Sunday, November 24, 2013

திருமண வாழ்த்துக்கள்...




ஒண்முக சுந்தரியாளோடு பன்முகமாகச்

சண்முக சுந்தரியாளைக் கைப்பிடிக்கப்

புவிவந்தமரும் பெருநாள் காணும்

ரவிவர்மனுக்குத் திருமண வாழ்த்துக்கள்...



இருமனம் ஒதுங்கும் சோலையில் இருவரும்

ஒருமனம் அணிகின்ற சேலையில் இனிவரும்

திருமணம் பரப்பிடும் வேலையில் இருவரும்

பெருமணம் கொடுக்கும் மாலையை நாடுங்கள்...



பார்த்ததை எல்லாம் அன்பினால் ஒன்றாகச்

சேர்த்ததை எல்லாம் பண்பினால் நன்றாகும்

வார்த்தையைப் பரிமாறிப் பசியாற என்றும்

சேர்ந்திருந்து பிரியாத சேவையில் கூடுங்கள்...



ஆவின் பாலை ருசிக்கும் இளங்கன்றைப்போல்

பூவின் தேன் சுவையில் பூலோகத்தை ரசிக்கும்

நாவின் சுவையை அறிந்து நாளின் சுவையறியும்

யாவிலும் அனுபவத்தைக் கண்டறியத் தேடுங்கள்...



மேகம் கூடி மழையாகி மண்ணை நனைப்பதன்

மோகம் தேடி ஆறாகப் பெருகியோடும் நீராகத்

தாகம் தணிக்கக் கரை இரண்டை நனைத்ததன்

தேகம் கொண்டு கடல் காணும் வரை ஓடுங்கள்...



எத்தனையும் எண்ணியதைப் பெற்று நலமோடு நாடிய

அத்துணையோடு குணம்காணக் குலம்வாழத் தேடிய

அத்தனையும் நிமலன் அருளாலே வலம்வரக் கூடிய

அத்துணையோடு வரம்பெற்ற கரம்பெற துதிபாடுங்கள்...





அன்புத்தொகையோடு கூடிய வாழ்வினில்

பண்புத்தொகை தனை தேடியதில் நாளும்

வினைத்தொகையைத் நாடி இருவரும்

உயிர்மெய்யாய் ஒன்றாகி உள்ளத்துப்

புணர்ச்சி விதியை மீறாமல் நன்றாகும்

உணர்வுக்குள் என்றாகி உலகத்தில்

பெயரெச்சத்தை விட்டுச் செல்லும்

வினையெச்சம் காண வாழ்த்துகிறேன்...



இலக்கணத்தோடு வாழுங்கள் - அந்த

இணக்கத்தோடு வாழுங்கள் - அன்பு

இலக்கியம்போல் வாழுங்கள் - உயர்ந்த

இலட்சியத்தோடு வாழுங்கள் - சேர்ந்த

இல்லாளோடு வாழுங்கள் - தேர்ந்த

எல்லாவற்றையும் பெற்று வாழுங்கள்...



முனைப்போடு வாழுங்கள் - காதலாள்

நினைப்போடு வாழுங்கள் - மாதவள்

இனிப்போடு வாழக் கைப்பிடித்த காலக்

கணிப்போடு வாழுங்கள் என்றும்...






வாழ்த்துவது என் கடமை

வாழ்வது உன் திறமை

போற்றுவது என் கவிதை (ப்)

போல் வாழ்வது உன் திறமை...

No comments:

Post a Comment