை - அதனை

துடித்துணர்வதும் கூட காதல் தான்...

காலம் தழுவுதல் மட்டும் காதல் இல்லை - அவள்

கோலம் தழுவுதல் கூட காதல் தான்...

பிரிந்திருத்தல் மட்டும் காதல் இல்லை - அவளதை

பரிந்துரைத்தால் அதுவும் கூட காதல் தான்...

விதையாய் வளர்வது மட்டும் இல்லை காதல் - தொடர்

கதையாய் நீண்டு தொடர்வதும் காதல் தான்...

பொற்புடையது மட்டும் காதல் இல்லை - மானம்

கற்புடையதும் கூட காதல் தான்...

பௌதீகமானது மட்டும் காதல் இல்லை - உலகில்

தெய்வீகமானதும் கூட காதல் தான்...

இல்லற நோன்பு மட்டும் காதல் இல்லை - அதன்

நல்லறப் பண்பும் காதல் தான்...

வாழ்க்கை மட்டும் காதல் இல்லை - உள்ளத்தின்

வேட்கையும் கூட காதல் தான்...

வாழத் தகுந்தது மட்டும் காதல் இல்லை - என்றும்

வாழ்க்கைக்கு உகந்ததும் காதல் தான்...

---------------------------------------------------------------------------------------


கண்ணோடு கண் நோக்கி வார்த்தையின்றி

கருப்பட வளர்ந்தது அன்றையக் காதல் -

அலைபேசியின்

எண்ணோடு எண் தேக்கி வார்த்தையன்றி

எதிர்ப்பட வளர்ந்தது இன்றைய காதல்...


உளத்தோடு உளம் நோக்கி வீரப் போர்க்

களத்திலும் வளர்ந்தது அன்றைய காதல்...

பருவத்தின்

நலத்தோடு நலம் போக்கி உணர்வின்

கலத்தோடு வளர்வது இன்றைய காதல்...


---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------

Tuesday, January 27, 2015

அன்ன நடையா...? அன்னாள் நடையா...?


அவள் நடக்கும் தூரத்தை

அவள் கடக்கும் முன்னே

அன்னமது எட்டி விடும் -

அதன் பின்னால் தான்

அவள் வருவாள்...

அவ்வளவு மென்னடையாள்...

அளந்து வரும் நன்னடையாள்...


அடிமேல் அடியெடுத்து

அன்னமவள் நடக்கும் போது

அசைந்து வரும் தேரும் கூட

அதன் முன்னால் தோற்று விடும்...


தேரியங்கும் தெருவீதியிலே

தெய்வச் சிலையெனவெ அவளும்

தேவதையாக நடந்து வந்தாள் -

தேவலோக அழகையெல்லாம் தன்

திருவடியால் கடந்து வந்தாள்...



பூவுலகம் பொன்னுலகம் எல்லாம்

போலவொரு பேருலகமெனவே

பூவையவள் தன்னுலகம் காட்டி

பின்னலிடை அழகைப் பூட்டி


மேவும் அழகையெல்லாம்

மேலும் படை கூட்டி விழி

தாவும் வழி மீதினிலே அவள்

தரணியையே அளந்து வந்தாள்...



தாரணியாம் ஒரணியாம் சேர்ந்து

தங்கி விட்ட எழிலெல்லாம்

பூரணியாம் கூடியவள் பாதத்தில்

பூச்சூடும் படி நடந்து வந்தாள்...


சீரெழுந்த அழகையெல்லாம்

சிந்தாமல் சிதறாமல் மண்ணில்

பேரழுந்த பெட்டகமாய் அவள்

பொலிவோடு நடந்து வந்தாள்...



இடை நடுவில் இலைமறை காயாக

இலக்கியத்தை மறைத்து வைத்து

மடை நடுவில் வெள்ளம்போலே

மயங்கியவள் நடந்து வந்தாள்...


நிறை குடம் போல நீர் தழும்பாமல்

நிரம்பித் தழும்பும் அழகையெல்லாம்

குறை குடம் போலே காண்போரைக்

கூத்தாட விட்டு நடந்து வந்தாள் ...



இத்தனை அழகையெல்லாம் அவள்

எங்கே ஒளித்தாளோ - என்று நாம்

அத்தனை அழகையெல்லாம் தேடும்படி

அங்கே அசைந்து நடந்து வந்தாள்...


அசைய விட்ட அழகையெல்லாம்

ஆடையிலே மறைத்து வைத்தாலும்

இசைந்து அலுங்கிக் குலுங்கி ஓர்

இன்னிசையாய் நடந்து வந்தாள்...



சாமரங்கள் போலே கைவீசி

சாளரத் தென்றலென அசையும்

பூமரங்கள் போலே அவள்

பூமியிலே நடந்து வந்தாள்...


மான் கொண்ட அழகும் மெல்ல

மருண்டு துள்ளுவதைப் போலத்

தான் கொண்ட அழகும் துள்ள

தேன் குடமாய் நடந்து வந்தாள்...



பின்னல் கொண்ட கூந்தல் அவளின்

பின் அங்கும் இங்கும் ஆடுவதை ஏந்திய

மின்னல் போன்ற இடையும் தனத்தால்

மிரண்டு தள்ளாடும் படி நடந்து வந்தாள் ...


கன்னல் போன்ற வாளிப்பான தன்

கணுக்கால் கொண்டு வாலிபத்துக்கு

தின்னக் கொடுக்கும் இடையினிலே

திரண்ட அழகோடு நடந்து வந்தாள்...



மாதவியின் அழகென்ன - சிலம்பத்தின்

மாற்றுக் குறையாத சலங்கை குலுங்க

மாதேவியவள் ரதி தேவியென ஒளிரும்

மதி மயங்க வீதியிலே நடந்து வந்தாள்...


பூதேவியின் அழகென்ன - உள்வாங்கிய

பூமேனி குலுங்கும் பொன் மேனியிலே

சீதேவி விளங்கும் வண்ணம் பொற்பாதச்

சீரோடும் சிறப்போடும் நடந்து வந்தாள்...



சின்ன இடை குலுங்க

சிருங்கார ரசம் பொங்கி

அன்னாள் மடை தழும்ப

அன்ன நடை விளங்க

என்னே! - நான் மயங்க

எண்ணமும் தான் முயங்க

முன்னே அவள் நடக்க

முனைந்திட்ட கவியும்

பின்னே தொடர்ந்து வந்து

பேருவகைத் தாராதோ!!!



அள்ளித் தெளித்த ரசம்

அகப்பையிலே குடியேறி

துள்ளித் திரிந்து கொஞ்சம்

துவண்டெழுந்து என்னெழுது

கோல் புகுந்து எண்ணம் தான்

கோடிட்ட இடத்திலெல்லாம்

கால் பதியும் சுவடு போலே

கவியாய் வடிந்ததம்மா!!!

...கலையாத இளமை...


கார் தழுவிய வானம் மண்ணில் விழுந்து

கரைந்திட துடிக்குமது போல் மண்ணில்

ஏர் தழுவிய கால்கள் வயல்-வரப்பின் மேல்

ஏறித் தழுவிடத் துடிக்குமது போல் கழுத்தில்

தார் தழுவிய நெஞ்சில் கொஞ்சம் அசைந்து

தான் உயரத் தழுவிடத் துடிக்கும் அவளின்

மார் தழுவிய மயக்கம் தணிக்க நானும்

மான் தழுவதலைப் போலத் தழுவி மெல்ல



கொடி இடையின் கொம்பெனவே முளைத்த

கரங்களை அணைத்து நாணத்தால் அவளும்

பொடி நடையில் பாம்பெனவே அசையும்

பொலிவினிலே என்னை மறக்கும் நேரமதில்

விடியும் வரை கலை பலவும் பயில - காலை

வரும் வரையில் எங்கே துயில - பயின்றது

முடியும் வரை முத்தெடுத்து நான் தொடுக்க



கொதித்து இருக்கும் அவளுடலை கொஞ்சம்

குளிர வைத்துப் பின் சூடாக்க அவ்வுடலில்

பதித்து இருக்கும் முத்தங்களை மறுபடியும்

பதியுமாறு கொடுத்து அவ்வழகை நான் ரசிக்க

விதித்து இருக்கும் மன்மதனின் கருணையை

விளக்க வேறோன்றும் வேண்டாமல் நனைந்து

நொதித்து இருக்கும் உணர்வோடு ஒன்றாகி

நுட்பமாகக் கலந்தின்பம் தாண்டாமல் அடுத்து



உள்ளமது பூரித்து பொங்கியது விரிந்து பூமடலில்

உள்ள-மது குடித்துக் களித்து மீண்டும் பூவுடலில்

உள்ள-மது சிந்தாமல் பூவிதழை மடித்து சுகித்த

உள்ளமது உருகி பூவிதழை நனைத்த சுனையில்

வெள்ளமது உருவாகி உணர்ச்சிப் பெருக்கோடு

துள்ள-மது ஓடுகின்ற ஓடை நோக்கிப் பாயும்

பள்ளமது தெரியாமல் நதியெனவே தோய்ந்துப்

பண்பட்ட கலவிக் கடலிலே கலந்து ஆசையும்



அலையாகிப் பழகும் கரையின் மீது மோதி

அலைந்து நாளும் இன்பம் நல்கிக் கவின்று

நிலையாகிடப் படகும் ஆடுவதைப போலே

நின்றும் அசைந்தும் நன்றாய் ஆடிக் களித்து

சிலையாகிய அழகினிலே நீராடிப் போராடி

சிருங்காரப் பேரழகின் அறுபத்து நான்கு

கலையாகிடத் துடிக்கும் ஊடலும் கூடலும்

கலையாத இளமையை அழைக்கின்றது...



அழைத்த இன்பத்தை இடையில் வைத்து

அதிரூப தனத்தை உடையில் பொதிந்து

நுழைத்த வண்ணம் நடையில் தைத்து

நுடங்கும் இளமைக் கடையில் மறைத்து

விழைத்த அழகும் சிறுமடையில் பொங்கி

விருப்பம் போலே விடையைக் கொடுக்க

சழைத்த உடலில் உதரம் விழுந்து தங்கி

சற்றே திரண்டு கருவாய் விழைகின்றது...



கருவும் மெல்ல கவியாய் வளரக் காலம்

கனியும் என்றே காவல் கொள்ள அதன்

உருவும் நல்ல கவிழ்ந்து வளர மேலும்

உணர்வும் கொஞ்சம் புறத்தில் தெரிய

மருவும் உடலும் உருவம் கலைந்து

மயக்கம் வந்து மனதில் கொள்ளத்

திருவும் மகவாய் உதிக்கப் பையும்

திறந்து பயன் அடையும் இளமை...




கலையா இன்பம் மறையாதிருக்க

நிலையா வாழ்வில் குறையாதிருக்க

அலையா மனதும் நிறைவோடிருக்க

கலையா! என்றே பறையாதிருக்கக்


கலையும் இளமையும் மறையும் மெல்ல

இலையும் வளமையும் சருகாகும் செல்ல

நிலையும் வந்தடையும் - காலம் சொல்லா

விலையும் தந்தடையும் உயிர் ஒன்றுக்கே!!!



குடமும் கூட கும்பமானால் தலைக்கேறும்

இடமும் நீர் எடுக்க நேர்ந்தால் இடைக்கேறும்

படமும் நிழற் பிம்பமானால் தரைக்கேறும்

தடமும் பதிய நடந்தால் காலக் கடைக்கேறும்...

அன்னக் கொடியாம் தைமகளை அனைவரும் வரவேற்போம்...


ஆடியிலே விதைத்த சம்பா நெல்லும் மெல்ல

ஆவணியில் முளைவிட்டு கதிரோன் ஒளிபெற்று

புரட்டாசியிலே புத்துயிர் அடைந்திட வருகின்ற

ஐப்பசியில் மழைநீரை ஈர்த்து கொஞ்சம் அசைந்து

கார்த்திகையில் கதிர்விட்டு மண்குளிரும் பனியில்

மார்கழியில் நனைந்து அறுவடைகலம் புகுந்து

தைத் திங்கள் முதல் நாளில் பொங்கலாகும்...



உழவனின் கைபட்டு ஏர் கலப்பைக் கால் பட்டு

பழகும் மண்ணின் மணத்தோடும் குணத்தோடும்

கதிரவனின் ஒளிபட்டு கதிராய் நாளும் வெளிப்பட்டு

அதுவும் ஓர் நாளில் அறுவடையாகி எல்லோர்


பசியும் போக்கிட உள்ளோர்க்கு உணவாகி அதனை

புசிக்கும் வழி இல்லார்க்கு கனவாகி காணும் உலகில்

நசியும் பஞ்சமும் வறுமையும் இல்லா வளம் காண

வசிக்கும் யாவர்க்கும் வேண்டும் பொங்கலாகட்டும்...



கழிப்பதெற்கெனத் தோன்றும் போகியிலே பழையனவை

அழித்து நம் இல்லத்திலும் உள்ளத்திலும் நல்லுணவும்

பொங்கியதோடு நல்லுணர்வும் வளர்ந்து அனுதினமும்

தங்கியதோடு இன்பமும் நிலைத்து நின்றிட வேண்டும்...



புதுப் பானையில் பொலிவோடு பொங்கிய அரிசிக்கு

மதுரம் தந்திடும் வெல்லமென உள்ளமும் பொங்கி

அடிப்பாகத்தில் இனிக்கும் கரும்பாகி தைத்திங்களின்

அடிதொட்டு தொனிக்கும் யாவும் நலமாகிட வேண்டும்...



மாடுதனை ஆட்டுவித்து ஏரதனை நிலைநிறுத்திப் பயிரிட்ட

காடுதனில் விளைந்த நெல்லெடுத்து பொங்கல் படையலிட்டு

வாயில்லா உயிரினத்துக்கும் வாய்ப்பதனை உருவாக்கி

நோயில்லா நலம் வாழ நன்றியதனை செலுத்திட வேண்டும்...



விரும்பிய ஆடவனை மணந்திடவும் விருப்பம் போலவே மனம்

அரும்பும் ஆடவன் மனையாள வாய்த்திடவும் கன்னியர்கள் தாம்

காணும் பொங்கலிட்டு பகிர்ந்து உண்டவர்க்கும் கண்டவர்க்கும்

நாணும் வண்ணம் நலம் தைத்திங்கள் முதல் கூடிட வேண்டும்...



மதுவிருக்கும் மலர் போலே உள்ளம் மலர்ந்து

அதுவிருக்கும் நலத்தோடும் உள்ளம் மகிழ்ந்து

பொதுவிருக்கும் குணம் தனிலே உள்ளம் நெகிழ்ந்து

எதுவிருக்கும் இல்லையென்றாலும் நன்றாகட்டும்...



நதியிருக்கும் கரை போலே நாளும் பாதை வகுத்து

மதியிருக்கும் மனதோடு நல்லவற்றைத் தொகுத்து

விதியிருக்கும் துணையோடு மாலை தொடுத்து நற்

கதியிருக்கும் பதினாறு பேறும் வந்தடையட்டும்...



விழியிணைக்கும் காட்சிதனை செயலாக்க அன்பு

மொழியணைக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி

பழியனைத்தும் மறந்து வாழ நாளும் செல்லும்

வழியனைத்தும் திறந்து நன்றே என்றாகட்டும்...



உளி மறைத்த உருவம் போலே எண்ணமும்

வெளித் தெரியா வண்ணம் தோன்றி வான்

வெளி மறைத்த நிலவாய் ஒளி வீசி உள்ளம்

களித்திடும் இன்பம் அன்றாடம் உண்டாகட்டும்...



அமிழ்தினும் இனிய நாளாம் பொங்கல் திருநாளை

தமிழர் தம் பெருவிழாவாக தரணியெங்கும் தைத்திங்கள்

உமியில் உதிர்ந்த நெல்லை உணவாக்கி படையலிட்டு

உமிழ்ந்திடும் கதிர்க்கு நன்றியோடு கொண்டாடுவோம்...



தை மகள் பிறந்ததிலே தரணியிலே கதிரவன் தன்

திசை மாறிப் பயணிக்கும் போது வானிலையும் அந்தத்

தை மகளை வரவேற்க மார்கழியின் குளிர் கொடுத்த

திங்கள் கடந்ததை பொங்கலோடு கொண்டாடுவோம்...



வீரத்தின் விளைநிலமாம் தமிழர் களத்திலும் உளத்திலும்

தீரத்தின் அடையாளமாய் விளங்கும் ஜல்லிகட்டோடு

ஓரத்தில் நின்று ஒதுங்காமல் மல்லுகட்டும் மாடுகளோடு

பாரத்தைச் செலுத்தி அடக்குவதே திறமையன்றோ!!!



பொட்டிட்ட மங்கையரும் பூவணிந்த பாவையரும்

கட்டுண்ட நாணம் மறந்து கண்டு மயங்கி வீட்டில்

கட்டிட்ட மாட்டுக்குத் தான் எத்தனை வீரமதிலே

கட்டுண்ட காளைமீது தன் கவனம் ஈர்க்குமன்றொ!!!



கன்னக் குழியிரண்டில் கவின்மிகு நகையும் மறைந்திருக்க

பின்னற் சடைதனிலே பூச்சுடியப் பேருவகை ஒளிந்திருக்க

மின்னற் கொடி இடையசையும் மெல்ல மயில் நடனம்புரிய

அன்னக் கொடியாம் தைமகளை அனைவரும் வரவேற்போம்...



மார்கழித்த மயக்கம் தணிக்க விண்ணில் இருந்து கதிரவனும்

பார்களித்து இன்புறவே ஒளிவீசிய பக்குவத்துக்கு நன்றி கூற

ஊர்கூடி பொங்கலிட்டு உவகையிலே மங்களம் பாடியிங்கு

தார்சூடிய தைதிங்களிலே தமிழர் நாம் கொண்டாடுவோம்...





-தை மகளை வரவேற்போம் - அத்

-தை மகளை வரவேற்று பல வித்

-தை நலம் பெற்றும் ஆயகலை மெத்

-தை சுகம் பற்றியும் தூய மனம் தத்

-தை இறகு போலவே பறக்கட்டும்...