Friday, March 8, 2013

முடியுமா?

ஆர்வம் தலைப்படும் போது
 
எண்ணம் கலைப்படுகிறது...
 
அது காதல் கொள்ளும் போது
 
அந்த எண்ணமே இரும்பாகும்
 
எந்த இதயமும் துரும்பாகும்...
 
 
 
உதடுகள் வாசித்து உள்ளத்தால் யோசித்து வருவதல்லக் காதல்...
 
மனுதுக்குள் யாசித்து மறையும் வரை நேசிப்பது தான் காதல்...
 
 
 
காதல் வந்த அனைவருமே தன்
 
உணர்வுகளின் ஒளியைக் கொண்டு
 
மரணம் எனும் மார்க்கம் அடையும் வரை
 
உள்ளத்தின் நிழலைத் தேடுகிறார்கள்...
 
 
 
பருவத்தின் பாதையிலே சில நேரம் காதலொரு உணவு...
 
பழகியபின் பார்த்தால் காதலொரு பகுதிநேர உணர்வு...
 
 
 
உதட்டுக்கும் உணர்வுக்கும் இடையே உலவிய காதல்
 
பகட்டுக்கும் பார்வைக்கும் விருந்தாகி கலவியில் முடியும்...
 
 
 
உள்ளத்துக்கும் உணர்வுக்கும் இடையே உலவும் காதல்
 
உலகுக்கும் வானுக்கும் இடையே நிலவாய் ஒளிரும்...
 
 
 
விலக நினைக்கும் போது
 
பழக எண்ணுவதும்
 
பழக நினைக்கும் போது
 
விலக எண்ணுவதும்
 
காதலின் தலைசிறந்த
 
ஊடலாகும்...
 
 
 
உணர்வு அதிகாரம் செலுத்தும் போது காமம் அடங்கி விடுகிறது.
 
பருவம் அதிகாரம் செலுத்தும் போது காதலும் முடங்கி விடுகிறது...
 
 
 
பிறப்புக்கும் இறப்புக்கும் தடைபோடும் துல்லியக் கோடு தான்
 
காதலுக்கும் காமத்திற்கும் இடையேயான மெல்லியக் கோடு...
 
 
 
வளரும் செடியில் பருவப் பூவாவதும் காதல்
 
தளரும் போது துருவப் பனியாவதும்  காதல்...
 
 
 
கடற்கரையில் நின்று கொண்டு
 
கடல்நீர் முழுவதும் தன்
 
இருகைகளிலே அள்ளிவிட
 
நினைப்பதும் காதல்...
 
பின்
 
அக்கரையில் வந்து 
 
கடல்நீர் குறைந்ததென  
 
இரு கைகொண்ட நீரை
 
வார்ப்பதும் காதல்...
 
இடையில் ஒழுகிய நீர்
 
எண்ணத்தால் மனதைக்
 
கழுவவதற்கோ?
 
 
 
மன்மதன் வரைந்த கோடு
 
தொடங்கிய புள்ளியே காதல்...
 
 
 
ஆசைக்கு புள்ளி வைப்பதும்  
 
அதனைக் கிள்ளி வைப்பதும் 
 
ஓசையின்றி தள்ளி வைப்பதும்
 
ஓயும்வரை அள்ளி வைப்பதும்
 
காதல்...
 
 
 
முன்னுக்கு பின்
 
முரணாக தான் கொண்ட வாழ்வும்
 
சரணாகதி ஆவது காதலில் தான்...
 
 
 
சத்தமின்றி பருவம்
 
காலத்துக்கு கொடுக்கும்
 
முத்தமே காதல்...
 
 
 
ரத்தமின்றி புருவம்
 
இதயத்துக்கு தொடுக்கும்  
 
யுத்தமே காதல்...
 
 
 
மூடியப் புத்தகத்தின் முடிவுரையாவது காதல்...
 
தேடியே நாளும் படிக்கத் தூண்டுவதே காதல்...
 
 
 
பெண்ணவளின் பருவம் வரைகின்ற
 
கண்கவரும் ஓவியமே காதல்...
 
 
 
 
 
நான் கொள்ளும் காதலை
 
மறக்க முடியுமா?
 
இல்லையென்றாலும்
 
மறுக்க முடியுமா?
 
என்ற சொல்லின்
 
இறுதியும் அவளே!
 
 
 
என்
 
உள்ளத்தின் மாணிக்கமான
 
காதலும் அவளே!
 
 
 
விளங்க முடியா மனதின்
 
விளக்காவாள் அவள்...
 
வழங்க முடியா காதலின்
 
ஒளியாவாள் அவள்...

உணர்விலே தமிழ் இருக்க வேண்டும்...

உணர்விலே தமிழ் இருக்க வேண்டும்

உதட்டளவில் இருந்து என்ன பயன்?

எண்ணத்திலே தமிழ் சிறக்க வேண்டும்

எங்கும் அதன் புகழ் பறக்க வேண்டும்

உயிரிலே தமிழ் கலக்க வேண்டும்

உயர்வானதென்ற இலக்கும் வேண்டும்

நடையினில் தமிழ் மணக்க வேண்டும்

நம்மொழி என்ற இணக்கம் வேண்டும்

விடையினில் தமிழ் வெல்ல வேண்டும்

விளக்கத்தில் அதைச் சொல்ல வேண்டும்

ஒற்றுமையில் தமிழ் உலவ வேண்டும்

வேற்றுமையிலும் தரம் நிலவ வேண்டும்

தோன்றிய இனத்தைக் காத்திட வேண்டும்

தோல்வியிலும் ஒன்றிக் கூடிட வேண்டும்

வாய்மொழிகள் ஆயிரம் இருந்தும் தன்

தாய்மொழிக்கு பெருமை தேடிட வேண்டும்

உள்ளந்தனில் தமிழ் வாழ வேண்டும்

உலகந்தனில் தானாய் தமிழ் வாழும்...

காதலைப் பற்றிய என்மொழிகள்​...

காதல் - அது

உன்னைப் பார்க்கும் கண்ணாடியாகவும்

பெண்ணைப் பார்க்கும் முன்னோடியாகவும்

திகழ்கிறது...

அதிலே

அன்பைக் காணலாம் - நல்ல

பண்பைக் காக்கலாம்...





உன்னை

ஏற்றி விடும் ஏணியாகவும்

மனத்தின்கண் கேணியாகவும்

ஆசைக் கடலின் தோனியாகவும்

அன்புத்தேடலின் அபிமானியாகவும்

விளங்குவதே காதலாகும்...





         காத்திருந்தும் அலைந்தும்

         விக்க வைத்தும்

தொல்லை தருவதே காதல்...


      காலம் கடந்தும் 

      ழுவத் துடிக்கும்

   எல்லையே காதலாகும்...





கண்கள் வரையும் ஓவியத்திற்கு

கருத்தினில் வண்ணம் கொடுப்பது

காதலாகும்...


கருத்தினில் எழும் எண்ணத்திற்கு

கழுத்தினில் சரம் தொடுப்பது

காதலாகும்...


கழுத்தினைத் தொடும் சரத்திற்கும்

களிப்பினைக் கலந்து கொடுப்பது

காதலாகும்...


களிப்புடன் தொடரும் நேரத்திற்கும்

கவர்ச்சியும் நலமும் கொடுப்பது

காதலாகும்...





காற்றுள்ளவரை காதலும் இருக்குமது 

காணும் நெஞ்சில் எண்ணத்தின்

ஊற்றுள்ளவரை காதலும் சிறக்குமது

பேணும் கொஞ்சம் பேருள்ளவரை...





ஊரையும் மறந்து உறவிலே

மிதந்தது அன்றையக் காதல்...


நாரையும் மறந்த பூக்களாய்

மாறுவது  இன்றையக் காதல்...



தேரையும் மறந்த தெய்வத்தைத்

தேடியது அன்றையக் காதல்...


யாரையும் மணந்து எப்படியும்

வாழ்வது இன்றையக் காதல்...



நீரைப்போல தெளிந்து ஆறாய்

ஓடியது அன்றையக் காதல்...


சேறைப்போல களிந்து மாறாய்க்
 

கூடுவது இன்றையக் காதல்...



வேரைப்போல் பற்றிய உள்ளத்தை

நாடியது  அன்றையக் காதல்...


காரைப்போல் பருவத்தைக் கவர்ந்து

மூடுவது இன்றையக் காதல்...


கார் - கருமேகம்



ஊழ்வினையில் மீள்வினையைத் தேடியக் காதலும் காலத்தால் 

மீள்வினையும் ஊழ்வினையில் முடிந்தால் திருமணம் காணும்...


வாழ்மனையில் தாழ்வினையை நாடியக் காதலும் கோலத்தால்

தாழ்வினையில் மீள்வினையின்றி மடிந்தால் பிரிவைக் காணும்...

பேரின்பமே காதலாகும்...

பெண்ணைப் பார்த்தவுடன் அவள் மேல் ஆசை கொண்டு

கண்ணும் காட்சியை கருத்தினில் பதிவு செய்யும் போது

எண்ணம் தலைப்பட்டு ஏக்கமும் ஏற்பட்டு ஆண்மையும்

பெண்மையும் கூடி வாழ முற்படுவதே காதலாகும்...



ஏக்கத்தில் தொடங்கி எதிர்காலமே அவளென நினைந்து

பக்கத்தில் வந்துப் பழகத் துடிக்கும் விழிகளில் புனைந்த

தூக்கத்தை இரவுக்குக் கொடுத்து எண்ணமும் வளர்த்து

அக்கணத்தில் அவளிடத்தில் அடங்குவது காதலாகும்...



விழிகள் வரையும் கோலத்திற்கு விதியின் கோடுகளால் 

வழிகள் எங்கும் புள்ளியிட்டு மதியின் விளையாட்டால்

மொழிகள் கரையும் காலத்திற்குள் ஆசையின் உலகத்தில்

பழிகள் யாவும் பார்க்காமல் தொடர்வது தான் காதலாகும்...



எவ்விடம் எக்குலம் என்று ஏதும் எண்ணாது அக்கணம்

அவ்விடமே சொர்க்கமென நினைந்து உயிர் வளர்க்கும்

எவ்வித உணர்வுகளுக்கும் ஊக்கம் கொடுத்து தொடரும் 

அவ்வித மயக்கத்தில் உள்ளம் நனைவதே காதலாகும்...



காமத்துக்கு முன்தோன்றி பூவாய் மலர்ந்து கனிந்த

யாமத்துக்கு பின்தோன்றும் விடியலைச் சேர்ந்திடும்

ஏமத்துக்கு முன்தோன்றி  துணையாகும் அவளுடைய

நாமத்துக்கு பின்தொடரும் பேரின்பமே காதலாகும்...



நாசியில் சுவாசமாய் நாளெல்லாம் ஒற்றுமையாய்

ஆசியில் தெய்வமாய் ஆதார தீபமாய் ஒளிவீசும்

காசியில் கங்கையாய் காதலெனும் வெள்ளமாய்

மாசியில் மகத்துவம் பெற்றிடவே வாழ்த்துக்கள்...



 
காதலைப் பற்றிய அறிவியலின் கூற்று:


ஆதியில் தோன்றிய காதலாயினும் - பின்

பாதியில் தோன்றிய காதலாயினும் - முன்

சாதியை மறந்த காதலாயினும் - எதுவும்

வேதியல் மாற்றத்தால் விளைவதே ஆகும்.



கயல்விழியின் ஈர்ப்பால் தொடரும் ஆசையும் 

மையல்வழியின் சேர்ப்பால் பழகும் ஆர்வத்தில் 

முயல்கையில் தோன்றுகின்ற காதலாயினும்

இயற்பியல் மாற்றத்தின் விளைவே ஆகும்...



விலங்கியலாய்த் தோன்றிய மனிதனும் தன்னுடைய

கலங்கியலாய் இருந்த எண்ணமும் வெளிப்பட்டுத்

துலங்கிடவே தனக்கொரு துணைதேடி அலைந்து

நலங்கெடாத நங்கையிடம் காதல் கொண்டான்...

ஒருகையோசை...

உணர்வுகளில் ஊடுருவும் வலியை

உருவத்தின் தனிப்பட்ட பொலிவை

உள்ளந்தனில் மறைக்கப்பட்ட நலிவே

ஒருகையோசையின்  ஒலியே ஆகும்...



விரலிருந்தும் மீட்டும் வீணையில்லை - முத்துப்

பரலிருந்தும் மோகனவாயின் நகையில்லை - கத்தும்

குயிலிருந்தும் கூவும் அழைப்பில்லை - கொத்தும்

மயிலிருந்தும் தாவும் அணைப்பில்லை...



விளக்கிருந்தும் விழியருகில் ஒளியில்லை - மனதில்

விளக்கமிருந்தும் விரகத்தில் தெளிவில்லை - ஆற்றில்

கொக்கிருந்தும் கொத்திவிட மீனில்லை - எட்டுத்

திக்கிருந்தும் மதியொளி  வீசிட வானில்லை...



பூவிருந்தும் அள்ளிச் சூடிடத் தலையில்லை - மடல்

பூவிரிந்தும் துள்ளி ஆடிடும் நிலையில்லை - உடலில்

நோவிருந்தும் பள்ளி சேர்ந்திடத் தடையில்லை - உள்

நோக்கிருந்தும் எள்ளி நகையாடும் இடையில்லை...



சிலையிருந்தும் செதுக்கும் உளியில்லை - கண்ணில்

சோகம் ததும்பி  வடிக்கும் துளியில்லை - பெண்ணில்

கலையிருந்தும் மயங்கும் வழியில்லை - எண்ணில்

கருத்திருந்தும் இயங்கும் மொழியில்லை...



விதியிருந்தும் சேர்ந்து வாழும் திறனில்லை - மேலும்

விலகிச் சென்றால் வேறேதும் அறமில்லை  - நாளும்

மதியிருந்தும் தேர்ந்து வாழும் பொறுப்பில்லை - அதை 

மனதிலிருந்து சொல்வதற்கும்  மறுப்பில்லை...



விடையிருந்தும் வினவுவதற்கு இடமில்லை - இனி

விடுத்துச் செல்ல வேறெங்கும் தடமில்லை - கையில்

குடையிருந்தும் நனைவதற்கு மழையில்லை -  காலம்

கடந்து நினைப்பதற்கு இதுவும் பிழையில்லை...

ஏக்கம்...

உருவம் வளர்ந்த பின்

உள்ளத்தில் படர்ந்தது

ஏக்கம்...


பருவம் கிளர்ந்த பின்

பக்குவமாய் தொடர்ந்ததன்

தாக்கம்...


புருவம் உயர்ந்த பின்

பூமடல் மெல்ல திறந்ததன்

நோக்கம்..


உணர்வுகள் எழுந்த பின்

உள்ளுக்குள் கடந்ததன் 

மார்க்கம்...


இரவுக்குள் ஒளிந்த பின்

இன்பத்தின் விடியல் தான்

யார்க்கும்...




     ...ஏக்கம்...

தொங்கிய முந்தானையில்

தவங்கிடந்த முள்ளிழுத்தது

அவன் தான் இழுத்தான் என

அவள் ஏன் நடித்தாள்...?


ஏங்கிய அவனுக்கு முன்

முந்தியது அந்த முள்ளா...?

இழுக்க மறந்து சிக்கிய

முந்தானையின் உள்ளா...?

மாறி வரும் உலகம்...

ஆசையின் அளவும் பெருகியதால்

ஆடையின் அளவும் குறுகியது...

உணர்வுகளின் அளவும் பெருகியதால்

உள்ளத்தின் அளவும் குறுகியது...

ஓசையின் அளவும் பெருகியதால்

உரையாடும் அளவும் குறுகியது...

பணத்தின் அளவும் பெருகியதால்

பண்பாட்டின் அளவும் குறுகியது...



மாறி வரும் உலகம் ஆசையில்

ஊறி வரும் உலகம் அறிவியலில்

தேறி வரும் உலகம் நோயில் முன்

ஏறி வரும் உலகம் நவநாகரிகமாய்...

  ...மாறி வரும் உலகம்...


தூசினில் தோன்றிய இவ்வுலகம்

மாசிலாது இருந்தது அப்பொழுது

மாசுபட மனிதனின் படைப்பும்

காசுபட கறை கொண்டது...



நதிகளும் மலைகளுடன் தோன்றிய

விதிகளுடன் இவ்வுலகம் மனிதனின்

ஆக்கிரமிப்பில் மறைந்தது கொஞ்சம்

உட்கிரகித்தால் மாறுவது கொஞ்சம்...



உழவொன்றே தொழிலாகி இருந்து

சுழன்று கொண்டிருந்து உழைப்புடன்

வளர்ந்த சமுதாயமும் இப்பொழுது

தளர்ந்தது ஏனைய தொழிலால்...



களவுகளும் பெருகியது பணத்தால்

செலவுகளும் பெருகியது நினைத்தால்

நாகரீகமாய் வளர்ந்த உணர்வும்

நான்கு கால்களில் நடந்ததால்...



ஆடையும் ஆசையும் வளர்ந்தது

ஓடையும் ஆறாய் நிறைந்தது

நிலந்தனில் ஆவலும் பிறந்தது

நிர்வாண நிலையில் மறைந்தது...

ஏனென்றும் தெரிவதில்லை?

ஏன்...?

ஏனென்றும் தெரிவதில்லை

ஊனென்றும் புரிவதில்லை

வானொன்று தானதில்

வாழ்வொன்று தான்...

ஏனதில் உயிரொன்றும்

ஆனதில் உணர்வென்றும்

நீருக்குள் மீனைப் போல்

பாருக்குள் பல பேருக்குள்

ஒளிந்து நீந்திக் கரை காண

நெளிந்து செல்லும் கோலங்கள்...





பெண்...

தூக்கிக் கொடுப்பவளும்

தூக்கி விடுபவளும்

பெண் தான் - மொழியும்

நாக்கில் இருப்பவளும்

ஆக்கித் தருபவளும்

பெண் தான் - பொழுதுப்

போக்கில் வருபவளும்

ஊக்கம் தருபவளும்

பெண் தான் - சுமந்து

யாக்கைத் தருபவளும்

வாக்கைப் பெறுபவளும்

பெண் தான்...

 
பொருள்:  ஊன் - சதையுடன் கூடிய உடம்பு, பார் - உலகம், தூக்கு - ஆராய்ந்து அல்லது காலம் நீட்டித்து,

ஆக்கி - சமைத்து (உணவு மற்றும் உடல்), மொழிதல் - பேசுதல், ஊக்கம் - நம்பிக்கை, யாக்கை - உடம்பு,

கோலமயில்...

பூசல் தொடுக்கும் காலையில் போராடி எழுந்து

புனல் தனிலே பூவுடல் நடுங்க நீராடிக் குளித்து 

வாசல் தெளித்து வளமான மங்கையவள்

வனப்பான மேனியிலே ஆடைப் புனைந்து

பின்னாமல் கார் கூந்தல் விரித்ததன் மேலே

படரவிட்டு  கருஞ்சாந்துப் பொட்டிட்டு இல்லை

அன்னாமல் இருக்கும் இடையசைத்து மெல்ல

அன்னத்தின் நடையசைத்து அமர்ந்தெழுந்து

குலுங்காத தனமும் குளிரின் நெருக்கமும்

கொட்டியளக்கும்  மாக்கோலத்தின் அழகும்

அலுங்காது அடியெடுத்து முகத்தில் விழும்

அந்த முடிதிருத்தி  பூக்கோலம் வரைகின்றாள்

காலமகள் பெற்றெடுத்த கன்னி மயிலுந்தன் 

கால்கள் நடமாடி வரையும் ஓரழகும் வளர்

கோலமயில்
தோகையின் எழிலெல்லாம் 

கூடி என்னை வெல்லும் பேரழகன்றோ! 

கவித்துளிகள்...

ஓடுகின்ற ஆற்றினில் விழுந்த மழைத்துளிப் போலே நான்

தேடுகின்ற எண்ணத்தில் எழுந்த கவித்துளிகள்...


கூடுகின்ற கரையினில் எழுந்த அலைகளைப் போலே நான்

நாடுகின்ற உள்ளத்தில் விழுந்த கவித்துளிகள்...




எண்ணம் கலைப்படும் போது

எழுத்தும் தலைப்படுகிறது...


உள்ளம் நிலைப்படும் போது

உணர்வும் கலைப்படுகிறது...


உருவம் சிலைப்படும் போது 

பருவம் நிலைப்பெறுகிறது...


பெண்ணும் எதிர்ப்படும் போது

கண்ணும் புதிர்ப்படுகிறது...


கருத்தும் பலப்படும் போது

கவியும் புலப்படுகிறது...


உண்ணும் கலந்தொடும் போது 

உடலும் பலம் பெறுகிறது...


பெண்மை புலப்படும் போது 

பேரின்பம் வலம் வருகிறது...


காமம்  வலம் வரும் போது

காதல் புலம் பெயர்கிறது...


உண்மை நிலையறியும் போது 

உறவும் கலைப்படுகிறது...

பொங்கல் வாழ்த்து...

கார் பெருகி மழை பொழிந்து நதியெங்கும் 

நீர் பெருகி வயல் வழி ஓடி பயிர் வளர்ந்து

ஏர் பெருகி உலகெங்கும்  உழவு செழிக்க

ஊர் பெருகி உவகையுடன் கொண்டாடும்

சீர் பெருகிச் சிறந்திட வாழ்த்துகிறேன்...



கழைய வேண்டியவற்றை உள்ளதிலிருந்து கழித்து

உழைப்பினையும் உடலின் உறுதியையும் பெருக்கி


தழைக்கும் நல்வாழ்வினை  உணர்வினில் வகுத்து

அழைக்கும் அன்பும் மகிழ்ந்திட பொங்கல் வாழ்த்து...





உயிர்கள் உய்யவும்

பயிர்கள் செய்யவும்

பயன்படட்டும் இவ்வாண்டு...

பலன்பெறட்டும் நம்மக்கள்...



பொங்கலோ பொங்கல்...



உள்ளத்திலே உணர்வுகள் பொங்கட்டும்...

உலகத்திலே உழவுகள் பொங்கட்டும்...

வள்ளத்திலே உணவுகள் பொங்கட்டும்...

வழக்கத்திலே  உவகையும் பொங்கட்டும்...

வெள்ளத்திலே நதிகளும் பொங்கட்டும்...

விளக்கத்திலே மதியும் பொங்கட்டும்...

பள்ளத்திலே அருவிநீர் பொங்கட்டும்...

பழக்கத்திலே பண்பாடும் பொங்கட்டும்...


வள்ளம்  - கிண்ணம்

புத்தாண்டு நல்வாழ்துக்​கள் 2013...

கடந்த ஆண்டில் எடுத்த கடமைகளைச் செய்ய

நடந்து வந்த தூரத்தை இன்னும் கடப்பதற்காகவே

தொடர்ந்து வரும் இந்த ஆண்டிலும் முயற்சியோடு

நடந்து அவரவர் இலக்கை அடைய வாழ்த்துகிறேன்...




ஈராயிரத்து பதிமூன்றாம் ஆண்டில் அடிவைத்தாலும்

ஓராயிரம் ஆசைகளின் படியில் உள்ளம் இருந்தாலும்

சீராயிரம் எண்ணங்கள் சிந்தனையின் பிடிவைத்தாலும்

ஏராயிரம் செழித்திடவே என்னுடைய வாழ்த்துக்கள்...




வீடு கடந்து மனையாள் மதி கடந்து வீதி நடந்து

நாடு கடந்து வினையால் விதி விட்ட வழி நடந்து

ஏடு கடந்து சிந்தையின் கதி நடக்க விழி நடத்தும்

பாடும் தொடரும் ஆசையும் பயன்பட வாழ்த்துக்கள்...





கேட்டதெல்லாம் கிடைக்கட்டும்

விட்டதெல்லாம் தொடரட்டும்

தொட்டதெல்லாம் துலங்கட்டும்

பட்டதெல்லாம் தளிர்க்கட்டும்...



விழி பார்த்து நடந்த வாழ்வினிலே

கை கோர்த்து கடந்த பொழுதைப்போலே

வழி பார்த்து  இனிவரும் நாளையும்

மெய் சேர்ந்து  கடந்திட வாழ்த்துகிறேன்...




அகப்பையில் புகப்பட்ட ஆசைகள் யாவும்

நகம்கையில் வளர்வதைப்  போலே வளர்ந்து

யுகம்கையில்  கிடைத்ததென  வாழ்ந்து வந்தால்

சுகம்கோடி உன்னைச் சுற்றித் தொடராதோ? 



தீர்மானங்கள் எடுக்கவும்

ஏர்மானங்கள் காக்கவும்

போற்குணங்கள் மறையவும்

நீர்நிலைகள் செழிக்கவும் 

இந்நாட்டிற்கு படிக்கட்டாக

இந்த ஆண்டு அமையட்டும்...



 


இதய கூண்டுக்குள் எழுந்த எண்ணங்கள் யாவும்

இந்த ஆண்டுக்குள் கைகூடிட வாழ்த்துகிறேன்...

ஏட்டில் எழுதாத கவியே!

ஒற்றைச் சொல்லாய் இருந்தவன் உன்னால் வாக்கியம் ஆனேன்...

நெற்றியில் பொட்டு வைத்துன் கைப்பிடித்ததென்   பாக்கியம் ஆகும்...



கடல் தாண்டினால் உடன் வருவது தாகம் மட்டுமே - உன்

உடல் தீண்டுமுன் கடன் தருவாய் மோகம் மட்டுமே...



கோழியின் சூட்டில் குஞ்சுகள் மகிழ்வதை போலே - உன்

ஊழியச் சூட்டில் என் உள்ளம் மகிழ்விப்பாய் பெண்ணே...

ஆழியின் பேரலை பொங்கி நுரையாவது போலே - உன்

சுழியத்தின் ஓரலை பொங்க வைக்கிறது என்னை...



தேடிய வாழ்வினில் நாடிய பொழுதெல்லாம் நன்மையாக வேண்டும் - உன்னுடன்

கூடிய பொழுதினில் தேடிய இன்பமெல்லாம் பன்மையாக வேண்டும் - முன்பின் 

ஆடிய இன்பத்தில் சூடிய உணர்வெல்லாம் பெண்மையாக வேண்டும் - பிரிவால்

வாடிய போதிலும் கூடிய நினைவெல்லாம் உண்மையாக வேண்டும்...



மழை விழுந்து மண்ணை நனைப்பதைப் போலே - உன்னால்

மனம் மகிழ்ந்து பெண்ணே உனை நினைக்க வேண்டும் நாளும்...



ஏட்டில் எழுதாத கவியே என்முன்

எழுந்து வந்தது போலே என்மனக்

காட்டில் பருகாத தேனாய் அன்புக்

காட்டிடவே வந்தவள் நீயே!



சங்கம் இல்லையென்றால் தமிழுக்கு சிறப்பில்லை - உன்

அங்கம் எனக்கென்றால் இனியொரு பிறப்பில்லை - அப்படிப்

பிறந்தாலும் உனக்கு நான் பிள்ளையாக வேண்டும் - என்மனம் 

திறந்தாலும் உன்னிடமே கொள்ளைபோக வேண்டும்...



விளக்கு அசையாமல் அதன் தீபம் அசைவதைப் போலே - உன்

உள்ளம் அசையாமல் உணர்வுகள் இசைய வேண்டும் எனக்காக...



உள்ளம் காற்றை நேசிப்பதைப் போலவே நானும்

உன்னை நேசிக்கின்றேனடி முப்பொழுதும்...

வெள்ளம் ஆற்றில் ஓடுவதை போலவே நானும்

உன்னாசையில் ஆடுன்கின்றேனடி எப்பொழுதும்...

உன்னையே நான் கேட்பேன்...

என் எண்ணத்தை எதிர்வைத்து

உன்னையும் அதன் முன்வைத்து

எது வேண்டும் என்று கேட்டால்...

உன்னையே நான் கேட்பேன்...

ஏனென்றால் என் எண்ணமெல்லாம்

நிறைந்தவள் நீயல்லவா.....

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....

சிந்தனையில் உருவான எண்ணங்கள் திறக்கவும்

சிந்தையில் எழுந்த நினைவுகள் அருகிச் சிறக்கவும்

நந்தன வருடத்தின் நாளெல்லாம் நன்றாகிட நாமும் 

வந்தனம் செய்து வரவேற்போம் இப்புத்தாண்டை... 

 



கதிர்படும் நெல்லெல்லாம் களத்துமேட்டில்

முதிர்பெற்று இல்லத்தில் சிறப்பதைப் போலவே 

எதிர்படும் சொல்லெல்லாம் உளத்துமேட்டில்

முதிர்பெற்று செல்லுமிடத்தில் சிறக்க வேண்டும்....
 



இடை நழுவிய ஆடையை மானம் காத்திடவே

இழுத்துப் பிடிக்கின்ற கைகளைப் போல காலத்தின்

எடை நழுவிய கடந்த வருடத்தின் மானம் காக்க

எதிர்வரும் நந்தனத்தின் உடை கொடுப்போம்....

வறுமை...

வாடிக்கையான நாட்களிலே வாழும் வாழ்கையிலே

வேடிக்கை காட்டும் வறுமை வந்து பாழ்வினையில்  

தேடிக்கை கூடும் உணவும் வாய்க்கு எட்டாமலும் 

பிடிக்கையில் சிக்காமலும் பரிதவிக்கும் பரிதாபம்...


பிறப்பு இங்கே...

இறப்பு அங்கே...

இரண்டுக்கும் நடுவே

இறைவனின் பொறுப்பு எங்கே?

நெரிஞ்சிப் பூவாய் நெருங்கும் கவலை...

கரையானைப் போல மனதிலே குடிகொண்டு 

கரையாத   ஆசையும் விடாமல் பிடிகொண்டு

நிரையாத  நினைவைத் தொடாமல் அடிகொண்டு 

வரையாத கவலைக் கோலத்தை வரைகின்றது...



கவலைக் காலைப் பிடித்து மெல்ல மெல்ல

கழுத்து வரை இழுத்து நீந்த முடியாத  நீர்த்

திவலைக்குள்  மூழ்கடிக்க முயலும் பிடியில்

திண்டாட்டம் கொடுப்பது தானதன் இயல்பு...



நோய் தீர்க்க முடியாத மருந்தாகவும் கவலை இங்கே 

ஓய்வு எடுத்தும் பிடியாத விருந்தாகவும் காலம் அங்கே

ஆய்வு எடுத்தும் விடியாத இரவாகவும் மனதும் இங்கே

உய்வு எடுத்தும் மடியாத வரவாகவும் தொடர்கின்றது...




பாகல் பழத்தைப் போல பழுத்தக் கிழவியையும் 

நாவல் பழத்தைப் போலச் செழித்தக்  குமரியையும்

நெரிஞ்சிப் பூவெனவே பாதம் பணிந்து கவலையும் 

நெரிஞ்சி முள்ளைப் போல மெல்ல அழுத்துமம்மா...


கடல் நீரில் மூழ்கி கர்மத்தைத் தொலைத்தாலும்

உடல் நீரின் தோன்றும் வியர்வையும் கவலைக்கு

உடன் ஊறிவரும் கண்ணீரையும் உலைத்தாலும்    

கடன் ஏறித் தொடரும் உப்புச் சுவையாய்...



முயலாமை பற்றிக் கொடுத்த கவலையும் ஆளாகியதன்  

இயலாமை முற்றிக் கெடுத்தக் கனவையும் நாளாகியதன்     


செயலாமை  விட்டுக் கொடுத்த நினைவும் தூளாகியதன்

புயலாமை தொட்டுக் கெடுத்த  நிலையானதம்மா...

சேலையைப் பற்றின்:

குதிங்காலைப் பிசக்குவதும் 

அதிகாலையில் கசங்குவதும்  

முரண்கொண்ட அழகைக்கூட  

அரண்கொள்ளப் பழகுவதற்குத்

திறங்கொண்ட மேனியிலும்

அறங்காக்கத் துணியும் சேலை...





கோபத்தை மூடிமறைக்கவும் நெஞ்சின்

தாபத்தை மூடித்திறக்கவும் எஞ்சிய

முன்னழகைப் பூட்டவும் மிஞ்சிய

பின்னழகைக் காட்டவும் கொஞ்சும்

வண்ணங்களைக் கூட்டும் வஞ்சியின்

எண்ணங்களைத் தீட்டும் சேலை...




குனிந்த அழகைப் பெண்ணோடு

தொனித்துக் கூறுவதும் - முன்

பணித்த எழிலை கண்ணோடு

துணிந்து கூறுவதும் - காலம்

கணித்த நிலையை  வனிதை

அணிந்துக் கூறுவதும் சேலை...



 முதல் இரவில் விலக்கினால் பெண்ணுக்கு இன்பம்

"முதல்" வரவின் இலக்கானால் ஆணுக்கு இன்பம்...

மறுநாள் காலையில் சேலையைத் துலக்கினால் பேரின்பம்...

மணநாள் மாலையின் அர்த்தத்தை விலக்கினால் பெருந்துன்பம்...




ஆசையை சேலையிலே விரித்திடுவாள்

அபிநயங்கள் அதன்மேல் புரிந்திடுவாள்

ஓசையின்றி வேலையைத் தெரிந்திடுவாள்

ஓயும்வரை கரையானாய் அரித்திடுவாள்  ...




பழகப் பழகப் பாலெனவே  புளித்திடுவாள்...

புளித்த கள்ளின் போதையெனக்  களித்திடுவாள்...

இளக இளக நெய்யெனவே  உருகிடுவாள்..

எதிரும் புதிருமாய் உன்னையே பருகிடுவாள்...





பெண்ணைப் பற்றி ஒரு பழமொழி உண்டு:

இதை வேறு விதமாகச் சொல்வார்கள்.

நான் சற்று நாகரிகமாக சொல்கிறேன் இப்படி:

அழுக்குத் தீரக் குளித்தவளும் இல்லை - கொண்ட

ஆசைத் தீரக் களித்தவளும் இல்லை...
           


அனுபவம் மிக்கவர்கள் இதற்கு மறுப்பு சொல்லலாமே!