ஒரு புறம் பார்த்தே என்னவளுடைய
இரு விழிகளின் சாலையைக் கடந்ததாலே
மறுபக்கம் நானும் பார்க்க மறந்து போனது . . .
அந்நிலவின்
ஒருபக்கம் ஒளி இருந்தாலும் - மறைந்து இருக்கும்
மறுபக்கம் இருள் தானே - அவளும் மறைத்து இருக்கும்
மறுபக்கம் அருள்வாளா ?
இல்லையென்றால்
திரண்டு இருக்கும் என்னுடைய ஒருபக்க எண்ணங்களில்
புரண்டு இருக்கும் அவளின் மறுபக்க நினைவுகளைக்
கண்டு மிரள்வேனோ ?
தொல்லையென்றால்
விரிந்து இருக்கும் அவளது அழகின் எல்லையில் சுடர்விடத்
திரிந்து இருக்கும் இடைவெளியில் நெய்விட்டு நெடுநேரம்
எரிந்து சுருள்வேனா ?
பிடியில்லா வானத்தைப் போல நானும் தேடித்
பிடிக்கின்ற நிலவாக வருவாளோ ?
கொடியில்லா மலரைப் போல அவளும் படரத்
துடிக்கின்ற மடிமேலே வருவாளோ ?
உரையில்லா என் உள்ளக் குறிப்பிற்கு முன்
உரையாகும் உணர்வுகளாக வருவாளோ ?
கரையில்லா இன்பக்கடல் நீந்த என் இளமைக்
கரையேறும் தோணியாக வருவாளோ ?
No comments:
Post a Comment