Saturday, December 19, 2015

இனிய திருக்கார்த்திகைத் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

உருவமற்ற நெருப்பை ஓர் அகலில் கொண்டு வந்து

உருவத்தைக் கொடுக்கும் தீபமெனும் ஒளிபொருந்திய

திருக்கார்த்திகைத் திருநாளை தீபத் திருநாளாக்கிய

பெருமையை நிலைநாட்டிட விளக்கேற்றிடுவோம்...



எண்ணெய் வார்த்து திரிகளிட்ட அகல் விளக்குகளை

திண்ணை எங்கும் வரிசையாக அடுக்கி காண்பவர்

கண்ணை மயக்கும் தீபமாக ஒவ்வோர் வீட்டிலும்

விண்ணை வெல்ல ஒளியாக ஏற்றிடுவோமாக...



உரசலில் உண்டாவது தான் நெருப்பாகும் - அன்பு

உரசலில் உண்டாவது தான் விருப்பாகும் - ஒளி

வருவதில் மறைவது தான் இருளாகும் - அதைத்

தருவதில் நிறைவது இறை அருளாகும்...



அடிமுடியைத் தொடாதவாறு உருவமற்ற ஒளியாகப்

பிடிபடாவண்ணம் தீப்பிழம்பாக மாறிய சிவனார் தான்

அருவமாய் அருள் வழங்கிய நாளே கார்த்திகைத் தீபத்

திருநாளாகும் அந்நாளில் மகா தீபத்தை வணங்குவோம்...



பாபங்கள் மறைந்திடவும் நெஞ்சில் எழும் கோப -

தாபங்கள் குறைந்திடவும் எஞ்சிய முன்னோர்கள்

சாபங்கள் அழிந்திடவும் பஞ்சில் எரியும் அகல்

தீபங்கள் ஏற்றிடவும் திருக்கார்த்திகைத் திருநாளில்...



நதிவெள்ளம் பெருகும் போது கடல்வெள்ளம் தோய்ந்துவிடும்

கடல்வெள்ளம் உருகும் போது மழைவெள்ளம் சேர்ந்துவரும்

மழைவெள்ளம் பெருகும் போது மரங்கள் கூட சாய்ந்துவிடும்

ஒளிவெள்ளம் பெருகும் போது மழைவெள்ளம் ஓய்ந்துவிடும்



வேலை போல் எரிகின்ற அகல் தீபத்தையும் அக்னி

ஜ்வாலை போல் எரிகின்ற மகா தீபத்தையும் தரிசித்து

காலை பொழுதில் எரிகின்ற செங்கதிரை உள்வாங்கி

மாலை பொழுதில் தெரிகின்ற நிலவை போலே மக்கள்

ஒளிமயமான வாழ்வினை அழகிய சிலை செதுக்கும்

உளிமயமான காலத்தை கடந்திட வாழ்த்துகிறேன்...





அனைவருக்கும்

இனிய

திருக்கார்த்திகைத்

தீபத்திருநாள்

வாழ்த்துக்கள்...

1 comment: