Tuesday, January 27, 2015

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...



செண்டாடிய பொழுதுகளை வண்டுகள் மறந்தாலும்

திண்டாடிய பொழுதுகளை காலத்தால் மறந்தாலும்

கண்டாடிய நினைவுகளை கவனம் தான் மறைத்தாலும்

கொண்டாடிய பொழுதுகளை உள்ளம் மறப்பதில்லை...



ஓராயிரம் நினைவுகளோடு புத்தாண்டும் தொடங்கிப்

பாராயிரம் வழிகளில் நாம் பகுத்துண்டு நடந்தாலும்

ஈராயிரத்துப் பதினைந்தாம் ஆண்டும் தொடங்கட்டும்

நாராயிரத்துப் பூக்களின் மாலையெனவே மாறட்டும்...



நில்லா உணர்வுகளின் கடிவாளத்தைப் பிடித்ததன்

பொல்லா நினைவுகளை ஓரிடம் நிறுத்தியதோடு

வல்லா நிலையாக வாழ்க்கையின் பாதையிலே

எல்லா வளமும் பெற்று இன்பமுற வாழ்த்துக்கள்...



மண்ணில் ஊறிய நீரைப் போலவே மகிழ்வதை

எண்ணில் தோன்றிடும் நினைவுகளால் நெகிழ்ந்து

கண்ணில் ஏறிய காட்சிகளைக் கருத்தொருமித்த

பெண்ணில் கண்டு ஆனந்தமடைய வாழ்த்துக்கள்...



கோடுகள் நேர்நின்றால் கோலமாவதில்லை அதனால்

கொஞ்சம் வளைந்து கொடுத்துப் பயணித்து பள்ளம்

மேடுகள் தன்னைக் கடந்த பாதையைக் கோலமாக்கிய

நெஞ்சம் நிலைத்துப் பூமியில் வாழ்ந்திட வாழ்த்துக்கள்...



உளியில் தோன்றாத அழகை உள்ளமதில் நேர்நிறுத்தியக்

களிப்பில் தோன்றிய சிலையின் உருவம் போலவே வான்

வெளியில் தோன்றாத புதுத் தாரகையாய் உருப்பெற்று அன்

பளிப்பாய் தோன்றிய வாழ்கையை அமைத்திட வேண்டும்...



கடந்த ஆண்டில் தொட மறந்ததையும்

நடப்பு ஆண்டில் கை விட்டதையும்

நடக்க இருக்கும் புதிய ஆண்டில்

தொட்டிடவும் தொடர்ந்திடவும்

வாழ்த்துக்கள்...



எண்ணியது யாவும் நடந்திடல் வேண்டும்...

பண்ணிய செயல்கள் பயன்பெற வேண்டும்...

திண்ணிய நெஞ்சம் தினம் தினம் வேண்டும்...

கண்ணியமாய் வாழ்வைக் கடந்திடல் வேண்டும்...



நாளுக்கு நாள் நன்மையைத் தேடிட வேண்டும்...

நன்மைக்குள் உண்மையை நாடிட வேண்டும்...

உண்மைக்குள் பெண்மையைத் தேடிட வேண்டும்...

பெண்மைக்குள் அன்பின் தன்மையை நாடிட வேண்டும்...



இருண்டு விடிவதல்ல விடியல் - உழைத்துக் கொண்டு

இருக்கும் கைகளின் பிடியில்...

விழுந்து ஓடுவதல்ல வெள்ளம் - விடா முயற்சியால்

எழுந்து ஓடுவதன்றோ உள்ளம்...

No comments:

Post a Comment