Tuesday, June 16, 2020

தமிழரைக் கண்டால் தமிழிலேயே உரையாடுங்கள்

தமிழ் பற்றிய சிறு ஆய்வு - நாகரீகத்தால்

தற்காலத்தில் அதிலே ஒரு தொய்வு...

கண்ணதாசனும் தான் கடைசியாக எழுதிய கவிதையிலே

இதனையே வற்புறுத்துக்கிறார்...



உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர்.
அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.
அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட
கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார்.

அக்கவிதையே அக்கவி எழுதிய கடைசி கவிதை.

மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -இங்கு


மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்

தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற

தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!!!


ஆம் நாமும் நம்முடைய பிள்ளைகளைத் தமிழ் பேசச் செய்து வைப்போம்...


மகாகவி பாரதியும் இதையே தான் தொகுத்துரைத்தார்:

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!



எந்த கொரியனோ அல்லது சீனனோ எடுத்த எடுப்பிலே

அடுத்த மொழியிலே உரையாடுவதில்லை,

தன் மொழியிலே தான் உரையாடுகிறார்கள்...

ஆங்கிலத்தில் பிள்ளைகள் படித்தாலும் வீட்டிலே தமிழ் பேச அனுமதியுங்கள்...

பாங்கான தமிழைப் பிழையின்றிப் பிள்ளைகள் பேசப் பேச வெகுமதி அளியுங்கள்...




"மம்மி என்றது குழந்தை -

அம்மா என்றது மாடு" - எங்கோ படித்த கவிதை


தற்கால வாழ்வியலை விளக்கும் அற்புதம்...




டாடி மாமி என்பதில் பெருமையில்லை -

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாளைப் பாருங்கள்...

ஆம்

ஆண்டாள் - தமிழையே ஆண்டாள் -

தமிழைத் தவிர வேறெதையும் சீண்டாள் -

இறைவனையே மணாளனாய் பூண்டாள்

இதைத் தவிர வேறாரையும் வேண்டாள்...



-----------------------------------------------------------------------------------------------

மழலைப் பெயர்களையும் தமிழிலே தேர்ந்தெடுங்கள்...

நிழலைப் போலே அதன் பின் தொடர்ந்து சென்றிடுங்கள்...

விழலைப் போலே வீண் வாதங்கள் தவிர்த்திடுங்கள்...

குழலைப் போலே இனிதாகப் பேசி மகிழ்ந்திடுங்கள்...



வாய்மொழிகள் பல இருந்தாலும் அதைக் கற்றாலும் - நம்

தாய்மொழி தனை மறவாது பேசி வாழ்வோம் - இனிய

கனியிருப்பக் காய் கவர்தல் முறையாமோ? - எனினும் நாம்

நுனிநாவில் தமிழ் மொழியைத் தவழச் செய்திடுவோம்!



வலிக்கின்ற போது அம்மா என்றழைப்போம் - காதல்

பொலிகின்ற போது அன்பே என்றழைப்போம் - பாசம்

அழைக்கின்ற போது அப்பா என்றழைப்போம் - பக்தி

திழைக்கின்ற போது இறைவா என்றழைப்போம்...



தமிழரைக் கண்டால் தமிழிலேயே உரையாடுங்கள் - ஆம்

அமிழ்தக் கடல் நீந்தி அதிலே கரை தேடுங்கள் - வேறிடம்

சென்றாலும் மறவாது தமிழிலே கதை பேசுங்கள் - வேறுபட்டு

நின்றாலும் உறவோடும் சிறப்போடும் நகையாடுங்கள்...



இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேலான இலக்கியங்கள் பல

திரண்ட மொழியாகும் தமிழ் - ஆயினும் தற்காலம் நாவிலே

பிறண்ட வேற்று மொழியாலே தமிழும் தொய்வடைந்து

வறண்ட நிலையிலே இருப்பதால் நீரை வார்த்திடுவோம்...



ஆதிச்ச நல்லூராம் இருபதாயிரம் ஆண்டுக்கும் பழமையென

போதித்த ஆய்வினை சற்றே நினைவு கூறுவோம் - எனவே நாம்

பாதியில் வந்த மொழிகள் சில பேசினாலும் - தாய் மொழியாம்

ஆதியில் தோன்றியதன் காரணத்தால் தமிழில் பேசிடுவோம்...



பண்பாட்டிலே மேம்பட்ட மொழியாகும் தமிழே - நம் குலப்

பெண்பாட்டிற்கும் ஏற்ற மொழியாகும் அதுவே - அறிவியல்

கற்போர்க்கும் தீர்வு பல கொடுக்கும் மொழியாகும் - செறிந்த

முற்போக்கு சிந்தனை எல்லாம் தோன்றிய நல் மொழியாகும்...



வள்ளுவன் சொல்லாதது ஏதும் இல்லை - மனிதப் பயன்பாட்டில்

கொள்ளுதற்கு அதுவன்றி ஏதும் உண்டோ - வாழ்வுமுறை திறம்பட

தெள்ளுத் தமிழ் மொழியில் சிறந்த காப்பியங்கள் பலவுண்டு - பூக்

கொள்ளும் தேன் மிகுந்த சுவை இலக்கியங்கள் தானுமுண்டு...



இன்பம் கொள்ள சிற்றிலக்கியங்கள் சிலவுண்டு - பக்திஎனும்

பண்புக்குள்ள பிரபந்தங்களும் உண்டு - காதல் ரசம் ஊரும்

கம்ப ராமாயணமும் கலிங்கத்துப் பரணியின் கடை திறப்பும்

அம்புலியாய் விளங்கும் அகநானுறும் உண்டே நம் மொழியில்...



போர் வீரனுக்கோர் இலக்கியமாம் புறநானுறும் உழவும் சிறக்க

ஏர் ஓட்டுபவனுக்குமோர் காவியமாம் ஏரெழுபது - அநீதிக்கு

சிலம்பம் எடுத்துரைத்த கண்ணகியின் மாண்பும் - விதியே என

புலம்பும் மனிதருக்கும் நாலடியார் நவின்ற நல் பாடமுண்டு...



முச்சங்கம் வைத்து வளர்ந்த தமிழ் - தற்கால நாகரீகத்தில்

முற்றிப் போய் முடங்கலாமோ? வேற்று மொழியினிலே

இச்சங்கம் போல் ஏதும் உண்டோ? மாற்று கருத்துக்குள்

இற்றுப் போய் அடங்கலாமோ? - தற்போதைய நிலையில்...



பற்று வைத்த பரத்தையின் பேரன்பால் தன் தாய்மொழிப்

பற்றை நாமும் மறக்கலாமா? வேறு வழியின்றி வாய்ப்பு

அற்றுப் போகும் நிலை வந்தாலும் தமிழ் மொழியன்றி

வேற்று மொழியில் சிறப்பு ஏதும் உண்டோ? உலக அரங்கில்...



மருத்துவத்தில் சித்தம் போல் சிறப்புமுண்டோ? அந்நிய

மருத்துவத்தில் அறியாத நோய்க்கும் மருந்துமுண்டோ?

பொறுத்துப் பார்த்தால் இத்தனை பெருமையும் வரை-

யறுத்துக் கூறும் மொழி வேறு ஏதேனும் உண்டோ?



பாரில் உண்டு பல மொழிகள் - இருந்தும் அதன்

வேரில் எங்கோ தமிழின் சுவடுண்டு - வார்க்கும்

நீரில் அதுவும் வேறுபடலாம் - எனிலும் நம்மில் பல

பேரின் பேச்சாலே நிலைபெற்று இங்கு வாழ்வதுண்டு...



எம்மொழிகள் பாரினிலே இருந்தாலும் செறிவுமிக்க நல்

மும்மொழிகள் உண்டே அதிலும் மூத்ததொரு மொழியாம்

செம்மொழியெனும் அடையாளம் பெற்ற தமிழ் மொழிபோல்

அம்மொழிகள் அமைவதுண்டோ காண் இந்த உலகினிலே...

(மும்மொழி - தமிழ், சீனம், கிரேக்கம்)



பொதிகை மலை தோன்றி புறப்பட்ட மொழியானது

அதிகம் வளர்ந்தது மதுரையெனும் நகரினிலே பின்

குடிபுகுந்தது தஞ்சைத் தரணியெனும் காவிரித் தாயின்

மடிபுகுந்து மண்பயனுற மக்கள் நலம் பெற்ற தமிழே!



திராவிட மொழிக்கெல்லாம் தாயானாள் - சங்கத்திடைத்

திரண்ட புலவர் கையில் சேயானாள் - அவர்கள் பாடித்

தாலாட்டிச் சென்றதெல்லாம் காவியமன்றோ? அதன்பின்

வாலாட்டி செல்வதெல்லாம் திராவிடத்தின் கூறு அன்றோ!



வந்தாரை வாழ வைத்தே தரணியில் வாழ்கின்றது - அது போல் 

நொந்தாரையும் தாழ வைக்காமல் சமமாகப் பாவித்துப் பாதி

வெந்தாரையும் பொறுத்துக் கொண்டே தாம் வாழக் கவிபலத்

தந்தாரையும் பெருமைப் படுத்துகின்ற அற்புதம் தான் என்னே!



கலைஞர் என்று பேர் கொண்டு வாழ்ந்தோரும் உண்டு எனில்

கவிஞர் என்று பேர் பெற்றுச் சிறந்தோரும் உண்டு பொதிகை

மலைஞாயிறு போல் உதித்து மறைந்தோரும் உண்டு இன்றும்

மண்ணில் நிலையாக வாழ்கின்றது அவர் வார்த்த செந்தமிழே!



எத்தனை பேர் வந்தாலும் தன் இளமைக் குன்றாமல் சுவை

அத்தனையும் கொடுத்த கம்பர் வள்ளுவர் இளங்கோ போல்

தமிழுக்கு மெருகூட்டிய கவிப்பெருமக்கள் உண்டோ? எனில்

அமிழ்தினும் இனிய தமிழுக்கு அவராலே பெருமையுண்டு...



என்னாலும் எள்ளளவே இயம்பிட்டேன் தமிழின் புகழைத்

தன்னாலும் தரணியிலே மென்மேலும் சிறந்திடவே நம்

எல்லோரும் முயன்றிடுவோம் தம் மனதோடு மட்டுமே

நில்லாமல் நாவாலும் சுவைத்திடுவோம் தமிழமுதை...









பொருள் விளக்கம்:

விழலை - உதாவாத நிலம், பொலிகின்ற - பிரகாசிக்கின்ற, தெள்ளு - தெளிந்த,

அம்புலி - நிலவு, இற்று - மெலிந்து, செறிவு - செழிப்பு, நொந்து - நிலை கெட்ட,

வரையறுத்து - குறிப்பிட்டு, மும்மொழி - தமிழ், சீனம், கிரேக்கம் ஆகிய மும்மொழி,

மலைஞாயிறு - மலையிடை உதிக்கின்ற சூரியன்,

கீர்த்தியுள்ள வரை மறக்குமோ?

வெகு நாட்களுக்குப் பிறகு

எண்ணங்களின் மறு தோன்றல் -

கவிதையெனும் மொழி தோன்றல் - உணர்வாய்

அவிழ்ந்த சித்திரமா ? இல்லை உள்ளமதில்

குவிந்ததன் விசித்திரமா ?

படித்தவர்கள் கூறவும்.





என் கண்ணே! என்னே!

நேர்த்தியான அழகு - இளமையின்

கீர்த்தியுள்ள வரை மறக்குமோ?

ஓ பெண்ணே! கோடிட்ட இடத்தைப்

பூர்த்தி செய்யும் எழிற் கோவிலில்

மூர்த்திசெல்லும் போது திறக்குமோ?



அன்னவளைத் தேன்கலந்து

வார்த்து செய்த வனப்பை எல்லாம்

சேர்த்து அனுப்பிய தனமல்லவா?

என்னவள் தான் மண் அளந்து

அசைகின்ற பேரழகு கண்டு இன்பத்தின்

திசைதேடத் தூண்டும் மனமல்லவா?


முன்னமவள்

தலைமுதல் பாதம் வரை நழுவியதோர்

கலையழகு சேர்ந்தமைந்த இடையல்லவா...

பின்னலவள்

மறைத்து இருக்கும் மன்மத பீடம் தனை

குறைத்துக் காட்டுகின்ற உடையல்லவா.
..





குறுநகை முகத்தின் குவியலோ - அதை

கவர்ந்து இழுக்கும் அதரப் புதையலா?

சிறுபிறை தவழும் நெற்றியோ - அதைச்

சிந்தித்தால் எனக்கென்றும் வெற்றியா?



கருநாவல் மிதக்கும் விழிகளோ - அதைக்

கொண்டாடும் கவிதை மொழிகளா?

ஒருசாயல் தாமரை வதனமோ - அதன்

ஒத்த மறுசாயல் மயக்கும் அல்லியா?



தென்னங்கள் ஊறிய பூவிதழ் உறைகின்ற

கன்னங்களா? - இடைவழியின் அடையாளச்

சின்னங்கள் போலே தேனிதழ் மறைகின்ற

எண்ணங்களா? எதை நான் சொல்வேன்...



மூங்கிலென செழித்த தோள்களோ - அதன்

முன்னாலே தோற்றிடும் வாள்களோ?

ஓங்கிய வாழைதான் தொடையோ - அதன்

ஓரத்தில் நீர் பாய்கின்ற ஓடையோ?



அடைபட்டு கொண்டிருக்கும் ஆசையும்

அணை மீறி அவளைக் கண்டு ஓர் நாள்

தடைபட்டு கொண்டிருக்கும் உணர்வைத்

தாண்டி இடை வழியின் பாதை தேடி

உடைபட்டு கொண்டு வெளிப்படும் போது

உள்ளம் தான் உவகை கொள்ளாதோ?



மாறுபட்ட உணர்வை நாடியே நாளும்

மயக்கும் மாலையிதழ் ஊறித் ததும்பும்

சாறுபட்ட நாவால் இன்பரசம் பருகச்

சிவந்திருக்கும் காமம் வெளுக்காதோ?



இரவைப் பகலாக்க இனியவளைக் கிடத்தி

இன்பத்தின் வாசல்வழி நுழைந்து ரசித்து

உறவை அகலாக்கி உணர்வைத் திரியாக்கி

உள்ளமும் நெய்யாகத் தீபமது எரியாதோ?



மைவிழியாள் அவளை அணைத்து பெண்

மைவழியும் இதழோரம் சுவைத்து உண்

மெய்வழியில் காமரசம் பெருகிக் கலந்து

மையல் கொண்டால் பாபமது பிரியாதோ?



கிண்ணமுலைக் கண்டு கிளர்ச்சி யுற்று

எண்ணமங்கே எழுந்து வளர்ச்சி பெற்று

திண்ணமுடன் நுழைந்து தளர்ச்சிகாணா

வண்ணம் கலந்தால் இன்பம் முடியாதோ?



பெண்ணமுதை பருகும் இதழும் காமக்

கிண்ணமதில் உருகும் சூடு கொண்டுக்

கண்ணிரண்டில் காணாததைக் கண்ட

பெண்தடத்தில் போதையும் வடியாதோ?



நதியது அலைகடல் கலந்தால் உப்பாகும்

விதியதில் அவள்உடல் கலந்தால் தப்பாத

மதியுமது காமத்திடல் நுழைந்து செப்பாத

கதியில் சாமத்துடன் கலந்தே விடியாதோ?



அப்பாலில் இரண்டும் மெய்யழகாய் திரண்டு

முப்பாலில் மருண்டு உணர்வெலாம் உருண்டு

முப்போதும் முனைப்புடனே முயங்கிப் புரண்டு

எப்போது முடியுமென அப்போது விரும்பாதோ?



இரண்டு மலைஏறி இடையிலே சிறு பள்ளம்

இனிதே தாண்டி இதழ் விரியும் பெரும்பள்ளம்

திரண்டு நிலைமீறி ஓடையிலே சிறு வெள்ளம்

தீண்டிப் பாய்ந்தாலே ”அந்த” மலர் அரும்பாதோ?



களவும் கற்றுமற - அது கற்றபின் அவளுடலைக்

கற்று நான் கடைத்தேறும் வழி காணத் தளறாமல்

உளவும் உற்றறிந்து - பார்த்தும் பழகிய எழிலான

உணர்வில் தனைமறந்த பொழுதும் திரும்பாதோ?



பலபாடம் படித்தும் பயனில்லை என் நினைவில்

சிலபாடம் நிற்குமதுபோல சிந்தனையில் என்றும்

மனப்பாடம் செய்து ஒப்பித்த நாட்கள் உறவானால்

தினப்பாடம் பயிலும் மனமுவந்து நெருங்காதோ?



யாரும் சொல்லாத இன்பத்தை ஒருகைப் பார்க்கப்

பாரும் கொள்ளாத பயன்பெற நானும் அவளிடைத்

தேரும் செல்லாத பாதையில் தானும் பயணித்தால்

தீரும் என்றால் தீராது என்பேன் பேராசைதானோ?



ஊறும் கேணியும் ஊற்றுள்ளவரை வற்றாததாய்

மாறும் நிலையறிந்து மயங்கிப் பெருக்கெடுத்து

ஆறுபோல் பாய்ந்துக் கலந்தின்பக்கடலாடி கரை

ஏறும்நாள் தான் நிறைவேறும் ஓராசைதானே!



கரை சேருமா ? கடலாடிய திடலிலே உப்பின்

நுரை சேருமா ? உடலாடிய மடலிலே மப்பும்

அரை சேருமா ? களவாடிய உணர்வும் உப்பும்

வரை சேருமா ? உளமோடிய தீராசைதானோ?



சொர்க்கத்தின் திறப்பா ? - மதுவா? அதுவா? எனும்

தர்க்கத்தின் பிறப்பா ? எதுவோ - விழி ஆட்கொள்ளும்

மார்க்கத்தின் உறுப்பா ? - மோதுமோ? போதுமா எனும்

தீர்க்கத்தின் பொறுப்பாய் அமைந்த இன்பத்தின் சிறப்பா?














பொருள் விளக்கம்:

கீர்த்தி - புகழ், மூர்த்தி - விக்கிரகம், குறு நகை - உதடு குறுகிய நகை,

தனம் - செல்வம் மற்றும் மார்பகம், அதரம் - உதடு, வனப்பு - அழகு,

கோடிட்ட இடம் - தலை வகிடு, வதனம் - முகம்,

மன்மத - மனம் மதம் கொள்ளும், உண்மெய் - உண்ணுகின்ற உடல்,

நழுவியதோர் கலையழகு - கண் பார்வையில் இருந்து நழுவிய,

அப்பால் - அறம் மற்றும் பொருள், முப்பால் - மூன்றாவது பாலான இன்பம்,

உளவும் - ஆராய்ந்து, அகலாக்கி - சிறு விளக்காக்கி, உவகை - மகிழ்ச்சி,

பாரும் - உலகும், திடல் - மேட்டு நிலப்பகுதி, மையல் - காதல்,

உணர்வும் உப்பும் - உணர்வு பக்குவம் அடையும், கேணி - கிணறு,

மப்பும் - மயக்கம், அரை - இடுப்பு அல்லடு இடை,

தடம் மாறிய அணிகலன்கள்

ராமாயண காலத்தில் வானரங்கள் அறியாது செய்ததைத் தான்

இன்றைய பெண்கள் அறிந்து செய்கின்றனரோ?

ஆம். தடம் மாறிய அணிகலன்கள் என்ற பெயரிலே ஒரு கவிதை.

கவிதைக்கான பின்புலம் கம்பராமாயணத்தில் இருந்தே

எடுத்து ஆளப்பட்டுள்ளது.



அதற்கான பின்புலம் பின்வருமாறு சிறிய விளக்கம்:


ராமாயணத்தில் புஷ்பக விமானத்தில் சீதாதேவியை ராவணன் நாசிக் அருகே
பஞ்சவடி என்ற இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக இலங்கைக்கு தூக்கிச்சென்றபோது
ஹம்பி ( கர்நாடகா ) , லெப்பாக்‌ஷி ( ஆந்திரா ) வழியாக தன் தலைநகரை அடைந்தான்.
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் Nasik, Hampi, Lepaxi and SriLanka
இன்றைய வான்வழி ( விமான வழித்தடம் போல் ) நேர் கோட்டில் இருக்கிறது.
தங்கள் வனவாச காலத்தில் நாசிக் அருகில் இருந்த பஞ்சவடி என்ற இடத்தில்
ராமர், லெட்சுமணன், சீதை இருந்தனர். அங்கு அவர்கள் இருந்த காலத்தில் தன்னை
மணக்கச்சொன்ன சூர்ப்பனகை மூக்கை வெட்டிவிடுகிறான் லெட்சுமணன்.

அதன் காரணமாக நாசிக் ( ஹிந்தியில் நாஸி என்றால் மூக்கு ) என்று அந்த
ஊர் பெயர் வரக் காரணமானது. ரிஷ்யாமுக் பர்வதம் ( Hampi அருகில் ) ஹனுமன்
மற்றும் அவரது வானர கூட்டாளிகள் கூட்டமாக இருந்ததை பார்த்த
சீதை தனது நகைகளை கழற்றி துணியில் சுற்றி எரிகிறாள்.



இதைத்தான் கம்பர் கம்பராமாயணத்தில் அழகாக வர்ணித்திருப்பார்...

"அணியும் வகை தெரியாமல் வானரங்கள்
இடுப்பிற்கு உள்ளதை ( ஒட்டியாணம் ) கழுத்துக்கும்...
எழில் கழுத்துக்கு உரியதை இடுப்புக்கும்...
காதுக்கு அணியவேண்டியதை மூக்கிற்கும்...
மூக்கில் அணியும் மூக்குத்தியை காதுக்கும்...
மாட்டிக்கொண்டு அலைந்தன என்று"...




தடம் மாறிய அணிகலன்கள் -

தடுமாறிய கோலம் ஏனோ?

இடம் மாறியதன் காரணம்

இன்றைய நாகரீகம் தானோ ?



இடையணி மேகலை என்றொரு அணிகலன்

இருந்ததொரு காலம் - காலப் போக்கில் அது

உடையணிந்ததன் உள் ஒளிந்து உணர்விலே

உருவிய வாளைப் போலே மின்னியதாலோ?



மூக்கிலே துளையிட்டு பின் புத்தியும் தெளிவுற

மூக்குத்தி அணிந்ததொரு காலம் - அது காலப்

போக்கிலே இடம் மாறி மலையேறி கீழிறங்கிப்

போகத் தொப்புளில் பொலிவுற நன்னியதாலோ?



முன்கையில் வளையிட்டு பெண்கை வீசிவரும்

மென்னடைக்குத் தாளம் இசைக்கும் நயம் மாறி

பின்னது காலப் போக்கிலே காதணியாய் உருமாறி

பெருங்கூந்தலோடு கதைபேசப் பின்னியதாலோ?



காதணிந்த தோடுகளும் இரண்டில் ஒன்றானது

கோவைச் செவ்விதழ் நாவிலே இடம் மாறியும்

போதவிழ்ந்த கீழிதழ் மூக்கிலே மற்றொன்றும்

போனதன் காரணம் மோகமது கன்னியதாலோ?



தண்டையாடிய கால்களும் தன் நிலைமீறித்

தாளமிட்ட காலம் போய் மங்கையவள் பூக்

கொண்டையாடிய குஞ்சமும் கால வெள்ளம்

கொண்டு சென்ற இடமெங்கே? தடமெங்கே?



கூந்தலைப் பின்னிச்சென்றது ஒருகாலம் அதைக்

கலைத்து அலையாடவிட்டுத் தன் தலையாட்டும்

ஏந்திழையார் தனை மறந்த நாகரீகப் போர்வையிலே

எழில் மறைந்து போன இடமெங்கே? தடமெங்கே?



தழையாடை மெல்ல மெல்ல மாற்றம் பெற்று

தன்நிலை மாறி உதிர்ந்த காலவெள்ளப் போக்கில்

புழைமூடிய உள் காலுடையாய் உருமாறிப் பூப்

பெய்தும் வகையறியும் இடமங்கே! தடமங்கே!



முன்னழகைப் புதைத்த கலிங்கமெனும் உடை மாறி

முகப்பளக்கும் வட்டுடையாய் உருமாறி மெருகேறி

பின்னழகுக்கும் பேரழகைக் கொடுக்கும் வண்ணம்

பின்னல் கொடுத்த ஓரழகின் இடமங்கே! தடமங்கே!



பூட்டிய அழகிலே பொலிந்தது நங்கை தேகம் - வெளிக்

காட்டிய அழகெல்லாம் மலிந்ததன் மோகம் - நாகரீகம்

கூட்டிய அழகிலே தெரிந்தது மங்கை பாகம் - புதிதாய்

மாட்டிய அணிகலனால் போன இடமெங்கோ? தடமங்கே!



இடையென்பது பெண் அழகைத் தேடத் தான் தோன்றியதன்

உடையென்பது உள் அழகை மூடத் தான் தோன்றியதோ?

தடையென்பது உள்ளவரை தழுவி நிற்கும் இளமையும்

விடைதெரியாக் கேள்வியாகும் இடமெங்கோ? தடமங்கே!



வளையாடிய கைகளும் தாமரைப் பாதங்கள் பூமியில்

விளையாடிய நாட்களும் பூமறையும் பூவை தேகமதில்

துளைமூடிய அணிகலன்களும் பொலிந்த நல்லாடையும்

கிளையோடிய நாகரீகத்தில் போன இடமெங்கோ? தடமங்கே!



புடைவைத்துக் கட்டுவதால் புடவை எனும் பெயர் பெற்று

இடைமறைக்கக் கட்டியங்கு கன்னியவள் மேனியழகைக்

கடைவிரிக்க கூடாதெனும் நுட்பத்தோடு உருவாகியதோர்

உடைமாறி நீள் சல்லடம் ஆன இடமெங்கோ? தடமங்கே!



மார்கட்டு குலையாதிருக்க வாரணிந்த பெண்கள் இடைத்

தேர்தட்டு தான் மறைக்க பட்டுடை அணிந்த காலம் மெல்ல

தார்பட்டு மறைந்த சாலை மேலே மூளும் வெப்பம் தனில்

நீர்பட்டு மறைந்து போன இடமெங்கோ? தடமங்கே!













பொருள் விளக்கம்:


மேகலை - இடையில் அணிகின்ற ஓர் அணிகலன், நன்னியதால் - குறுகியதால்,

போதவிழ்ந்த - மொட்டுவிட்ட, கன்னியதால் - வெப்பமடைதல், ஏந்திழையார் - பெண்கள்,

தழையாடை - இடையில் அணிகின்ற உள்ளாடை, கலிங்கம் - மார்பில் அணிகின்ற உள்ளாடை,

வட்டுடை - பிரா, உள் காலுடை - பாண்டீஸ், பூமறையும் - பூ ஒளிந்த பெண்ணுடல்,

புடை - பக்கம், நீள் சல்லடம் - சுடிதார், வார் - கச்சு அல்லது பிரா, பட்டுடை - பாண்டீஸ்.

இயற்கைப் பேரிடர்

இயற்கைப் பேரிடர் வருவது எதனாலோ?

செயற்கைப் பேரிடம் பூமியில் கொண்டதாலோ!



பாவலர் ஆயிரம் புடைசூழ ஆண்டது

நாவலன் தீவு எனும் ஓர் கண்டம்...

ஆம்

அதுவும் மறைந்தது எதனாலோ?



முறையற்ற உறவாலே

முடிந்தது ஓர் சகாப்தம்...

கரையற்ற கடலாகக்

காணாமல் போனதொரு கண்டம்...

லெமூரியா, நாக நாடு எனும் பேர் கொண்டது

சுமேரியாவுக்கு முன் தோன்றிய கண்டம்...

அமேரிக்கா முதல் இங்கிலாந்து வரை அறிஞர்கள்

ஆராய்ந்து சொன்னது எல்லாம் பொய்யன்றோ?




பனிக்காலம் முடிந்ததன் பூமியில்

தனிக்காலம் தோன்றியதன் விளைவாக...

கனிக்காலம் தோன்றிய பூமியில் பாவையும்

தனிக்கோலம் கொண்டதன் விளைவாக...



கற்காலம் தோன்றிய பூமியில் மக்களின்

சொற்காலம் ஊன்றியதன் வினையாக...

பொற்கோலம் கொண்ட பூமி மாறித்

தற்காலம் தோன்றியதன் வினையாக...



புனிதப் படுத்திக் கொள்கிறது பூமியும்

பஞ்சபூதத்தின் பேராற்றலாலே!

வனிதைப் பேரழகை மேலும் கீழும் காண

வஞ்சிக்க வளைத்தது நீராற்றலாலே!



ஆயிரம் காரணம் இருந்தாலும் நான் மொழிவேன்

ஆயினும் வேறு சில காரணங்கள் உண்டல்லோ...


மூன்றில் ஒருபங்கு தான் நிலம் - அது

தோன்றில் மறுபங்கு எல்லாம் நீர் தான்...

மூன்றில் ஒருபங்கு தான் பெண்மை - அதுவே

தோன்றில் மறுபங்கில் விளங்கும் உண்மை தான்...





சுனாமி வருவதன் காரணம்:

கன்னியவள் கடற்கரைக்கு சென்றாளே!

பின்னலிட்ட பருவம் தாங்கி நின்றாளே!



கால் நனைத்த அலையானது அவளிடை

மேல் நனைக்க நினைந்தே விரைந்தது...


சுனாமியெனும் பேரலையாய் எமனுக்கு

பினாமியெனும் ஓரலையாய் எழுந்தது...


இடைவெளியில் எத்தனித்த விதியானது

இடைவழியைத் தான் தேடி நிறைந்தது...


கடைவிழியாள் உச்சம் தொடத்தானே

உடைவழியே உயர்ந்தெழுந்து உட்புகுந்தது...


பள்ளம் பார்த்து தானே பாயுமந்த விதியை

வெள்ளமெனும் மதியாலே உரைத்தது...


ததும்பும் இளமை கண்ட அலையானது

வெதும்பிக் கரையில் நுரையாக உமிழ்ந்தது...


கள்ளம் இல்லா மனிதரையும் சேர்த்தே

உள்ளம் இல்லா கடலும் காவு கொண்டது...




பெருமழை வருவதன் காரணம்:

குடைபிடித்துப் போகின்ற பெண்மயில்

உடைபிடிக்க நினைத்தது மழைத்துளி...


நடைபயின்று போகின்ற அன்னமவள்

இடைபயில நினைத்து மழைத்துளி...


கள்ளிடம் இல்லாச் சுவையைப் பேரின்பம்

கொள்ளிடத்தில் காண நினைத்தது மழைத்துளி...


மலையிடம் காணா எழிலைத் தேவதையவள்

முலையிடம் காணத் துடித்தது மழைத்துளி...


புல்லிடம் காணா பசுமையைப் பெண்மையின்

உள்ளிடம் காணத் துடித்தது மழைத்துளி...


ஓடையில் பாய்ந்த வெள்ளமும் மங்கையின்

ஆடையில் பாயத் துடித்தது மழைத்துளி...


தேடையில் ஏதோ ஒன்று மறைந்ததை

சாடையில் கண்டு கொண்டது மழைத்துளி...


மழைத்துளி ஆசையில் பெருக்கெடுத்து

பிழைகொண்டு உருக்கலைத்து சென்றது...




பூகம்பம் வருவதன் காரணம்:

கன்னிமயில் கால் நடந்த அழகைக்

காண ஓர் நாள் பூமியும் நினைத்தது...


அனிச்சமலர் மெல்லிய பாதம் தழுவத்

தொனித்த மண்ணதைக் காணப் பணிந்தது...


பாதமே இத்தனை மென்மையென்றே பூமிப்

பாதாளமும் அதன் ஆழம் காண துணிந்தது...


வேதமே பொய்யாய் போன உலகிலே அவள்

பாதமே மெய்யெனும் சோதனையில் பிளந்தது...


பூவிலும் சிறந்த அழகைத் தேடும் தேகம்தனை

பூமியும் ஆவலில் ஆராய நினைத்தே அளந்தது...


முன் தூக்கிய கலையின் எழில் காணப் பூமியும்

பின் தாக்கிய நிலையில் மெதுவாய் விரிந்தது...


பூவையின் மேல் லோகம் காணும் நோக்கில்

பூலோகம் விரிந்ததில் கீழ் லோகம் தெரிந்தது...


"பூ" கம்பம் என்றே பொன்மேனியைத் தழுவிடப்

பூகம்பமாய் வடிவெடுத்து ஆட்கொண்டது புரிந்தது...




புயல் வருவதன் காரணம்:

கயல்விழியாள் கடைக்கண் நோக்கிடத் தென்றல்

புயல்வடிவில் தடையின்றிப் புறப்பட்டுச் சென்றது...


ஊற்றெடுக்கும் பெண்மையின் உள்ளழகை காணக்

காற்றடித்து அண்மையில் அகப்பட்டுக் கொண்டது...


சில்லென வீசும் குளிர்வாடைக் காற்றாய் உருமாறி

கொல்லென கொல்லாமல் குறைபட்டுக் கொண்டது...


நில்லென என்றால் நில்லாமல் மேலும் மெருகேறி

புல்லென மேனி சிலிர்த்திட சிறைபட்டுக் கொண்டது...


குனிந்து இருக்கும் ஓரழகைக் காணக் காற்றும்

கனிந்துருகிக் களித்திடத் தேகத்திடைப் புகுந்தது...


அணிந்த ஆடைக்குள்ளேத் தோன்றும் வெப்பம்

தணிக்கத் தாகம் கொண்டு தென்றலாய் புகுந்தது...


சுவாசம் புகுந்து இதயம் தொட்ட காற்றும் அவளின்

சுகவாசம் காணும் ஆவலில் அவ்விடம் புகுந்தது...


இவ்விதம் எல்லா அழகைக் கண்ட தென்றலும்

அவ்விதம் இல்லா ஆசையில் புயலென மிகுந்தது...




நெருப்பு வருவதன் (எரிமலை வெடிப்பதின்) காரணம்: 


எத்தனை நாள் உள்ளிருந்த வெப்பம் ஓர் நாளில்

அத்தனை வேகத்துடன் வெளியாவதும் ஏனோ?


பஞ்சணை துயில்கொள்ளும் பேரழகு மங்கையின்

நெஞ்சினில் காதல் கொள்ள வெளியாவது தானோ...


அஞ்சனம் தீட்டிய விழியோடு உறவாட நெருப்பும்

சஞ்சலம் கொண்டு சதிராடி வெளியாவதும் ஏனோ?


புகையும் நெருப்பும் அன்னவள் கட்டழகை ஆராயும்

வகையில் விருப்பும் புதிராக வெளியாவது தானோ...


சிகை முதல் அடிவரை தழுவிட நெருப்பும் பொன்

நகை மின்னும் நிறத்தில் வெளியாவதும் ஏனோ?


பருவத்தின் அழகை மேலும் உருக்கி பேரழகாக்க

உருகும் பதத்தில் நெருப்பும் வெளியாவது தானோ...


பூமடியின் வெப்பம் பருவமடைந்து உடைபட்டு

பூவையின் நுட்பம் காண வெளியாவதும் ஏனோ?


பின்னல் பூங்கொடியாள் மின்னல் கொடியிடையாள்

கன்னித்திரை விலக்கிடவே வெளியாவது தானோ...




ஆகாயம் மாற்றம் கொள்வதன் காரணம்:

மப்பும் மந்தாரம் கொண்ட மங்கை நல்லாள் -

தப்பும் தவறும் புரியத் தலைப்பட்டது ஆகாயம்...


உப்புக் கலந்த கடல் நீரும் கொதிப்பது அவளுடல்

ஒப்பக் கலந்து ஓளீவீசிட நிலைபெற்றது ஆகாயம்...


ஏற்றம் கொண்ட பேரழகும் மெல்ல தன் நிலையில்

மாற்றம் காணப் போக உலைப்பட்டது ஆகாயம்...


நாற்றம் கொண்ட நறுமலர்ப் பெண்மை வெப்பச்

சீற்றம் கொண்டு மாற மலைப்புற்றது ஆகாயம்...


பிண்டத்தில் இவ்வளவுப் பேரழகா என்று நாளும்

அண்டத்தில் சுருங்கி விரிந்து செல்கிறது ஆகாயம்...


கண்பார்த்து தோற்றிடும் அவளெழில் கண்டு முன்னே

விண்மீனும் நெருங்கி விலகிச் செல்கிறது ஆகாயம்...


கிண்ணத்து மதுவுண்ணும் மங்கையவள் அந்தி வான்

வண்ணத்து மேனியெனச் சிவந்து விடுகிறது ஆகாயம்...


எண்ணத்துள் ஏதோ ஒன்று நுழைந்து கொள்ளும் இந்தப்

பெண்ணுக்குள் தாதோ என விழுந்து விடுகிறது ஆகாயம்...







பொருள் விளக்கம்:

மூன்றில் ஒருபங்கு தான் பெண்மை - அறம், பொருள், இன்பம் - இந்த மூன்று,

பாவலர் - கவிஞர் மற்றும் புலவர்கள், வெதும்பி - வாடி, கொள்ளிடம் - குவியும் இடம்,

அனிச்சம் - ஒரு வகை மென்மையான மலர், தொனித்த - வெளிப்பட்ட,

கயல்விழி - மீன் போன்ற விழி, துயில் - உறக்கம், அஞ்சனம் - கண்ணுக்கு இடும் மை,

சஞ்சலம் - நிம்மதி இழந்த நிலை, சிகை - தலைமுடி, மப்பும் - இருண்ட மங்கலான நிலை,

ஒப்ப - ஒன்று போல, நாற்றம் - நறுமணம், பிண்டம் - உடல், அண்டம் - அகண்ட ஆகாயம்,

தாதோ - பூந்தாது (தேன்) அல்லது விந்து.

Saturday, December 19, 2015

இனிய திருக்கார்த்திகைத் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

உருவமற்ற நெருப்பை ஓர் அகலில் கொண்டு வந்து

உருவத்தைக் கொடுக்கும் தீபமெனும் ஒளிபொருந்திய

திருக்கார்த்திகைத் திருநாளை தீபத் திருநாளாக்கிய

பெருமையை நிலைநாட்டிட விளக்கேற்றிடுவோம்...



எண்ணெய் வார்த்து திரிகளிட்ட அகல் விளக்குகளை

திண்ணை எங்கும் வரிசையாக அடுக்கி காண்பவர்

கண்ணை மயக்கும் தீபமாக ஒவ்வோர் வீட்டிலும்

விண்ணை வெல்ல ஒளியாக ஏற்றிடுவோமாக...



உரசலில் உண்டாவது தான் நெருப்பாகும் - அன்பு

உரசலில் உண்டாவது தான் விருப்பாகும் - ஒளி

வருவதில் மறைவது தான் இருளாகும் - அதைத்

தருவதில் நிறைவது இறை அருளாகும்...



அடிமுடியைத் தொடாதவாறு உருவமற்ற ஒளியாகப்

பிடிபடாவண்ணம் தீப்பிழம்பாக மாறிய சிவனார் தான்

அருவமாய் அருள் வழங்கிய நாளே கார்த்திகைத் தீபத்

திருநாளாகும் அந்நாளில் மகா தீபத்தை வணங்குவோம்...



பாபங்கள் மறைந்திடவும் நெஞ்சில் எழும் கோப -

தாபங்கள் குறைந்திடவும் எஞ்சிய முன்னோர்கள்

சாபங்கள் அழிந்திடவும் பஞ்சில் எரியும் அகல்

தீபங்கள் ஏற்றிடவும் திருக்கார்த்திகைத் திருநாளில்...



நதிவெள்ளம் பெருகும் போது கடல்வெள்ளம் தோய்ந்துவிடும்

கடல்வெள்ளம் உருகும் போது மழைவெள்ளம் சேர்ந்துவரும்

மழைவெள்ளம் பெருகும் போது மரங்கள் கூட சாய்ந்துவிடும்

ஒளிவெள்ளம் பெருகும் போது மழைவெள்ளம் ஓய்ந்துவிடும்



வேலை போல் எரிகின்ற அகல் தீபத்தையும் அக்னி

ஜ்வாலை போல் எரிகின்ற மகா தீபத்தையும் தரிசித்து

காலை பொழுதில் எரிகின்ற செங்கதிரை உள்வாங்கி

மாலை பொழுதில் தெரிகின்ற நிலவை போலே மக்கள்

ஒளிமயமான வாழ்வினை அழகிய சிலை செதுக்கும்

உளிமயமான காலத்தை கடந்திட வாழ்த்துகிறேன்...





அனைவருக்கும்

இனிய

திருக்கார்த்திகைத்

தீபத்திருநாள்

வாழ்த்துக்கள்...

...நோய்க்கு மருந்தானாள்...

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைத்

தன் நோய்க்கு தானே மருந்து"

என்கின்ற வள்ளுவனின் குரலிலே

காதல் நோய்க்கு மருந்து என்னவென்று

அழகாக எடுத்துரைக்கிறார்...




உடல்பட்ட நோய்க்கு மருந்துண்டு பார்வைக்கு

உடன்பட்ட நோய்க்கு மருந்தவளே.

இதனைத் தழுவிய கவிதையே "நோய்க்கு மருந்தானாள்"...

அனைவரும் படித்து ரசிக்கவும்...




...நோய்க்கு மருந்தானாள்...


அவள் தந்த நோய்க்கு

அவள் தான் மருந்து -

அதையே தான் வள்ளுவனும்

அனுபவித்து முன்மொழிந்தான்...



கண் கொண்ட காதல் நோய்க்கு

பெண் கொண்டாள் மருந்து -


விண் கொண்ட வெண்ணிலவுக்கு

விடிவெள்ளியெனவே இருந்து...



பாரா மனதையும் கண்கலந்து

சேரா நோய்க்கும் அவள் தான் மருந்து

தீராக் காதலுக்கும் அவளுடைய

பேரால் வந்தது அன்பெனும் விருந்து



இதழ்களில் ஊறித் ததும்பும் என்

இதயத்துக்கு ஏற்ற அவளே மருந்து

அதரத்தையே பருகும் முத்தமெனும்

மதுரத்தை மோகங்கொள்ள அருந்து



இறையைக் காணத் துடிக்கும் என்

நிறையை பேணும் அவள் தான் மருந்து

இரையாகும் காதல் ச(ந்த)ர்ப்பத்தினை

இடைவிடாமல் துரத்தும் நானே பருந்து



குறைவில்லா அழகைக் கொண்டே

கொடுக்கின்றாள் எனக்கும் விருந்து

மறைவில்லா மனதைத் திறந்து

மயங்கவே தருகின்றாள் மருந்து...



கரையில்லா நதியைப் போலவே

கடல்காண ஓடுகின்றாள் புரண்டு

அரைநில்லா மேகலை தான் நழுவ

ஆடல்காணத் தேடுகின்றாள் திரண்டு...



சீரசைய சிறந்து விளங்குகின்ற இடையின்

தேரசைய நடமாடினாள் தன்னை மறந்து

நேரசைய திறம்படக் குலுங்கும் அழகின்

மாரசைய படம்காட்டினாள் மெல்ல திறந்து



ஆலையில் அகப்பட்ட கரும்பைப் போல

சேலையில் புகப்பட்ட எறும்பானது அவளது

மாலையில் அடைப்பட்ட அரும்பைப் போல

காலைவரை சிறைபட்டு துரும்பானது...



பூநிறையும் காட்டிற்குள் பூத்து விரிந்த

தாமரைக் கூட்டிற்குள் காற்றுக் கூடத்

தானுழையா வண்ணம் சேர்த்தணைத்து

மானுட வாழ்வை மகத்துவம் ஆக்கினாள்...



பாலாடை போன்ற பருவத்து மேனியில்

மேலாடையென அள்ளிக் கொடுத்தாள் விருந்து

நூலாடை கூட நழுவியதை மறந்தவளும்

தேனோடையில் ஈந்தாள் தேவாமிர்த மருந்து...



உரசலில் தொடங்கிய விருந்தும் உணர்வின்

நெரிசலில் அடங்கிய பின்னர் இடைவழியின்

அரசிலைத் தடவிய மருந்தும் புணர்ந்தபின்

பரிசலும் சிக்கிய சுழி போலங்கே உழன்றது...



அருந்தாச் சங்கிலே மதுவூரிய பின்னரே அதை

மருந்தாக்கி காதல் நோய்க்குட்பட்ட மனதுக்கு

வருந்தா உணர்வையும் மெய்யதிலே கலந்தின்ப

விருந்தாக அளித்தாள் விடைபெற்றது நோயும்...



அடைகாக்கின்ற கோழியைப் போலவே "அந்த"

விடைகாக்கின்ற ஊழியத்தைக் கண்டு அவளது

இடைத்தோன்றும் ஆழியில் நானும் அலைமீறும்

தடையேறிச் செல்லுகின்ற பாய்மரப் படகாவேன்...



நோய்க் கொண்ட உடலுக்கு மருந்தானாள் - மயங்கும்

பாய்க் கொண்ட உணர்வுக்கு விருந்தானாள் - முயங்கும்

வாய்க் கொண்ட பெண்மைக்கு மருந்தானேன் -வியந்துப்

போய்க் கண்ட அண்மைக்கு விருந்தானேன்...

இருளை விலக்கியதன் அருளை விளக்குவதே தீபாவளி

அரக்கனாகிய பௌமனை பூமாதேவி அழித்த திருநாளே

நரக சதுர்த்தி எனும் தீபாவளி திருநாளாகும் - துலாமில்

சூரிய சந்திரர்கள் கூடும் ஐப்பசியில் கதிரொளி குன்றுவதால்

நேரிய தீபங்களேற்றி வழிபடுவதும் தீபாவளி திருநாளாகும்...



பார்வதி தேவி தவமிருந்து தன்னுடலில் பரமசிவனை

நேர்பாதியாக்கிய பொன்னாளே தீபாவளி திருநாளாகும்

திருப்பாற்கடலை கடைந்த போது தன்வந்திரி பெருமான்

மருத்துவத்துக்கென்றே தோன்றியதும் தீபாவளியன்றே...



எண்ணையில் எழில்மிகும் மகாலக்ஷ்மியும்

கண்ணைக்காக்கும் அரப்பிலே கலைவாணியும்

குளிப்பதற்கான தண்ணீரிலே கங்காதேவியும்

ஒளிந்திருந்து தீபாவளியன்று ஆசீர்வதிக்கும்

சந்தனத்திலே பூமாதேவியும் மங்களமாய்

வந்தமரும் குங்குமத்தில் கௌரியும் உடுத்தும்

புத்தாடையிலே மகாவிஷ்ணுவும் வீற்றிருந்து

பூத்த மலர்களிலே மோகினியும் படைக்கும்

பண்டங்களிலே அமிர்தாம்பிகையும் ஒளிரும்

அண்டத்திலே தீபமாகிய பரமாத்மாவும் சேர்ந்து

நம்மை அருள்கூர்ந்து தீபாவளி திருநாளன்று

நன்மை பல பெற வைப்பதுவே சிறப்பாகும்...



சிறப்புமிகும் தீபாவளித் திருநாளை உறவினருடன்

பொறுப்புமிகும் உணர்வோடு கொண்டாடி மகிழ்ந்து

போற்றுவதோடு அனைவருடைய அகவிருள் நீங்கி

ஏற்றமிகு வாழ்வமைந்திடவும் வாழ்த்துகிறேன்...



ஆடைகளிலே பலவுண்டு புத்தாடை

அணிகின்ற நாளென்று சிலவுண்டு - அணியும்

ஆசையிலே பலவகையுண்டு அடையும்

ஆனந்தத்திலும் சிலவகையுண்டு - தீபாவளி



திருநாளிலே அணிவதன் சிறப்பு கண்டு அகத்

திருள் போக்கிடும் வழி கண்டு வாழ்விலே சில

திருப்பம் கொண்டு வானவில் வண்ணம் போல்

விருப்பம் கொண்டு வெடித்திடும் பட்டாசுகளும்



மத்தாப்பும் சிறுவர்கள் மயங்கிடும் பூத்திரிகளும்

முத்தாய்ப்பாய் கொளுத்தி மகிழ்ந்து கவனத்துடன்

இத்திருநாளைக் கொண்டாடிடவும் இல்லமெங்கும்

இருள்விலகி தீப ஒளி பரவிடவும் வாழ்த்துகிறேன்...



கலகம் பிறந்திடவே அரக்கனைப் படைத்தான் - அவனால்

கலக்கம் நிறைந்திடவே அதற்கோர் வழியைப் படைத்தான்

நரகம் அழிந்திடவே அவதாரம் எடுத்தான் - அம்பெய்தி

அரக்கனை ஒழித்திடவே அவ(ன்)தாரம் தொடுத்தாள்...



தேவியவள் தான் தவமிருந்து பரமனவன் உடலில்

ஆவியவள் சரி பாதியாக வேண்டுமென ஓர் நாளில்

சக்தியவள் விரும்பியதால் 'அர்த்தநாரி' எனும் ஓர்

யுக்திக்குள் சிவசக்தி ரூபமாகியது இந்நாளில் தான்...



ஒருவர் மகிழ்வதற்கே துறவு வைத்தான் - கூடி

இருவர் மகிழ்வதற்கே உறவு வைத்தான் - ஏற்றும்

தீபம் ஒளிர்வதற்கே இரவு வைத்தான் - அதற்கென

தீபாவளித் திருநாளை வரவு(ம்) வைத்தான்...



உடலும் மகிழ்ந்திடவே உணர்வை வைத்தான் - நாடும்

உள்ளம் மகிழ்ந்திடவே உயிரை வைத்தான் - ஆடும்

கடலும் மகிழ்ந்திடவே அலையை வைத்தான் - தேடும்

கண்கள் மகிழ்ந்திடவே அலைய வைத்தான்...



உறவும் செழித்திடவே பாசம் வைத்தான் - அன்பு

உலகம் செழித்திடவே நேசம் வைத்தான் - சிலையின்

உருவம் செழித்திடவே உளியை வைத்தான் - இருள்

உலகம் செழித்திடவே தீபாவளியை வைத்தான்...



முன்னோர்கள் மொழிந்து வைத்த திருநாளை

பின்னோர்கள் பெரிதுவக்க வைக்கும் பெருநாளை

அன்னார்கள் கூடி அனுபவித்ததன் வழிவழியாய்

இன்னார்கள் எடுத்து கொண்டதே தீபாவளியாகும்...



வேண்டுவன யாவும் நிறைவேறிடவும் மனதில்

வேண்டாதவை யாவும் கரையேறிடவும் இன்பகடலில்

நீந்துவன யாவும் நிறைவாகிடவும் இப்பூவுலகில்

நீத்தார்கடன் யாவும் குறைவாகிடவும் வாழ்த்துகிறேன்...



புறவிருள் போக்கிடும் ஒளியும் கண்டு

அகவிருள் போக்கிடும் வழியும் உண்டு

ஆழ்நிலை தியான வழியில் சென்று

சூழ்நிலை யாவும் உலகில் வென்று

வாழ்ந்திட வாழ்த்துகிறேன்...



இவ்வுடலுக்கு இருவிழிகள்

இரண்டிற்கும் இடைவெளியில்

திவ்வியமாய் இருள்விலக்கத்

திரண்டுநிற்கும் தீப ஒளி...


அவ்வொளி கொண்டே

அஞ்ஞானம் அழிந்திடவே

மேவிய ஒளியாலே

மெஞ்ஞானம் வளர்ந்திடவே

வாழ்த்துகிறேன்...



இத்தீபாவளி திருநாளில் இல்லமெங்கும்

புத்தாடைப் போலே புதுப்பொலிவு பூண்டு

மத்தாப்பு போலே மங்களவாய் மலர்ந்து

தித்திக்கும் பண்டங்களை பகுத்துண்டு



மாற்றம் காணும் மனிதரின் சூழ்நிலைத்

தோற்றம் கண்டு மனதளவில் பலமுறை

ஏற்றம் கொண்டு உழைப்பிலே நேர்மையின்

சீற்றம் கொண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்...



மேடும் பள்ளமும் உள்ளவரை இறைவனை

நாடும் உள்ளமும் உள்ளவரை இத்திருநாள்

வீடும் வாசலும் உள்ளவரை தீபாவளியை

தேடும் ஆசையில் செல்லும்வரை தொடரும்...



திரளாத மலருக்குள் ஏந்தும் தேனைப் போலே

மிரளாத கடலுக்குள் நீந்தும் மீனைப் போலே

பிறழாத மனதில் தோன்றும் ஆசையும் மெல்ல

பிறருக்கு உதவிட அரும்பட்டும் விரும்பட்டும்...



இரண்டே வரியில் சொல்லப் போனால்:


இருளை விலக்கியதன் அருளை விளக்குவதே தீபாவளி

அருளை விளக்கியதன் பொருளை வழங்குவதே தீபாவளி





அனைவருக்கும் 

என்

இனிய

தீபாவளித் திருநாள்

வாழ்த்துக்கள்...