Tuesday, January 27, 2015

...கலையாத இளமை...


கார் தழுவிய வானம் மண்ணில் விழுந்து

கரைந்திட துடிக்குமது போல் மண்ணில்

ஏர் தழுவிய கால்கள் வயல்-வரப்பின் மேல்

ஏறித் தழுவிடத் துடிக்குமது போல் கழுத்தில்

தார் தழுவிய நெஞ்சில் கொஞ்சம் அசைந்து

தான் உயரத் தழுவிடத் துடிக்கும் அவளின்

மார் தழுவிய மயக்கம் தணிக்க நானும்

மான் தழுவதலைப் போலத் தழுவி மெல்ல



கொடி இடையின் கொம்பெனவே முளைத்த

கரங்களை அணைத்து நாணத்தால் அவளும்

பொடி நடையில் பாம்பெனவே அசையும்

பொலிவினிலே என்னை மறக்கும் நேரமதில்

விடியும் வரை கலை பலவும் பயில - காலை

வரும் வரையில் எங்கே துயில - பயின்றது

முடியும் வரை முத்தெடுத்து நான் தொடுக்க



கொதித்து இருக்கும் அவளுடலை கொஞ்சம்

குளிர வைத்துப் பின் சூடாக்க அவ்வுடலில்

பதித்து இருக்கும் முத்தங்களை மறுபடியும்

பதியுமாறு கொடுத்து அவ்வழகை நான் ரசிக்க

விதித்து இருக்கும் மன்மதனின் கருணையை

விளக்க வேறோன்றும் வேண்டாமல் நனைந்து

நொதித்து இருக்கும் உணர்வோடு ஒன்றாகி

நுட்பமாகக் கலந்தின்பம் தாண்டாமல் அடுத்து



உள்ளமது பூரித்து பொங்கியது விரிந்து பூமடலில்

உள்ள-மது குடித்துக் களித்து மீண்டும் பூவுடலில்

உள்ள-மது சிந்தாமல் பூவிதழை மடித்து சுகித்த

உள்ளமது உருகி பூவிதழை நனைத்த சுனையில்

வெள்ளமது உருவாகி உணர்ச்சிப் பெருக்கோடு

துள்ள-மது ஓடுகின்ற ஓடை நோக்கிப் பாயும்

பள்ளமது தெரியாமல் நதியெனவே தோய்ந்துப்

பண்பட்ட கலவிக் கடலிலே கலந்து ஆசையும்



அலையாகிப் பழகும் கரையின் மீது மோதி

அலைந்து நாளும் இன்பம் நல்கிக் கவின்று

நிலையாகிடப் படகும் ஆடுவதைப போலே

நின்றும் அசைந்தும் நன்றாய் ஆடிக் களித்து

சிலையாகிய அழகினிலே நீராடிப் போராடி

சிருங்காரப் பேரழகின் அறுபத்து நான்கு

கலையாகிடத் துடிக்கும் ஊடலும் கூடலும்

கலையாத இளமையை அழைக்கின்றது...



அழைத்த இன்பத்தை இடையில் வைத்து

அதிரூப தனத்தை உடையில் பொதிந்து

நுழைத்த வண்ணம் நடையில் தைத்து

நுடங்கும் இளமைக் கடையில் மறைத்து

விழைத்த அழகும் சிறுமடையில் பொங்கி

விருப்பம் போலே விடையைக் கொடுக்க

சழைத்த உடலில் உதரம் விழுந்து தங்கி

சற்றே திரண்டு கருவாய் விழைகின்றது...



கருவும் மெல்ல கவியாய் வளரக் காலம்

கனியும் என்றே காவல் கொள்ள அதன்

உருவும் நல்ல கவிழ்ந்து வளர மேலும்

உணர்வும் கொஞ்சம் புறத்தில் தெரிய

மருவும் உடலும் உருவம் கலைந்து

மயக்கம் வந்து மனதில் கொள்ளத்

திருவும் மகவாய் உதிக்கப் பையும்

திறந்து பயன் அடையும் இளமை...




கலையா இன்பம் மறையாதிருக்க

நிலையா வாழ்வில் குறையாதிருக்க

அலையா மனதும் நிறைவோடிருக்க

கலையா! என்றே பறையாதிருக்கக்


கலையும் இளமையும் மறையும் மெல்ல

இலையும் வளமையும் சருகாகும் செல்ல

நிலையும் வந்தடையும் - காலம் சொல்லா

விலையும் தந்தடையும் உயிர் ஒன்றுக்கே!!!



குடமும் கூட கும்பமானால் தலைக்கேறும்

இடமும் நீர் எடுக்க நேர்ந்தால் இடைக்கேறும்

படமும் நிழற் பிம்பமானால் தரைக்கேறும்

தடமும் பதிய நடந்தால் காலக் கடைக்கேறும்...

அன்னக் கொடியாம் தைமகளை அனைவரும் வரவேற்போம்...


ஆடியிலே விதைத்த சம்பா நெல்லும் மெல்ல

ஆவணியில் முளைவிட்டு கதிரோன் ஒளிபெற்று

புரட்டாசியிலே புத்துயிர் அடைந்திட வருகின்ற

ஐப்பசியில் மழைநீரை ஈர்த்து கொஞ்சம் அசைந்து

கார்த்திகையில் கதிர்விட்டு மண்குளிரும் பனியில்

மார்கழியில் நனைந்து அறுவடைகலம் புகுந்து

தைத் திங்கள் முதல் நாளில் பொங்கலாகும்...



உழவனின் கைபட்டு ஏர் கலப்பைக் கால் பட்டு

பழகும் மண்ணின் மணத்தோடும் குணத்தோடும்

கதிரவனின் ஒளிபட்டு கதிராய் நாளும் வெளிப்பட்டு

அதுவும் ஓர் நாளில் அறுவடையாகி எல்லோர்


பசியும் போக்கிட உள்ளோர்க்கு உணவாகி அதனை

புசிக்கும் வழி இல்லார்க்கு கனவாகி காணும் உலகில்

நசியும் பஞ்சமும் வறுமையும் இல்லா வளம் காண

வசிக்கும் யாவர்க்கும் வேண்டும் பொங்கலாகட்டும்...



கழிப்பதெற்கெனத் தோன்றும் போகியிலே பழையனவை

அழித்து நம் இல்லத்திலும் உள்ளத்திலும் நல்லுணவும்

பொங்கியதோடு நல்லுணர்வும் வளர்ந்து அனுதினமும்

தங்கியதோடு இன்பமும் நிலைத்து நின்றிட வேண்டும்...



புதுப் பானையில் பொலிவோடு பொங்கிய அரிசிக்கு

மதுரம் தந்திடும் வெல்லமென உள்ளமும் பொங்கி

அடிப்பாகத்தில் இனிக்கும் கரும்பாகி தைத்திங்களின்

அடிதொட்டு தொனிக்கும் யாவும் நலமாகிட வேண்டும்...



மாடுதனை ஆட்டுவித்து ஏரதனை நிலைநிறுத்திப் பயிரிட்ட

காடுதனில் விளைந்த நெல்லெடுத்து பொங்கல் படையலிட்டு

வாயில்லா உயிரினத்துக்கும் வாய்ப்பதனை உருவாக்கி

நோயில்லா நலம் வாழ நன்றியதனை செலுத்திட வேண்டும்...



விரும்பிய ஆடவனை மணந்திடவும் விருப்பம் போலவே மனம்

அரும்பும் ஆடவன் மனையாள வாய்த்திடவும் கன்னியர்கள் தாம்

காணும் பொங்கலிட்டு பகிர்ந்து உண்டவர்க்கும் கண்டவர்க்கும்

நாணும் வண்ணம் நலம் தைத்திங்கள் முதல் கூடிட வேண்டும்...



மதுவிருக்கும் மலர் போலே உள்ளம் மலர்ந்து

அதுவிருக்கும் நலத்தோடும் உள்ளம் மகிழ்ந்து

பொதுவிருக்கும் குணம் தனிலே உள்ளம் நெகிழ்ந்து

எதுவிருக்கும் இல்லையென்றாலும் நன்றாகட்டும்...



நதியிருக்கும் கரை போலே நாளும் பாதை வகுத்து

மதியிருக்கும் மனதோடு நல்லவற்றைத் தொகுத்து

விதியிருக்கும் துணையோடு மாலை தொடுத்து நற்

கதியிருக்கும் பதினாறு பேறும் வந்தடையட்டும்...



விழியிணைக்கும் காட்சிதனை செயலாக்க அன்பு

மொழியணைக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி

பழியனைத்தும் மறந்து வாழ நாளும் செல்லும்

வழியனைத்தும் திறந்து நன்றே என்றாகட்டும்...



உளி மறைத்த உருவம் போலே எண்ணமும்

வெளித் தெரியா வண்ணம் தோன்றி வான்

வெளி மறைத்த நிலவாய் ஒளி வீசி உள்ளம்

களித்திடும் இன்பம் அன்றாடம் உண்டாகட்டும்...



அமிழ்தினும் இனிய நாளாம் பொங்கல் திருநாளை

தமிழர் தம் பெருவிழாவாக தரணியெங்கும் தைத்திங்கள்

உமியில் உதிர்ந்த நெல்லை உணவாக்கி படையலிட்டு

உமிழ்ந்திடும் கதிர்க்கு நன்றியோடு கொண்டாடுவோம்...



தை மகள் பிறந்ததிலே தரணியிலே கதிரவன் தன்

திசை மாறிப் பயணிக்கும் போது வானிலையும் அந்தத்

தை மகளை வரவேற்க மார்கழியின் குளிர் கொடுத்த

திங்கள் கடந்ததை பொங்கலோடு கொண்டாடுவோம்...



வீரத்தின் விளைநிலமாம் தமிழர் களத்திலும் உளத்திலும்

தீரத்தின் அடையாளமாய் விளங்கும் ஜல்லிகட்டோடு

ஓரத்தில் நின்று ஒதுங்காமல் மல்லுகட்டும் மாடுகளோடு

பாரத்தைச் செலுத்தி அடக்குவதே திறமையன்றோ!!!



பொட்டிட்ட மங்கையரும் பூவணிந்த பாவையரும்

கட்டுண்ட நாணம் மறந்து கண்டு மயங்கி வீட்டில்

கட்டிட்ட மாட்டுக்குத் தான் எத்தனை வீரமதிலே

கட்டுண்ட காளைமீது தன் கவனம் ஈர்க்குமன்றொ!!!



கன்னக் குழியிரண்டில் கவின்மிகு நகையும் மறைந்திருக்க

பின்னற் சடைதனிலே பூச்சுடியப் பேருவகை ஒளிந்திருக்க

மின்னற் கொடி இடையசையும் மெல்ல மயில் நடனம்புரிய

அன்னக் கொடியாம் தைமகளை அனைவரும் வரவேற்போம்...



மார்கழித்த மயக்கம் தணிக்க விண்ணில் இருந்து கதிரவனும்

பார்களித்து இன்புறவே ஒளிவீசிய பக்குவத்துக்கு நன்றி கூற

ஊர்கூடி பொங்கலிட்டு உவகையிலே மங்களம் பாடியிங்கு

தார்சூடிய தைதிங்களிலே தமிழர் நாம் கொண்டாடுவோம்...





-தை மகளை வரவேற்போம் - அத்

-தை மகளை வரவேற்று பல வித்

-தை நலம் பெற்றும் ஆயகலை மெத்

-தை சுகம் பற்றியும் தூய மனம் தத்

-தை இறகு போலவே பறக்கட்டும்...

மிதக்கும் வரை தான் படகு - மிதக்க விட்டே தான் பழகு...



அன்பிற்குரிய மனையாளுக்கு வணக்கம் - உன் மேல்

என்புதோல் கடந்த உள்ளத்தின் இணக்கம் - நீ அன்று

பிறந்த போது எனக்கெனவே பிறந்தாய் - என் மனம்

திறந்த போது உனக்கெனவே புகுந்தாய்...


புகுந்த உள்ளம் தனில் அன்று தொட்டு இன்று வரை

மிகுந்த அன்பால் என்னை திளைக்க செய்தாய் - கரை

காணா கடலில் அக்கறையாய் என்னுள் கலந்து மறை

தோணா வேதமாய் என் வாழ்வை மாற்றினாய்...


மாற்றியது மாலை மட்டுமன்று - எனை இன்றும்

மாற்றுவது உன் சேலை மட்டுமன்று - அன்பு வழி

காட்டியது அதி காலை மட்டுமன்று - நீ என்றும்

காட்டுவது நதி நாளும் சேரும் கடலன்றோ?


நதி நாளும் சேர்ந்த கடல் போலே நீயும் நவ

நிதி யாவும் சேர்ந்த உடலன்றோ பொன்னுடலை

விதி ஆளும் தினம் பார்த்து பூமடியில் அன்று

ரதி யாய் நீயும் அவனியில் அவதரித்தாய்...


அவதரித்தாய் நீயும் அன்று - உன்னை ஈன்றதனால்

அவள் தரித்தாள் தாயாக - சேயாக நீ வளர்ந்த பின்

யுவதியாகி என் மனதில் குடி கொண்டாய் - இன்றோ

அவதிக் குள்ளாகிறது மனது உனைச் சிறிது பிரிந்தால்...


பிரிந்த இதழ்கள் தாம் பிரிந்த உள்ளங்களை இணைக்கும்

விரிந்த இதழ்களைப் போலே நாளும் நறுமணம் வீசி நான்

புரிந்த வரையில் என் மனக் கோட்டையிலே ன்னாட்சியை

தெரிந்த வரையிலே பிடித்தது உனைத் தவிர யாருமுண்டோ...?


வருடம் தோறும் வசந்தம் நாம் வசிக்கும் வாசல் தேடி

நெருடல்கள் ஏற்படுத்தி தருவதோடு நில்லாமல் நாடிய

ஆருடம் தோற்கும் வண்ணம் அமையும் வாழ்விலே

தேரிடம் அமர்ந்த தெய்வமென அவதரித்தாய் அல்லவா...


நாரோடு பூவை போலே நாமும் நட்டு வைத்த பூஞ்செடியின்

வேரோடு நீரைப் போலே கலந்தின்பம் கண்டு மகிழ்ந்து

பாரோடு பகல் மறையும் மீனைபோலவே ஒளி வீச நானன்று

தாரோடு கைப் பிடித்த நாளைத் தான் மறக்க முடியுமா...?


முடியும் என்றே நம் வாழ்வும் தொடங்கி இன்று வரை

விடியும் என்றே நம்பிக்கையுடன் கடந்த நாட்களில்

படியும் அன்பினை எடுத்தியம்பி உள்ளம் நிரம்பி

வடியும் வரை வாழ்வைச் செலுத்துவோம் என்றும்...


என்னவளுக்கு எனை மணந்த

தென்னவளுக்கு புதுமை தந்த

மன்னவனுக்கு பெருமை அளித்த

அன்னவளுக்கு பிறந்த நாள் மிகுந்த

மகிழ்ச்சியைத் தந்திட வேண்டும்...


மிதக்கும் வரை தான் படகு - வெள்ளத்தில்

மிதக்க விட்டே தான் பழகு - உள்ளத்தில்

மிதக்கும் கரையின் முன்பு - என்றும்

மிதக்க தோன்றும் அன்பு...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...



செண்டாடிய பொழுதுகளை வண்டுகள் மறந்தாலும்

திண்டாடிய பொழுதுகளை காலத்தால் மறந்தாலும்

கண்டாடிய நினைவுகளை கவனம் தான் மறைத்தாலும்

கொண்டாடிய பொழுதுகளை உள்ளம் மறப்பதில்லை...



ஓராயிரம் நினைவுகளோடு புத்தாண்டும் தொடங்கிப்

பாராயிரம் வழிகளில் நாம் பகுத்துண்டு நடந்தாலும்

ஈராயிரத்துப் பதினைந்தாம் ஆண்டும் தொடங்கட்டும்

நாராயிரத்துப் பூக்களின் மாலையெனவே மாறட்டும்...



நில்லா உணர்வுகளின் கடிவாளத்தைப் பிடித்ததன்

பொல்லா நினைவுகளை ஓரிடம் நிறுத்தியதோடு

வல்லா நிலையாக வாழ்க்கையின் பாதையிலே

எல்லா வளமும் பெற்று இன்பமுற வாழ்த்துக்கள்...



மண்ணில் ஊறிய நீரைப் போலவே மகிழ்வதை

எண்ணில் தோன்றிடும் நினைவுகளால் நெகிழ்ந்து

கண்ணில் ஏறிய காட்சிகளைக் கருத்தொருமித்த

பெண்ணில் கண்டு ஆனந்தமடைய வாழ்த்துக்கள்...



கோடுகள் நேர்நின்றால் கோலமாவதில்லை அதனால்

கொஞ்சம் வளைந்து கொடுத்துப் பயணித்து பள்ளம்

மேடுகள் தன்னைக் கடந்த பாதையைக் கோலமாக்கிய

நெஞ்சம் நிலைத்துப் பூமியில் வாழ்ந்திட வாழ்த்துக்கள்...



உளியில் தோன்றாத அழகை உள்ளமதில் நேர்நிறுத்தியக்

களிப்பில் தோன்றிய சிலையின் உருவம் போலவே வான்

வெளியில் தோன்றாத புதுத் தாரகையாய் உருப்பெற்று அன்

பளிப்பாய் தோன்றிய வாழ்கையை அமைத்திட வேண்டும்...



கடந்த ஆண்டில் தொட மறந்ததையும்

நடப்பு ஆண்டில் கை விட்டதையும்

நடக்க இருக்கும் புதிய ஆண்டில்

தொட்டிடவும் தொடர்ந்திடவும்

வாழ்த்துக்கள்...



எண்ணியது யாவும் நடந்திடல் வேண்டும்...

பண்ணிய செயல்கள் பயன்பெற வேண்டும்...

திண்ணிய நெஞ்சம் தினம் தினம் வேண்டும்...

கண்ணியமாய் வாழ்வைக் கடந்திடல் வேண்டும்...



நாளுக்கு நாள் நன்மையைத் தேடிட வேண்டும்...

நன்மைக்குள் உண்மையை நாடிட வேண்டும்...

உண்மைக்குள் பெண்மையைத் தேடிட வேண்டும்...

பெண்மைக்குள் அன்பின் தன்மையை நாடிட வேண்டும்...



இருண்டு விடிவதல்ல விடியல் - உழைத்துக் கொண்டு

இருக்கும் கைகளின் பிடியில்...

விழுந்து ஓடுவதல்ல வெள்ளம் - விடா முயற்சியால்

எழுந்து ஓடுவதன்றோ உள்ளம்...

Tuesday, June 3, 2014

தலைவியின் துடிப்பு



வண்டது தேன் குடிக்கும் போதே இதழ்களால்

கண்டதை தான் மூடியிருக்கலாம் - தலைவியவள்

மறந்து மயக்கத்தில் ஆழ்ந்த போது வண்டது

பறந்து போனதைக் கண்டு துடிக்கின்றாள்...




தொட்டது உடல்தனிலே துலங்கும் முன்னே கைவிடப்

பட்டது மடல்தனிலே விளங்கும் பின்னே - கைதொடச்

சுட்டது உணர்வுக்குள் கலங்கும் - முன்னே மெய்தனைத்

தொட்டது நினைவுக்கு விளங்காமல் துடிக்கும்...




தலைவனை நினைத்து உதிரும் கண்ணீர் துளிகள் எத்தனையோ?

தலையணைக்குள்ளே காணாமல் போகின்றது அத்தனையும்...

இலைமறை காய் போலே எதிர்பட்ட நினைவுகள் எத்தனையோ?

வலைக்குள்ளே சிக்கிய மீனைபோலே துடிக்கின்றது அத்தனையும்...



ஆடைகூட பாரமாகித் தூரமாகிய வண்ணங்கள் எத்தனையோ?

தேடையிலே உணர்வுகளில் ஒளிந்து கரைகின்றது அத்தனையும்...

கூடையிலே கொட்டிய பூக்களில் விடுபட்டது எத்தனையோ?

ஓடையிலே தொடுக்காமல் கை விடப்பட்டது அத்தனையும்...



காலையிலே கதிராய் உதிக்கின்ற ஆவல்கள் எத்தனையோ?

மாலையிலே நிலவாய் வளர்ந்து தேய்கின்றது அத்தனையும்...

சோலையிலே ஒளியில் ஊடுருவுகின்ற நிழல்கள் எத்தனையோ?

பாலையிலே கானலாய் ஒளியில் மறைகின்றது அத்தனையும்...



மேகமது மழை பொழியாமல் கலைகின்றது எத்தனையோ?

தாகமதைத் தணிக்காமல் தொலைகின்றது அத்தனையும்...

மோகமது உணர்வாய் விரிந்து விரும்பியது எத்தனையோ?

தேகமதைத் தீண்டாமல் பிரிந்து சுருங்கியது அத்தனையும்...



தடையகற்றி தவிப்பகற்றிய பொழுதுகள் எத்தனையோ?

இடைமெலிந்த இடைவெளிக்குள் விழுந்தது அத்தனையும்...

மடை திறந்த வெள்ளம் போலே பெருகியது எத்தனையோ?

கொடை கொடுத்த உடல்தனிலே உருகியது அத்தனையும்...



Thursday, April 17, 2014

மையலாய் நானும் உதிப்பேனா...?



ஜயத்தில் தொடங்குது ஆண்டும்

ஐயங்கள் தீர்ந்திடவே தூண்டும்

மையத்தைத் தொடர்ந்து ஈண்டும்

வையத்தில் வாழ்ந்திட வேண்டும்...

 
 
 
படிக்கின்ற காலம் தான் பொற்காலம் - கடந்த பின்

நடிக்கின்ற காலம் தான் தற்காலம் - உணர்வுகளைப்

பிடிக்கின்ற காலம் தான் இக்காலம் - உள்ளந்தனில்

வடிக்கின்ற காலம் தான் எக்காலம்...?


 
விதைக்கின்ற காலம் தான் பொற்காலம் - நடந்த பின்

கதைக்கின்ற காலம் தான் தற்காலம் - வந்தததைக் கண்டு

பதைக்கின்ற காலம் தான் இக்காலம் - வேண்டாததைப்

புதைக்கின்ற காலம் தான் எக்காலம்...?


 

உழைக்கின்ற காலம் தான் பொற்காலம் - விருப்பங்களில்

திழைக்கின்ற காலம் தான் தற்காலம் - வார்த்தைகளைக்

குழைக்கின்ற காலம் தான் இக்காலம் - திருப்பங்களை

அழைக்கின்ற காலம் தான் எக்காலம்...?



குறைக்கின்ற காலம் தான் பொற்காலம் - இருப்பதை

மறைக்கின்ற காலம் தான் தற்காலம் - பொருட்களை

நிறைக்கின்ற காலம் தான் இக்காலம் - கருணையை

இறைக்கின்ற காலம் தான் எக்காலம்...?



நகைக்கின்ற காலம் தான் பொற்காலம் - உள்ளதை

வகைக்கின்ற காலம் தான் தற்காலம் - மயக்கத்தில்

திகைக்கின்ற காலம் தான் இக்காலம் - சோம்பலைப்

பகைக்கின்ற காலம் தான் எக்காலம்...?

 
 
எண்ணங்களை வடிப்பேனா...?

எண்ணியதில் துடிப்பேனா...?

வண்ணங்களைப் பிடிப்பேனா....?

வாழ்வுதனில் படிப்பேனா...?


 
விரும்பியதைப் படிப்பேனா....?

விரும்பாததில் நடிப்பேனா...?

அரும்பியதை வடிப்பேனா...?

நெருங்கியதைப் பிடிப்பேனா...?



மையப் புள்ளியில் விதிப்பேனா...?

இயல் இசையை மதிப்பேனா...?

ஐய வருடந்தனை துதிப்பேனா...?

மையலாய் நானும் உதிப்பேனா...?



 
ஜய வருடத்தின் இனிய உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள்...



சுயமாய் எடுத்த முடிவுகளில் முயன்று வெற்றி காணவும்

நயமாய் வார்த்தைகளைப் பயின்றதைப் பற்றிப் பேணவும்

வயமாய் தொடுத்த பணிகளை விட்டு விடாமல் தொடரவே

ஜயமாய் வருடமும் சித்திரையில் அடியெடுத்து வருகின்றது...

Saturday, December 14, 2013

மோக உலகம்...




இரவின் வெளிச்சம் இது

இரவல் வெளிச்சமாகும்...




மோக உலகம்...


மதுவில் மனதும் கரைந்தோடும் - அந்த

மனதும் உணர்வின் கரைதேடும் - ஆடித்

ததும்பும் இன்பமும் நிறைந்தாடும் - அந்த


தருணத்தில் மரணமும் மறைந்தோடும்...



பிறந்ததற்கு அர்த்தம் காணப் பல வழிகளுண்டு பூமியிலே - மனம்

திறந்ததற்கு அர்த்தம் பெண்மையின் மொழியிலுண்டு - தினம்

மறந்ததற்கு அர்த்தம் காணும் விழிகளுண்டு பூவையின் - இனம்

சிறந்ததற்கு அர்த்தம் சேர்க்கும் நடனத்தின் களிப்புமுண்டு...



பம்பரமாய் சுழன்று ஆடும் பெண்களும் - அதனையும்

மும்முரமாய் கண்டு ரசிக்கும் கண்களும் - அத்தனையும்

அம்பரத்தில் இழுக்கும் அலைகளும் எனப் பூவையரும்

அம்பலத்தில் சுழன்று ஆடும் கலைகளும் தான் என்னே!


மோக உலகமா - பெண்ணழகின்

தேக உலகமா - கண்ணழகின்

போக உலகமா - மண்ணழகின்

தியாக உலகமா - துபாய் நகரம்...?



எண்ண எண்ணச் சலிக்காத அழகின் கூடமா - அதனை

எண்ணி எண்ணிப் பொலிவாகப் பழகும் பாடமா - மனதும்

தின்ன தின்னத் திகட்டாத தேமதுரப் பண்டமா - உணர்வும்

பின்ன பின்னப் புகட்டும் மதுவும் மயக்கத்தின் கண்டமா?



இடுப்பை அசைக்கிறாளா - தள்ளாடும் படகில் மனதை வைத்துத்

துடுப்பை அசைக்கிறாளா - மயக்கம் அளிக்கும் கிண்ணத்து மதுவின்

கடுப்பை அசைக்கிறாளா - கொள்ளை அழகின் இடையில் மறைக்கும்

உடுப்பை அசைக்கிறாளா - உணர்வின் தடுப்பை அசைக்கிறாளே...!



ஓடையின் வெள்ளத்து அசைவில் ஆடும் நிலவினைப் போலவே

ஓடுகின்ற நாடித் துடிப்பினைத் தேடும் உணர்வினைப் போலவும்

வாடையின் போது மழையிலே ஆடும் மலர்களைப் போலவே

வானத்து விண்மீன்களென சிமிட்டும் ஒளியினைப் போலவும்

மேடையின் அருகிலே மேயும் கண்களுக்கு விருந்தாகவும்

மேம்பட ஆடுகின்ற மங்கையவள் தானும் அணிந்திருக்கும்

ஆடையின் அழகை மெருகூட்டும் ஆட்டத்தின் அழகோடு

ஆசையைக் கலந்து ஆவலோடு தருகின்றாள் அரங்கத்திலே...



மழை வரும் போது தடுப்பதற்காகவே

குடை விரித்தாலும் நனைவதைப் போலவே

மனதையறிந்து இன்பம் கொடுப்பதற்கே

கடை விரிக்கின்ற மங்கையவளும் அதனை

பிழை எனக் கொள்வதில்லை தன் மனதுக்கு

தடை விதித்து உடலுக்கு உடை கொடுத்து

விழையும் சுகத்துக்கு விடை கொடுக்கவே

விருப்பம் மேலிடும் திருப்பம் கண்டிடவே

அழைக்கும் உருவத்திற்கும் பணத்திற்கும் தான்

அடைந்த பருவத்தையே வழங்குகிறாள்...




வில்லினில் இருந்து புறப்படும் அம்பைப் போலவே அவள்

சொல்லினில் இருந்து புறப்படும் வம்பை அறியாத பலரும்

கல்லினில் அகப்பட்ட தேரையைப் போலவே ஒளிமறையும்

அல்லினில் அகப்பட்டு தேவியரைத் தேடிக் கூடுகின்றனர்...



காந்தப் புயலில் சிக்கிய இரும்புத் துகள்களைப் போலவே

காணும் கண்களில் விரும்பி ஆடும் நகல்களை தாமும்

ஏந்தப் போராடும் எண்ணத்தில் மதுவேந்திய கிண்ணத்தில்

எதிர்ப்பட்ட மயக்கத்தில் அசலை மறந்த ஈசலாகின்றனர்...




மதுவுடன் கலந்த வெள்ளத்தை பிரிக்க முடியாததைப் போலவே

மாதிடம் கலந்த உள்ளத்தைப் பிரிப்பதென்பதும் இயலாததாலே

அதனுடன் கலந்த நடனத்தில் தொலைந்த மனதையும் தேடுவது

பாதியாய்க் கலந்த பின்னே மீண்டு வருவதென்பது இயலாததாகும்...



ஆணையிடும் அதிகாரத்தில் பணி அமர்ந்தாலுமே ஆடுமந்த

வீணையிடம் எவனும் மறுபடியும் மீட்டிடவேத் தேடுமந்த

கண்ணிடம் கொண்ட நடனத்தின் எழிலை ரசிக்கக் கூடுமந்த

பெண்ணிடமே வருவான் வந்த வழியினை தானும் மறப்பான்...




மெல்லினமா - மங்கையவளும் பனித்துளி வந்து அமரும்

புல்லினமா - நங்கையவளும் மழைத்துளியில் சிறகுலர்த்தும்

புள்ளினமா - என்கையிலேந்தும் தனித்துளி ததும்பிச் சிந்தும்

கள்ளினமா - இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையினமா...?



பள்ளத்திலே வீழாத வெள்ளமுண்டோ - உண்டால் மதுவெனும்

வெள்ளத்திலே மயங்காத உள்ளமுண்டோ - கண்டால் மங்கையவள்

அசைவினில் ஆட்டத்தின் எல்லையுண்டோ - வண்டால் மலர்களுக்கு

இசைவதால் தேனுண்ணும் இதழ்களுக்கும் தொல்லையுண்டோ...?



இரவை மறைக்க மென் மங்கையவள் இடையாடுகிறது - அங்கவனின்

உறவை மறைக்க பணமும் மனமும் நடைபோடுகிறது - அங்கவளின்

வரவை நிறைக்க தன் பங்கையளித்து விடைதேடுகிறது - கூடுவிட்டுப்

பறவை இன்ப வானில் பறந்து கடைதேடுகிறது வெளிச்சத்தை நோக்கி...



வந்த வழி பார்க்கத் துடிக்க ஓருலகம்

அந்த வழி தேடி அலையும் பேருலகம்

எந்த வழி இன்பம் என்ற போக உலகம்

தந்த வழி தேடி அலையும் மோக உலகம்...



சுருங்கி விரிவது மதுவருந்தும் இதயம் மட்டுமல்ல - அங்கே

சுருங்கி விரிவது மங்கையவள் சதையும் தான் - கொதி நீரை

நெருங்கிப் பிரிவது நெருப்பு மட்டுமல்ல - அவளது மாரை

நெருங்கப் பிரிவது விருப்பும் தான் - இரவின் பொறுப்பும் தான்...



தேடையில் கிடைக்காத அழகெல்லாம் ஒன்றுகூடி அவள்

ஆடையில் அழைக்கின்ற அற்புதமாய் நன்றுகூடி அந்தரங்க

மேடையில் தேடுகின்ற நாட்டியத்தில் வென்றுகூட அவள்

சாடையில் அழைக்கின்ற நாடகத்தின் முடிவை யாரறிவார்...?



கடலில் இருந்தே அலைகள் தோன்றுகின்றன - அவள்

உடலில் இருந்தே கலைகள் தோன்றுகின்றனவோ?

கடற்கரை வந்து நின்றால் காலை இழுக்கின்றன அலைகள் - அவளின்

உடற்கரை வந்து சென்றால் ஆளை இழுக்கின்றன கலைகள்...

பாறையிலே மோதும் அலைகள் நுரையைத் தருகின்றன - அவளின்

பாதையிலே மோதும் கலைகள் நடனத்தைத் தருகின்றன...

மீன்களின் இருப்பிடமோ கத்தும் கடல் - கலை

மான்களின் இருப்பிடமோ அவளின் உடல்...

பொங்கி விழுவது அலைகடலின் கலைகள் - மனம்

ஏங்கித் தழுவுதல் அவளுடலின் நிலைகள்...

தீவுகள் தோன்றுவது மணற்திட்டால் - பல

நோவுகள் தோன்றும் அவளை மணந்திட்டால்...



அத்தனையும் தன் வசப் படுத்தும்

ஆற்றல் கொண்டது அலைகடலின் நிலைகள்...

பித்தனையும் தன் வசப் படுத்தும்

ஆற்றல் கொண்டது அவளுடலின் கலைகள்...

எத்தனையும் அதன் வசப் படுத்தியே

எள்ளி நகையாடுவது அவள் நடனக் கலைகள்...



மது அருந்த அருந்த மயக்கமும் தான் வந்தது -

மணம் பரப்பப் பரப்ப பூவைக்குள்ளும் தேன் வந்தது...

அது இருந்த போதும் இவையெல்லாம் ஏன் வந்தது -

அவரவர் விதியே என்று அவ்விடத்திற்கு நான் வந்தது...



ஆடற்கலைக்கு அவள் மலர்ந்தவளோ - சித்திரக்

கூடற்கலையில் மெய் கலந்தவளோ - சிந்தனையின்

தேடற்கலைக்கு அவள் வளர்ந்தவளோ - பள்ளிக்

கூடற்கலையில் கை தேர்ந்தவளோ...?



எண்ணியது எல்லாம் உள்ளத்தில் நிறைவேறிட

கண்ணிமைக்குள்ளே கனவுலகைக் காணுங்கள்...




பொருள்:

அம்பரம் - கடல், அம்பலம் - சித்திரக் கூடம், கடை - பெண்ணின் மறைவிடம், அல்லினில் - இரவினில்.