அவன்:
ஆடியும் போனதடி
ஆசையும் கூடுதடி...
ஆடிக் காற்றினிலே
அங்கமெல்லாம் நொந்ததடி...
ஐக்கியம் ஆகிவிட
ஐப்பசியும் வந்ததடி...
அடைமழை போல நானும்
அணைத்திட வருவேனே!
அவள்:
ஆடி வந்து என்னை
ஆட்டி விட்டு போனதையா...
கூடிய ஆசையெல்லாம்
குதியாட்டம் போடுதையா?
ஐப்பசியில் நீயும் வந்து
என்பசியில் நிறைவாயோ?
மோட்சமதைக் காண
முத்தமழை பொழிவாயோ?
அவன்:
மழைமேகம் முன்வந்து
மகிழும்படி கூறுதடி...
பூத்த பூவிலெல்லாம் உன்
புன்னகையே தோன்றுதடி...
சேர்ந்த ஆசைவந்து உன்
சேலைதொட நினைக்குதடி...
மீண்டும் வீணையை மீட்டிடவே
மாலைவந்து அழைக்குதடி...
அவள்:
அழையாத மேகமாய் நீயும்
அங்கத்தினிலே நுழைவாயோ?
பாரமாகும் ஆடைமேலே
பாரதப்போர் புரிவாயோ?
தூரமாகும் உணர்வுகளை
தூண்டிவிட வருவாயோ?
மத்தளம் போல் நான் மயங்கி
மெலிந்துவிட வருவாயோ?
அவன்:
அங்கத்திலே ஆசைவந்து
அலைக்கழித்துக் கொல்லுதடி...
சங்கத்தமிழ் கூட பாடிச்
சங்கமிக்கச் சொல்லுதடி...
செங்கனிச் சாறெடுக்க
செவ்விதழைத் தேடுதடி...
மங்கை உனைச்சேர்ந்து
மனம் மோகமூட்ட கூடுதடி...
அவள்:
குளிர்ந்த அங்கம்தனை
குளிப்பாட்ட வருவாயோ?
கலைந்த கூந்தலைக்
களிப்பூட்ட வருவாயோ?
ஒளிந்த அழகினை சுடர்
ஒளியாக்க வருவாயோ?
வடிந்த நினைவிடத்தை தீபா
வளியாக்க வருவாயோ?
No comments:
Post a Comment