பாவையின் கைப் பையிலும்
தேவையானதொரு பொருளாக
சேவை செய்வதற்கும் தன்னழகு
அவை ஏறுவதற்கும் அருளாசி
வழங்கியது கண்ணாடி தான்.
அன்று அவள் தன்
கலைந்த முடியைத் திருத்தவும்
அலைந்த அழகை நிறுத்தவும்
கலந்த களிப்பைப் பொருத்தவும்
கனவின் நிலையை உறுத்தவும்
கண்ணாடியே பயன்பட்டது.
ஒப்பனைக்காக மட்டுமல்ல தன்
ஒத்திகைக்காகவும் சில நேரம்
கற்பனைக்காக காட்டிக்கொள்ளும்
காரியம் மறைக்கும் காரணமாகவும்
கண்ணாடியே பலன்தந்தது.
இன்று அதே இடத்தை
அலைபேசி பெற்றுக் கொண்டிருக்கிறது.
அலைபேசியிடத்தில் அவள் தன்
தலைபேசும் அழகை படம்பிடித்து
தன் நிலை திருத்தவும் சுற்றச்
சூழ்நிலை பொருத்தவும் கற்றுத்
தன் நிலை உயர்த்தவும் உற்றத்
தோழியாகி உவகை கொள்ளச்
செய்கின்றாள்...
ஆண்டாள் தன் அழகைக்
காலக் கண்ணாடியில் பார்த்து
காலனை வெற்றி கொள்ளத் தான்
மாலவனைப் பற்றிக் கொண்டு தன்
மாயங்கள் புரிந்தாளோ? அந்தச்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் - அவன்
அடிதொட்டதாலே இடர்ப்பிடியாள்...
ஆண்டாள் தமிழை மட்டுமா ஆண்டாள்
அரங்கனையும் சேர்த்தல்லவா ஆண்டாள்
அவனைத்தவிர வேற்றாளை வேண்டாள்
அதீத நினைவாலே காதலும் கொண்டாள்
அரங்கத்தில் மாலைசூடக் கனவு கண்
உள்ளத்தாலே உணர்வுகளைத் தாண்டாள்
உணர்வுகளாலே பூமாலைப் பூண்டாள்
சீர்கொண்டு யாரையும் தீண்டாள்
நேர்கொண்டு நிறைகொள்ள சீண்டாள்
மால்கண்டு மறைகாக்க மாண்டாள்...